Tuesday, 24 July 2018

இன்மை இதழ் - 2015 ஜனவரி

துளியும் கடலும்







எவ்வளவுதான் நீவினாலும்
சரி செய்ய முடியாத
பழந்துணியின்
சுருக்கங்களைப் போல
வருத்தங்களால்
சோர்ந்துவிட்ட வுன்
மனதை மாற்ற
வழி அறியாது
குழம்பி நின்றவன்
உரையாடலின் நடுவே
அபத்தமாக எதுவோ
சொல்லி வைத்தேன்
நிழல்கள் கலைய
சட்டென்று வெளிச்சமான
முகத்துடன்
கண்களை தழைத்தபடி
சிரிக்கத் தொடங்கினாய்
நிமிடத்திற்கும் மேலாக
நீடித்த சிரிப்பில்
புரையேற உன்
விழியோரத்தில் திரண்டது
ஒருதுளி நீர்
தொட்டு அதைத்
துடைக்க முடியாத தவிப்பில்
எனக்குள் அப்போது
வெட்டுண்டு தவித்தது
ஒரு கை
உதிர்ந்தும் உலராத
அந்த வொரு
துளியால்
தளும்பிக் கொண்டிருக்கிறது
இப்போதுமென் கடல்

வளர்ப்பு மிருகம்

பால் குடிப்பதற்காகவோ
எலிகளைப் பிடிப்பதற்காகவோ
அல்லகடவுள்
பூனைகளைப் படைத்தது
இதந்தரு
மடியிலிருந்தபடி
 விரல் தொடுகைக்கு
பட்டின் மென்மையை
உணரத்தரும்
சருமத்தின்
மிருதுவினின்றும்
மீளவியலாது
கை ஆழப்புதைகையில்
மெல்லக் கனவிலாழும்
பெண்களின் கண்களில்
மினுங்கும்
அந்தப் பொன்னொளிர் திட்டுகள்
ஆடவர் நாம்
ஒருபோதும் காணவியலாத
சுவர்க்கத்தின்
ஒளிநிழலாட்டங்கள்

மழையற்ற மழை

நான்
மட்டும்
நனைகிற
மழை
மழையாகவே
இல்லை
அதில்
குளிர் இல்லை
ஈரம் இல்லை
கசியும் 
கருணை இல்லை
மறைந்த ஒன்றை
உயிர்ப்பிக்கச் செய்யும்
மந்திரமும் இல்லை
ஆகவே
அது
மழையேயில்லை

தோலுரிந்த கவிதை

பிடித்த
புத்தகத்தின்
பிரித்த
பக்கத்தில்
கண்கள்
கவிய
வரிகளின் நடுவே
புல் மடங்குகிறது
பச்சைப் புதர் ஊடே 
பாம்பென
அர்த்தம் நழுவுகிறது
வேலிச் செடியில் 
ஆடும்
வெற்றுச் சட்டையென
இக்கவிதையில் 
மினுங்குகின்றன

கபாடபுரம் - இதழ் 2

நம் புலப்பெயல்




















இறுதி மட்டும்
இணையவேப் போவதில்லை
எனத்தெரிந்த பின்னும்
விட்டு விலகாது
நெடுங் கோடுகளென
நீளக் கிடக்கும்
நம் உடல்களின் மீது
தட தடத்துக் கடக்கும்
இருப்பூர்திப் பெட்டிகளில்
தொலைதூரம் சென்று
மறையட்டுமென நாம்
நிறைத்து அனுப்பிய
ஏக்கப் பெருமூச்சுகள்தாம்
கண்ணே
உலர்ந்த இந்நிலம் முழுவதையும்
ஒருசேர நனைக்கவல்ல
பெரு மழையை
அடிவானத்தில்
கருக் கொள்ளச் செய்கின்றன.

திருவிளையாடல்

நெஞ்சு வெடித்து
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
`என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?’
காதில் விழாததுபோல
பாவனை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் தொடங்கினார்

நெஞ்சொடுபுலத்தல்












உற்றாரும்
மற்றோரும் கூடியிருக்கும்
மன்றப் பொதுவில்
நோக்கெதிர் நோக்காது
ஊடி
என்னெதிரே
ஏதிலார் போல்
புறங்காட்டி நிற்கும்
மயக்குறு மின்மகளவள்
மயிற்தோகை கழுத்தில்
மடலவிழ்கிறதென்
மையல்.

கபாடபுரம் இதழ் 2

நெடுந்தொகை கவிதைகள் - மலைகள்.காம் இதழ் 59


நெடுந்தொகை
————-
     1
மூடியிருக்கும்
திரைதான்
மூட்டுகிறது
முகத்தைப்
பார்க்கும்
தவிப்பை
  2
திறந்த
பிறகுதான்
தெரிந்தது
உடல்
வெறும்
கதவுதான்
  3
ஒவ்வொரு
முறையும்
ஒரு
முத்ததின்
மூலம்
நீங்கள் ருசிப்பது
ஒரு
கடலின்
வெவ்வேறு
உப்புகளை
 4
மூடிய
கதவுகளின்
அடியில்
தேங்கும்
விளக்கின்
வெளிச்சம்
போல
இரு
விழிகள்
அணைந்த பிறகும்
ஒளிருகிறதுன்
இதழ்கள்
  5
ஏழு
கடல்
ஏறவொண்னா
மலைகள்
பாதையில்லாப்
பாலைகள்
பகலிரவுகள்
மற்ற மனிதர்கள்
கற்ற நூல்கள்
கல்லா இளமை
எல்லாம்
கடந்து வந்தது
மடந்தையே
உனதிந்த
உடலின் முன்
மடங்கி
மண்டியிடத்தானா
?
6
ஒரு
முத்தத்தின்
ஈரம் போதும்
பிறகெப்போதும்
களையவியலாப்
பித்தின்
வித்துக்கள்
ந்ம்
மூளை ம்டிப்புகளினின்றும்
முளைத்தெழும்
7
சுரி குழல்
நெளிவு
தோடுடை
செவி
தொய்யா விள
முலைகள்
திருவிறக்கதின்
பாற்பட்ட
அரிவரித் தடம்
இறுகிய
இடை பற்றி
மெலிந்திறங்கிடும்
மென் கால்கள்
மேற் செல்ல
பொய்யா மலரெனெ
பூத்த சேவடிகள்
திருக் காணவ்ல்ல
தெள்ளியருக்கு
தேகமதும்
தெய்வமே
8
அவசரம்
அவசரமாய்
அள்ளி விழுங்கிப்போவதால்
அல்ல
விதவிதமாய்
சமைத்து
விருப்பறிந்து
பரிமாறவும்
வேண்டிக் கேட்டு
ருசித்துப்
புசிக்கவும்
செய்வதனால்தான்
அது
கலை
9
என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய சிறுநீர்
இம் முத்தம்
10
நவில்தொறும்
நல்கப் பெறுமந்த
நன்னூல்
நயம் போல
உண்ணும் தோறும்
உண்ணும் தோறும்
ஒன்றெனத் தீராது
ஒரோர் சுவை காட்டும்
இப்
பண்புடையாள் மாட்டு
பகிர்ந்து கொள்ளும்
முத்தங்கள்
 11
களைந்த பின்
தேடி
ஏமாறுகிறேன்
உடுத்தி
நீ
நடக்கையில்
பிறப்பித்து
உலவவிட்ட
இரகசியங்கள்
ஒவ்வொன்றையும்
  12
திரை கடலோடி
திசை யெட்டும் தேடி
திரவியம் சேர்த்தவனும்
தொன்று தொட்டு
துறை ஒன்றிலேயே
மூழ்கி
முத்தெடுத்தவனும்
பெற்றது
கைமண்ணளவு எனும்
பெறுமை உடைத்து
இக் காமம்

இரண்டு கவிதைகள் - சொல்வனம் - இதழ் 33












அகாலம்
இரவை,
குளிரை,
உறக்கத்தை,
இனம் புரியாத பயத்தை
விரட்டும் முகமாக
பீடி ஒன்றைப்
பற்றவைக்கிறான்
பிணவறைக்
காவலாளி.
புகைநாற்றம்
பொறாமல்
புரண்டு படுக்கிறது,
தன்னைத்தானே
எண்ணெய்யூற்றி
எரித்துக்கொண்ட
பிணம்.
களவியல்
பல்
வளர்ந்தபின்னும்
பால் மறக்காது
பசியும் அடங்காது
பற்றி உறிஞ்ச முன்னும்
பிஞ்சு உதடுகளைப்
பதறப் பதற
முலையினின்றும் பிடுங்கி
மூலையில் எறிந்த தாய்
கச்சொதுக்கி
காம்புகளைச் சுற்றிலும்
கடிவாயில்
கசப்பு தடவுவாள்
காணப் பொறாது
விக்கித்து நிற்கும்
அக்குழந்தை
அழுது தேறியபின்
அள்ளி மண் தின்னப்பழகும்
மெல்ல.


கவிதையும், கருணையும் – தேவதேவனின் படைப்புலகம்

தமிழ்க் கவிதை உலகில், கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இடையறாத உத்வேகத்துடனும், இயல்பான வெளிப்பாட்டுத் தன்மையுடனும் தொடர்ந்து இயங்கி வருபவர் தேவதேவன். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன், ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களுடன் விரிந்து கிடப்பது இவருடைய கவிதை உலகம். தமிழில் இவ்வளவு கூடுதல் எண்ணிக்கையில் எழுதியவர்கள் யாருமில்லை. படைப்புகளின் எண்ணிக்கை கூடும் போது அவற்றின் தன்மை நீர்த்துப் போகும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால் ஏராளமாக எழுதிக் குவித்த போதும் மலினமடைந்துவிடாத ஒரு தரமும், தன்மையும் தேவதேவனின் படைப்புகளில் காணப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழில் புதுக்கவிதை தோன்றியபோது, அதற்கான உருவத்தை மட்டுமின்றி உள்ளடக்கத்தையும் கூட மேற்கிலிருந்தே பெற்றுக் கொண்டது. இரு உலகப்போர்களுக்குப் பிறகான மனவெறுமையும், கையறுநிலையும், அவநம்பிக்கையுமே மேற்கத்திய கவிதைகளின் பிரதான தொனியாக வெளிப்பட்டது இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிறகான, இலட்சியவாதக் கனவுகளின் வீழ்ச்சி இங்குள்ள படித்த மத்தியதர வர்க்கத்தினருக்கு அதேமாதிரியான அவநம்பிக்கையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே தமிழ்ப் புதுக்கவிதையும், ஐரோப்பியக்கவிதைகளை முன்மாதிரியாகக் கொண்டு அதன் வடிவத்தையும், பாடுபொருளையும் பெரிய மாற்றம் ஏதுமின்றி சுவீகரித்து கொண்டது. அதனால் துவக்கம் முதலாகவே தமிழ்ப்புதுக்கவிதை என்பது பெரிதும் நவீனத்துவ படைப்புகளாகவே அமைந்துவிட்டன. தனிமனிதன் தன்னை மையமாகக் கொண்டு உலகை மதிப்பிடும்போது உண்டாகும் ஏமாற்றம், அவநம்பிக்கை, உளவியல் நெருக்கடி அதனால் ஏற்படும் துக்கம் மற்றும் இழப்புணர்வு போன்றவை நவீனத்துவ ஆக்கங்களின் சில பொதுப் பண்புகள். இன்றளவும் தமிழ்ப்புதுக் கவிதைகளில் இப்பண்புகளை பேரளவு காணலாம் ஆனால் தேவதேவனின் கவிதைகள் இத்தன்மைகளினின்றும் வெகுவாக மாறுபட்டவை.

இப்பிரபஞ்சத்திலுள்ள கோடிக் கணக்கான உயிரிகளின் தொகுதியுள் தன்னையும் ஒரு உறுப்பாகக் கருதி, இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்தல் என்ற நமது கீழைத்தேய சிந்தனை மரபின் தொடர்ச்சியாக அமைபவை தேவதேவனின் கவிதைகள். ஒருவன் இயற்கையுடன் கொள்ளும் விதவிதமான தொடர்புகளும், அத்தருணங்களின் தீரா வியப்பும், அவற்றினூடாக மனம் கொள்ளும் விரிவும், அடையும் ஆனந்தமும், பெறும் அமைதியுமே தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தப்படுகிறது.
இவருடைய கவிதைகளின் ஊற்று முகத்தை “கருணை மிக்க பேரியற்கையின் முன் வியந்து நிற்கும் குழந்தமை” என்று ஒற்றை வரியில் சுருக்கிக் கூறிவிடலாம். இவருடைய கவிதைகளில் காணப்படும் காட்சி சித்தரிப்பு, படிமத்தன்மை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் அவற்றில் சங்கக் கவிதைகளில் காணப்படுவது போன்ற இயற்கை நவிற்சித் தன்மையும், வெளிப்பாட்டு மொழி என்று பார்த்தால் பக்தி இலக்கியங்களில் தென்படுவது போன்ற உணர்வு நெகிழ்ச்சியையும் ஒருசேரக் காணலாம். இந்நெகிழ்வையும் கருணையையும் சாந்தத்தையும் பிறிதொரு நவீனகவிஞனிடம் நாம் மிக அரிதாகவே காணவியலும்.
‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுககிவ் உலகியியற்றியான்’
என்ற வள்ளுவனின் அறச்சீற்றம்
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’
என்ற கணியன் பூங்குன்றனின் அகவிரிவு
‘வாடின பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேன்’
என்ற வள்ளலாரின் வருத்தம்
‘வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரிகின்ற விலங்கெல்லாம் நான்’
என்ற பாரதியின் ஒருமை உணர்வு, இவற்றின் தொடர்ச்சியாக வைத்துப்பார்க்கத் தக்கவை தேவதேவனின் பல கவிதைகள். உதாரணமாக “விரும்பியதெல்லாம்” தொகுப்பிலுள்ள பின்வரும் கவிதையை சுட்டலாம்.
விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதிகொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக் கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும், மழலைகளின்
கொண்டாட்டமுமாய்
என்வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துகிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெய்யிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி
நடமாடவும் விரும்பினேன்
இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்.
மனிதப் பிறவியை ஒரு பேறாகவும், மனித வாழ்வை மிக நேர்மறையாகவும் காண்பவை தேவதேவனின் கவிதைகள். மனிதனின் நடத்தையிலுள்ள கீழ்மையை, விலங்குத் தன்மையை, புலனின்ப வேட்கையை அதற்கான அவனுடைய ஆழ்மன விருப்பங்களைப் பற்றிய கருமையான சித்திரங்கள் எதையுமே இவருடைய கவிதைகளில் நாம் காணவியலாது. மனிதன் அவனது இச்சைகளால் அலைகழிக்கப்படும் பிராணி மட்டுமன்று. அசாதாரணமான தருணங்களில் அவ்விச்சைகளையும் மீறி அவனை மேலெழச் செய்யும் ஆன்மாவும் கொண்டவனே மனிதன் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவராக தென்படுகிறார் தேவதேவன்.
அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள், சமூக உறவுகள் முதலியவற்றில் நாம் எதிர்கொள்ள நேரிடுகிற முரண்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றிற்கும் கூட மனிதர்களின் அகவறுமையை காரணம் எனக் காண்கிறார். அவருடைய முதல்தொகுப்பான “குளித்து கரையேறாத கோபியர்களில்” உள்ளது பின்வரும் சிறு கவிதை.
“காடு
தன் இதயச்
சுனையருகே தாகித்து நின்றான்
காடெல்லாம் அலைந்தும்
காணாத மான்கூட்டம்
காண.”
நாம் விரும்பி வேண்டிய ஒன்று, வெளியே இவ்வுலகம் முழுவதும் தேடி ஏமாந்தது, கடைசியில் நமக்குள்ளேயே இருப்பதை நம்மில் பலரும் உணருவதேயில்லை என்பதுதான் சோகம். “கிறுக்குப் பிடித்து திரிந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் மருந்துக்கும் காணக்கிடைக்காதிருக்கிறது அன்பு” எனத் தனது பிற்கால கவிதை ஒன்றில் எழுதுகின்ற தேவதேவனின் கவிதைகளில் திரும்பின பக்கமெல்லாம் தென்படுவது பரிவும், கருணையும், பிரியமும்தான்.
இதயம் கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும், அழகையும் கொண்டு
நான் யாதொரு பிரமாண்ட சிலையையும்
வடிக்க வேண்டாம்
வெளிப்படும் தூசு மாசு உண்டாக்க வேண்டாம்.
————————————-
அந்த சிலையின் கண்களின்றும்
நீர் வடிய வேண்டாம்
தற்கொலைக்கு வேண்டிய தனிமையற்று
அந்த சிலை தவிக்கவும் வேண்டாம்
அந்த சிலையை எவ்வாறு அழிப்பது எனத்
திணறவும் வேண்டாம்.
இதயம் கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும் அழகையும் கொண்டு
இப் பேரண்டத்தை நேசிக்கப் போகிறேன்
ஒரு சிறுகளிமண்ணையும் உருட்டாது.
“நட்சத்திர மீன்” தொகுப்பிலுள்ள இக்கவிதை தானென்ற நினைப்போடு கூடிய அன்பினால் உருவாக வாய்ப்புள்ள கேடுகளை பட்டியலிடுகிறது. தன்னை மீதமின்றி முழுமையாகக் கரைத்துக் கொண்டுவிடும்போதே எதிர் விளைவுகள் ஏதுமற்ற கருணை சாத்தியம் என்பதை உணர்த்துகிறது இந்தக் கவிதை.
தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்ப ஒரு படிமமாகவும், குறியீடாகவும், உருவகமாகவும் இடம் பெறுவது மரம். மரத்தை குறித்து எத்தனை முறைகள், எத்தனை விதமாக எழுதியும் தீரவில்லை இவருக்கு.
“மரம் அழைக்கிறது
மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்
தோழர்களாகிறார்கள்”
“ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாக நிற்க வைத்துவிட்டுப் போவேன்”
“மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்”
“எங்கே எங்கே என
எத்திசையும் கைநீட்டி ஏமாந்த மரத்தின்
மார்பிலேயே பூத்திருந்தது கனி”
“திடீரிட்ட
இன்பத்தின் காதற் கோலமோ என
பளீரிடும் மலர்க் கொத்துகளேந்தி நிற்கும்
பன்னீர் மரம்”.
“இருண்ட இம் மரக்கிளைகளில்
கருணையின் கார்மேகச் செழுமை”.
“எக்காலத்தும் எத்திசையும்
எல்லோரை நோக்கியும்
நீண்ட நீண்ட கைகளேயான
ஒரு பெருமரப் பிரமாண்டம்
அந்தப் பூங்காவில்”.
“கனவுகள் தோறும் புகுந்து
என்னைத் துரத்தியது
மரம் வெட்டப்பட்ட இடத்திலிருந்து
என் அறையை தாக்கிய வெய்யில்”.
இவருடைய கவிதைகளில் தொடர்ந்து இடம் பெறும் இந்த மரம், வெறும் பௌதீக இருப்பான மரத்தை மட்டும் சுட்டவில்லை. மாறாக நமது சிந்தனை மரபில் உருவகித்துச் சொல்லப்படும் பெருங்கருணை என்னும் காலாதீதமான பண்பின் குறியீடாகவே அது நிற்கிறது எனலாம்.
தனது வாழ்வில் தான் எதிர்கொண்ட சாரமான தருணங்களையெல்லாம் தன் படைப்பாக மாற்றியிருக்கும் தேவதேவனின் எழுத்தும், வாழ்வும் முரண்கள் ஏதுமற்று அகத்திலும், புறத்திலும் ஒன்றேயானது. அவருடைய பிற்கால கவிதைகளில் ஒன்று
நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நீங்கள் அவற்றை
நேரடியாக அறுவடைசெய்யமுடியாது.
வயலில் நிற்கும் நெற்கதிர்கள் நாம் நேரடியாக அறுவடை செய்யமுடியும். அது நம் வயிற்றுக்கு உணவுமாகும். ஆனால் நீரில் தெரியும் நெற்கதிர்களை நேரடியாக அறுவடை செய்ய முடியாது. அதற்கு நம் புலன்கள் விழிப்புநிலையை அடையவேண்டும்; தவிர மனமும் முதிர வேண்டும். சொர்க்கத்தின் விளைச்சலான அக்கதிர்கள் நம் ஆன்மாவிற்கான உணவாகும். எந்த அசலான ஒரு கலை இலக்கிய படைப்பினின்றும் நாம் பெறும் சாரமான அனுபவம் என்பது தேவதேவன் சுட்டும் நீரில் தெரியும் நெற்கதிர் போன்றதுதான்.
தமிழ்ப் புதுக்கவிதையின் மையப்போக்காக அமைந்துவிட்டிருக்கும் நவீனத்துவ ஆக்கங்களின் அழகியல் மதிப்பீடுகளுக்கு பழகிவிட்டிருக்கும் இளம் வாசகர்களுக்கு தேவதேவனின் கவிதைகள் காலத்தால் சற்று பழமையான ஒன்றாகக் தோன்றக்கூடும். அதற்கு அவருடைய கவிதைகளின் கட்டமைப்பும், மொழியுமே காரணம். அவருடைய “மார்கழி” தொகுப்பிலுள்ளது பின்வரும் கவிதை.
இறையியல்
எவ்விடமும் கோயில்களேயானதால்
கோயில் என்று தனியான தொன்று இல்லை.
யாவும் தொழுகைக்குரிய விக்ரகங்களேயானதால்
விக்ரகம் என்று தனியானதொன்று இல்லை
காணும் பொழுது
காணும் இடத்து
நெஞ்சுருகக்
கண் பனிக்கக்
கைதொழலாகாதா?

காண்பனவற்றிலெல்லாம் நெஞ்சுருகத் தொடங்கும் இந்த நெகிழ்வான மனநிலையும், நாளாந்த வாழ்வில், நாம் பார்த்துக் கடக்கும் சாதாரண நிகழ்வொன்றிலிருந்து கூட அசாதாரணமான தரிசனமொன்றை அடைய எத்தனிக்கும் அவருடைய பார்வைக் கோணமும், பலசமயங்களில் அவரது மனவெழுச்சிக்குத் தக புனைவுற்று புதுக்கோலம் காட்ட முயலாத அவருடைய கவிமொழியும், கூடி அவருடைய கவிதைகளுக்கு பழகியதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் கவிதையின் இந்த மேல் தோற்றத்தை பெரிதாக பொருட்படுத்தமாட்டான். ஏனெனில் கவிதை வாசிப்பில் ஒரு பிரதியின் அடிப்படையான புரிதல் என்பதே அதன் பரிச்சயமழிப்பு என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. அவ்வகையில் கவிதையை ஒரு ஆழமான கலாச்சார பிரதியாகவும், வாழ்வை அர்த்தப்படுத்தும் சின்னஞ்சிறு தருணங்களின் சொற்தொகுப்பாகவும், மரபின் சாரமான தொடர்ச்சியாகவும், மனிதனின் ஆன்மவல்லமையை கோடிட்டுக் காட்டக் கூடிய மொழி செயற்பாடகவும் காணக்கூடிய வாசகர்களுக்கு தேவதேவன் கவிதைகள் நல்குவது அசாதாரணமானதொரு அகவிரிவை எனலாம். அவருடைய மற்றுமொரு கவிதை. அதன் தலைப்புமே கவிதைதான்.
கவிதை
நீர் நடுவே
தன்னை அழித்துக் கொண்டு
சுட்டும் விரல்போல் நிற்கும்
ஒரு பட்டமரம்
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.
நிலத்தின் நடுவே கிளை, இலைகளோடு செழித்திருக்கும் மரத்தினை நாடி பறவைகள் வருவது இயல்பானது. உணவும், நிழலும், இடமும் கிடைக்கும். ஆனால் நீரில் பட்டுப் போய் நிற்கும் மரத்தில் ஒரு புள் ஏதோ புரிதலில் வந்தமர்கிறது. அப்புரிந்துணர்வு எதுவாக இருப்பினும் உணவு, நிழல், இடம் என்பது போல் லௌகீகமானது அல்ல. லௌகீகத்திற்கு அப்பாற்பட்டது அதனாலேயே அது பொன் முத்தம். மொழி நடுவே தன்னை அழித்துக் கொண்டு எதையோ சுட்டுவது போல் பட்ட மரமென நிற்கிறது பிரதி. அதில் வாசகப் புரிந்துணர்வின் பொன்முத்தமாய் வந்து அமர்கிறது ஒரு மனம்.
(தேவதேவன் புகைப்படம் நன்றி: தி ஹிந்து)

சொல்வனம் இதழ் 79 இல் வெளிவந்த கட்டுரை

வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்

ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில் நிகழும் படைப்பு எவ்விதத்தில் அந்நியோன்னியமான ஒன்றாக நமக்குள் இடம் பெயர்கிறது, உறவுகொள்கிறது ? நாம் நேரில் கணும் மனிதர்களைக்காட்டிலும் படைப்பாளியின் கற்பனையில் உருக்கொள்கிற கதாபாத்திரங்கள் ஏன் நம்மை பாதிக்கிறார்கள் ? யதார்த்த வாழ்க்கையில் நாம் வெகு சுலபமாக உதாசீனம் செய்துவிட்டு போகும் விஷயங்கள் ,மதிப்பீடுகள் ஒரு படைப்பில் வெளிப்படுகையில் ஏன் மனம் நெகிழ்ந்து போகிறோம் ?ஏன் குற்ற உணர்வில் தவிக்கிறோம் ?
இவற்றுக்கெல்லாம் திட்டவட்டமான பதிகள் ஏதுமில்லை. ஒரு பெரும் படைப்பு என்பது அதைப்படிப்பவனின் எண்ணங்களின் வழியாக புலன்களுக்கு எட்டாத நுண்ணிய இடைவெளிகளை மெளனமாக ஊடுருவுகிறது. அவனது பார்வையை கனவுகளை சிந்தனையை மதிப்பீடுகளை அவனை அறியாமலேயே குலைக்கிறது , தலைகீழக்குகிறது , வரிசைமாற்றுகிறது.மண்ணின் புழுதியில் கால்களை அளைந்துகொண்டிருப்பவனை மனம் கூசச்செய்து விண்ணின் எல்லையின்மையை நோக்கி சிலகணமேனும் மேலெழும்பிப் பறக்கத் தூண்டுகிறது .இயற்கையின் படைப்பில் இப்பேரண்டத்தில் தானும் ஒரு மகிமை மிக்க துளி என்ற பேருணர்வால் இதயம் விம்மும்படிச் செய்கிறது . இவ்வகைபடைப்புகள்தமிழில் அரிதாகவே படிக்கக் கிடைக்கின்றன. அவ்வகை நாவல் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல்
தனது முந்தைய நாவலில் காலத்தை ஊடுருவி நகரும் கற்பனையின் அறிதல் வழியாக தன் புனைவின் சாத்தியங்களை பரிசீலனை செய்த ஜெயமோகன் இந்த நாவலில் துல்லியமான விவரங்களுடன் கூடிய சமீபத்திய வரலாற்றின் ஒருபகுதியை பின்புலமாக் கொண்டு மனித இருத்தல் பற்றிய அடிப்படையான விசாரணைகளை மேற்கொள்கிறார் .
வரலாறு நெடுகிலும் மனிதன் கண்டவற்றுள் ஆகச்சிறந்தது என்று மதிப்பிடப்பட்ட கம்யூனிச சித்தாந்தம் அது முதலில் நிறுவப்பட்ட சோவியத் ரஷ்யாவிலேயே நொறுங்கிப்போனது இநூற்றாண்டின் பெரும் துக்கம். இலட்சியவாதம் என்ற நிலையில் அதுமனிதனின் பூரணத்துவத்தை முன்வைத்துப்பேசினாலும் நிறுவனமயமாகையில் அது இழைத்த குரூரங்கள் மறையாத கறையாக வே சரித்திரத்தில் படிந்துள்ளது .
எந்த வரையறுக்கப்பட்ட அமைப்பிற்குள்ளும் விசுவாசம் என்ற பேரால் மனசாட்சியை கைவிடசெய்யும் விஷயம்தான் வலியுறுத்தப்படவும் , கடைப்பிடிக்கப்படவும் செய்யப்பட்டுவருகிறது . நுட்பமான மேதைகள் பலரும்கூட சொந்த மனசாட்சியைவிடவும் தாம்சார்ந்துள்ள அமைப்பை முக்கியமாக கருதவும் நம்பவும் முற்படுவது அது தரும் அடையாளம் மற்றும் பாதுகாப்பு போன்ற லெளகீகமான லாபங்களுக்காக மட்டுமே என்று குறைத்துச் சொல்லிவிடமுடியாது .
மாறாக உலகத்தின் அல்லது வரலாற்றின் இயக்கத்தை தங்கள் மூளையால் அளந்து அவற்றின் சிக்கல்களுக்கு தம்மால் தீர்வுகாணவும் மாற்றிவிடவும் முடியும் என்ற அவர்களின் குருட்டு நம்பிக்கைதான் . அதை நம்பிக்கை என்றுகூட சொல்லிவிடமுடியாது தான். எல்லா தனிமனித பாவங்களை விடவும் இத்தகைய இலட்சிய வெறிபிடித்த அகம்பாவங்களால் விளைந்த பெருநாசங்கள்தான் மனித குல வரலாறாக நீண்டுகிடக்கிறது .
உலகமுழுவதிலும் மனிதாபிமானிகளால் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட அக்டோபர் புரட்சியின் இலட்சியவாத அம்சங்கள் லெனின் மறைவோடு முடிந்துபோயின.ஸ்டாலின் காலத்தில் பிரம்மாண்டமான ஒரு வல்லரசாக ரஷ்யா கட்டமைக்கப்பட்டபோது அதன் பலியாடுகளாக பல்லாயிரக்கணக்கன அப்பாவிமக்கள் காவுகொள்ளப்பட்டனர் . அதை மனசாட்சியின் பேரால் எதிர்க்கமுற்பட்ட கலைஞர்கள் எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் பரிசாக உடனடிமரணம் அல்லது சாகும்வரையில் சைபீரியப் பனிவெளியும் விதிக்கப்பட்டது .அதில் புரட்சியை முன்னின்று நடத்திய முதல்கட்ட தலைவர்கள் பெரும்பாலோர் அடக்கம்.
அவ்வாறு துரோகி எனமுத்திரையிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட புகாரின் என்ற செம்படை முன்னணிதலைவரின் கதை பெரிஸ்த்ரோய்க்காவின்போது அவரது மனைவி அன்னா நிக்கலாயெவ்னா என்பவரால் வெளிக்கொணரப்பட்டது .அம்மாதிரி வெளியே தெரியாமலே இருட்டில் புதைந்துபோன அவலங்கள் எத்தனியோ இல்ட்சம். அதுவரையிலும் எல்லாமே ஏகாதிபத்திய கட்டுக்கதை என்று ஓங்கிச் சொல்லிவந்த கம்யூனிஸ்டுகள் தங்களைப்பற்றி சுயபரிசீலனைசெய்துகொள்ளவேண்டிய தார்மீக நெருக்கடிக்கு உள்ளனார்கள்.
புகாரினைமுன்வைத்து ரஷ்யாவிலிருந்து தொடங்கி இந்தியக் கயூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கம் வரையில் நிகழும் சித்தாந்தத் தேவையையும் , சந்தர்ப்பவாத அரசியலையும் ,இலட்சியக்கனவுகளின் காலம்போய் பேச்சுவார்த்தை என்ற பேரம் நடக்கும் அதிகார மையங்களையும் விவரித்துச் சொல்லும் இந்நாவல் மற்ற அரசியல் நாவல்களைவிட அந்த ஒற்றைப் பரிமாணத்துக்குள் நின்றுவிடவில்லை . அரசியலை ஒரு முகாந்திரமாகக் கொண்டு அசாதாரணமான ஓர் உத்வேகத்தோடு மனிதனின் அடிப்படை உரிமையான உயிர்வாழ்தலைக் கூட நிச்சயமற்றதாக்கும் நிறுவன அதிகாரம் பற்றியும் ஒரு சமூகத்தில் எந்தவிதமான அடக்குமுறைச்சூழலிலும் நிர்பந்தத்திலும் மெளனிக்கமறுக்கும் மனசாட்சியின் குரல் நீதியுணர்வு முதலியவற்றை பற்றியும் தீவிரமான வாதப்பிரதிவாதங்களை முன்வைக்கிறது .
இந்நாவலின் பலபகுதிகள் பிரக்ஞைபூர்வமான கச்சிதத்தைதாண்டி , கட்டற்ற ஆவேசத்தை ,பதற்றத்தை, தன்னிச்சையான உணர்ச்சி வேகத்தைக் கொண்டதாக பலவித நடைகளில் அமைந்துள்ளன. பிராந்தியப் பேச்சு மொழியிலிருந்து கவித்துவமிக்க செம்மொழிவரையிலும் பலவிதமான சாயல்களில் , புழங்குதளத்துக்கு ஏற்ப மொழி இயல்பாகப் பயின்றுவருகிறது . கனவுநிலைக்காட்சிகளாக வரும் பகுதிகளான புகாரின் அன்னா பிரிவு [பனிக்காற்று நாடகம் ]சைபீரிய வதைமுகாம் சித்திரங்கள் [மூடுபனி நாடகம் ] தல்ஸ்தோயும் தஸ்தவேவ்ஸ்கியும் சந்திக்கும் ரயில்நிலையக் காட்சிகள் [மனிதர்களும் புனிதர்களும் நாடகம் ] புகாரினுக்கும் பாதிரியாருக்கும் குளியலறையில் நடைபெறும் உரையாடல் [விசாரணைக்கு முன் சிறுகதை ]கிறிஸ்து புகாரினுக்கு காட்சிதரும் பகுதி [ உயிர்த்தெழுதல் ] முதலிய பகுதிகள் உரைநடைக்கும் கவிதைக்கும் இடையேயான இடைவெளியை பெரிதும் குறைத்துவிடுகின்றன.
இந்நாவலை வாசிக்கும்போது வாசிப்பின் போக்கிலேயே ஒரு உபபோதமாக இந்நாவல் இயங்கும் நிலப்பரப்பும் அதன் தட்ப வெப்பமும் புலன் வழி உணர்தலுக்கு இணையாக மூளைக்கு அனுபவமாகிறது. ஜெயமோகனின் பிற படைப்புகளில் இத்தனை அழுத்தமாக பதிவுபெறாத விஷயமாக இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளனர் .நாகம்மையாகட்டும் , அன்னாவாகட்டும் , இசக்கியாகட்டும் மூவருமே அவர்கள் சார்ந்திருக்கும் ஆண்களின் ஆளுமையிலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த மனத்திடத்துட பிரச்சினைகளை தங்களுக்கே உரிய வழியில் எதிர் கொள்கிறார்கள் .அதன்மூலம் தங்கள் ஆண்களின் வாழ்க்கைக்கு ஒரு முழுமையையும் அர்த்தத்தையும் வழங்குகிறார்கள்.
அருணாச்சலத்தின் தந்திரமும் மனநெகிழ்வும் பேதலிப்பும் நிரம்பிய தேடல்களை விடவும் நாகம்மையின் தடுமாற்றங்கள் இல்லாத எளிமையும் மனசாட்சியின் தெளிவுமே கம்பீரம் மிக்கவையாகத் தோன்றுகின்றன.அவளால்ஒரே சமயத்தில் இருவேறு துருவங்களாகக் கருதப்படும் அருணாச்சலத்தையும் கெ .கெ . எம் மையும் தன் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக உணரச்செய்ய முடிகிறது . அதேபோல மனசாட்சியின் உறுத்தல் காரணமாக தான் சாகசத்துடன் விளையாடிவந்த அரசியல் சதுரங்கத்தில் அதிகார ஏணிப்படியிலிருந்து மரணத்தின் பாதாளத்துக்கு தள்ளப்படுகிற புகாரினைக்காட்டிலும் நம்பிக்கையின் பசுமைத்துளிகூட துளிர்க்காத சைபீரியப்பனிவெளியில் தனக்கான நாள்வரையில் காத்திருந்த அன்னாவின் பொறுமையே மதிப்பிற்குரியதாக படுகிறது.
ஆனால் சரித்திரத்தில் அருணாச்சலமும் புகாரினும் மீறினால் வீரபத்ரபிள்ளயுமே இடம் பெறுவார்கள் , நாகம்மையும் அன்னாவும் இசக்கியுமல்ல .
நாவலின் மற்றொரு முக்கியமானபகுதி மனநோய்விடுதியில் நடைபெறும் நாடகம். எழுதியவர் முதற்கொண்டு நடிப்பவர் வரையிலும் அனைவருமே மனநிலை பிறழ்வுற்றவர் என்பதால் நாடகத்தின் முதல் அங்கம் முதற்கொண்டே அபத்தமும் அதையொட்டிய கட்டுப்படுத்த முடியாத சிரிப்பும் துவங்கிவிடுகிறது .தமிழ் புனைகதையில் இப்பகுதிக்கு இணையான நகைச்சுவைக்காட்சிகள் குறைவே .நடுவில் திடாரென யோசிக்கும்போது அந்தச் சிரிப்பிற்கடியில் ஒரு கடுமையான துக்கம் இருப்பதை உணர முடிகிறது .அது இப்பூமியின் மீது ஆதியும் அந்தமும் இல்லாது கிடக்கும்காலத்தின் நகைப்பாகும்.
மகத்தான இலட்சியங்களை ,தலைமுறையின் கதாநாயகர்களை, அவர்களின் பெரும் கனவுகளை என எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு சிரிக்கும் சிரிப்பு அது . நுண்ணுணர்வு கொண்ட எவரும் அந்த கொடும்சிரிப்பின்முன் மனம் பதைத்து மண்டியிடத்தான் வேண்டும். இந்நாடகத்தில் சாக்ரட்டாஸ் , கிறிஸ்துவில் இருந்து மார்க்ஸ் ,இ எம் எஸ் வரை எவருமே அந்தக் குரூர நகைச்சுவைக்கு தப்புவதில்லை. ஓர் அதீதக் கணாத்தில் அந்நாடக நிகழ்வுகள் யதார்த்தமாகவும் அதற்கு வெளியே நடைபெறும் நிகழ்வுகள் பைத்தியக்காரத்தனமாகவும் உருமாறிவிடும் அபாயம் எப்போதும் இருக்கிறது.
தன் சக்திக்கு அப்பாற்பட்ட குருட்டுவிதிகளுக்கு அடிபணிய மறுத்து மெளனமான வன்மத்துட ன் குடிக்கத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அழித்துக் கொள்கிற வீரபத்ரபிள்ளையின் சித்திரம் நாவலில் மிக நுணுக்கமாகவும் இயல்பாகவும் துலக்கம் கொள்கிறது . தமிழ் கதைமாந்தரில் இத்தனை ஆழமான மன உந்துதல்களும் நிலைதடுமாற்றத்தின் தவிப்புகளும் கூடிய வேறொரு குடிகாரனை நாம் காணமுடியாது .அவனது முடிவு லெளகீக மதிப்பீடுகளின்படி முழுத்தோல்வியாகவும் யதார்த்தத்துக்கு சற்றும் பொருந்திவராத அபத்தமாக காணப்பட்டாலும் தார்மீக அடிப்படையில் அவன் தன் குடும்பம் ,சார்ந்திருந்த இயக்கம் ,சமூகம் என எல்லாருடைய மனசாட்சியையும் உறுத்தும் நிரந்தரமானதொருகுற்ற உணர்வாக நிலைத்துவிடுகின்றான்.
நாவலுக்குள் சொந்த மற்றும் எளிதில் ஊகிக்க முடிகிற கற்பனையான பெயர்களுடன் வருகிற சில நிஜமனிதர்களின் பாத்திரங்கள் புனைவுக்கும் நிஜத்துக்குமான அருவமான உறவை காட்டுவதோடல்லாமல் நாவலின் நம்பகத்தன்மையை துல்லியமாக்கிக் காட்டவும் உதவுகின்றன
இத்தனை தேய்வுக்கு பிறகும் நமது அரசியல்க் களத்தில் இன்னமும் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு தத்துவ சித்தாந்தப் பயிற்சியும் , சுயக்கட்டுப்பாடுகளும் , தனிமனித ஒழுக்கங்களும் பேணப்ப்பட்டு வருவது கம்யூனிஸ்டு கட்சிகளில் மட்டும்தான் . ஆனால் நீதியுண்ர்வும் அறவுணர்வுமற்ற அதன் சித்தாந்தக் குருட்டுத்தனம் , ஆன்மீக பரிமாணங்களற்றவனாக மனிதனைக் குறைத்து மதிப்பிடும் அதன் அபத்தம் ஆகியவை அத்தத்துவத்தின் எல்லைகளை வெகுவாகக் குறுக்கி விடுகின்றன . இச்சுழலில்தான் இங்கு கீழைமார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது.
ஆகவேதான் இந்நாவல் வரலாற்றைவிடவும் முக்கியமானது என முன்வைக்கும் அறம்சார்ந்த கேள்விகள் முக்கியத்துவமுடையதாகின்றன. இக்கேள்விகள் ஒருதலைப்பட்சமானவை என கட்சி சார்ந்த மார்க்ஸியர்கள் மறுக்கலாம். அப்படிமறுப்பதற்காக அவர்கள் முன்வைக்கும் வாதங்களைப் பொறுத்து நாவலுக்கு வெளியேயும் விவாதம் தொடரப்படலாம். அதற்கான சாத்தியங்களுக்கு உரியதாகவே நாவலின் வடிவம் உருவாகிவந்துள்ளது.
சிறுகதைகள், நாடகம் ,கவிதைகள், கடிதங்கள், நினைவுக்குறிப்புகள், என மொழியின் எல்லா வடிவங்களையும் நாவலுக்குள் கொண்டுவரும்போது அது கட்டமைப்பு பற்றிய ஓர் உத்தியாக மட்டும் சுருங்கிவிடாமல் பல்வேறு மாற்றுத்தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குரல்களாகவும் அவற்றுக்கு இடையேயான உரையாடல்களாகவும் விரிவாகப்பதிவு பெறுவது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக ஒன்றை குறிப்பிட்டு சொல்லவேண்டும் . புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் அச்சாக்கத்தின் தரம் குறித்தது அது .பதிப்பாளர் புத்தகம் வெளியிடுவதை வெறும் வியாபாரமாகமட்டும் கருதாத பட்சத்தில் புத்தகத்தின் வெற்றியில் அதன் வெளியீட்டாளருக்கும் பங்கு உண்டு. அவ்வகையில் தமிழின் பதிப்பகத்தார் இந்நாவலுக்கு அதிகபட்ச கெளரவத்தை சேர்த்துள்ளனர் என்று கூறவேண்டும் .
[பின் தொடரும் நிழலின் குரல் , தமிழினி பதிப்பகம்,342 .டிடிகெ சாலை ,சென்னை,600014 .
பக்கங்கள் 723 விலை ரூ 290
‘வேட்கை ‘ காலாண்டிதழ் மே 2000 இதழில் வெளிவந்தது ]

Sunday, 1 July 2018

க.மோகனரங்கன்- புதிர்களை ஆராயும் கலைஞன்

எல்லோரும் அதைக் காதல் என்றும் சிரமம் என்றும் குறிப்பிட்டார்கள். சங்க இலக்கியம் இரண்டையும் ஒற்றாகத்தான் பாவிக்கிறது. வள்ளு வருக்கு காமம் கெட்ட வார்த்தை இல்லை. இடையில் யாரோ ஒரு குற்ற மனப்பான்மைக்காரன், காதலை உயர்சாதி என்றும் காமத்தை அ-உயர் சாதி என்றும் வகுத்தான். ஒழுக்கவான்கள் சமூகச் சட்டம் செய்து ‘இது இது குற்றம்’ என்றார்கள். கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் இந்தக் குற்றவாளிகள், மீறியவர்கள் எனப்பட்டவர்கள் பக்கமே தம் நட்புக் கரம் நீட்டியபடி இருக் கிறாக்கள். கலைஞர்கள் ஒருபோதும் நீதிபதிகளாவது இல்லை.
யுத்தகளத்தின் புகைமூட்டங்களுக்கு இடையிலும் புல் முளைக்கத்தான் செய்கிறது. பெண்கள், ஆண்கள் என்று தம்மை உணரும் எல்லா ஜீவிகளிடமும் காதல் என்ற உயிர் எழுச்சி ஏற்படவே செய்யும். முறை, தக்கது, தகாதது காதலுக்கு இல்லை. கொடி படரக் கூடாத மரம் என்றெல்லாம் விதிகள் ஆண், பெண் உறவுக்குத் தெரிவதில்லை. ஆண், பெண் உறவில் இருக்கும் இந்தப் புதிர்த் தன்மை கலைஞர்களுக்குப் பெரும் கிளர்ச்சி தருகிறது. இதன் ஊற்றை, மையத்தை, மர்மத்தை அறியவும் எழுதவும் அவர்கள் முயல்கிறார்கள். காதலை, காதலர்களை எழுதுவது தெலைந்துபோன சாவியைத் தேடுவதாக இருக்கிறது. ஆனாலும், எழுத் தாளர்கள் இந்தச் சவாலை ஏற்பதில் பின்வாங்குவதில்லை. க.மோகனரங்கன், தான் அறிந்த சில விஷயங்களைத் தனக்குத் தெளிவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டி எழுதி இருக்கிறார். அவை வாசிக்கத் தக்க கதைகளாக உருப்பெற்றிருக்கின்றன.
க.மோகனரங்கன், தமிழின் முக்கிய மான கவிஞர். நல்ல விமர்சகர். ‘அன்பின் ஐந்திணை’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில், 13 கதைகள் இருக்கின்றன. சிறுகதைகளின் நுவல் பொருளைத் தொகுத்துக்கொள்வோம்.
சேட்டு என்கிற, கதை சொல்லியின் நண்பன் பள்ளி தோன்றிய நாளில் இருந்து ஆற அமர படித்து, ஒன்பதாம் வகுப்பு வருகிறான். தனம் கடந்த மூன்று வருஷமாக ஒன்பதாம் வகுப்பில். சேட்டு வுக்கு தனத்தின் மேல் காதல். தனத்துக்கு கல்யாண ஏற்பாடுகள். சேட்டு பூச்சி மருந்தைத் கையில் ஏந்துகிறான். இதெல் லாம் காதலின் சத்திய சோதனைகளில் ஒன்று. பூச்சி மருந்தைக் தனத்திடம் காட்டுகிறான். அவள், உயிரின் மேன்மை யைப் பற்றிப் பேசி நடக்கிறாள். பூச்சி மருந்து பிடித்த கையில் மதுவை ஏந்துகிறான் சேட்டு.
இன்னொருத்தன் பெயர் சேகர். அவனுக்கு ஒரு ஒன்பதாம் வகுப்புப் பெண் மீது காதல் (ஒன்பதாம் வகுப்பு காதல் கண்டம் போலும்) பிரச்சினை வீட்டுக்குத் தெரிந்து அமர்க்களம். பெண், அப்பா அம்மா பார்த்த பையனைத் திருமணம் செய்துகொண்டு, திருமதி ஆகி, மழையைப் பெய்யச் சொல்லும் கற்பரசியும் ஆனாள். சேகர் சக மாண வர்களின் அறைகளில் தேவதாஸானான்.
கருணாநிதிக்கு எதிர்வீட்டுப் பெண் ணின் மேல் காதல். அவன் அப்பாவுக்குத் தெரிந்து, அவள் வீட்டுக்குள் புகுந்து அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து அடித்திருக்கிறார். ஏழைப் பெண். எதுவும் செய்யலாம். அன்று மாலையே அந்தப் பெண் தூக்கில் தொங்கினாள். சேதி கேட்டு கருணாநிதி, பூவோடு அவளைப் புதைத்த இடத்தில் மலர் தூவ வந்திருக்கிறான். பேருந்தில் ஏறும் முன்பு பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு ஏறி இருக்கிறான். வழியிலேயே கருணாநிதி யின் உயிரும் பிரிந்திருக்கிறது.
இன்னொரு வேறுவிதமான கதை. டிரைவர் சண்முகத்தோட மனைவி ஜோதி. செல்வத்துடன் தொடர்பு. சண்முகத்துக்குத் தெரிந்தது விவ காரம். ஊர் பார்க்க சண்முகம் அவளை அடித்து துவைத்தான். வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தின் கீழ் அழுது கொண்டிருந்தவளை நம் கதைசொல்லியும் பார்க்கிறான். பின்னர் ஒருசமயம் ஜோதியின் முன் போய் நிற்கிறான். ஏன்? காதல்தான்! ஜோதி இவனை வேண்டாம் என்கிறாள். ஏன், நான் என்ன, அந்தச் சண்முகத்தையும், செல்வத்தையும்விட எந்த விதத்தில் குறைச்சல் என்கிறான் கதைசொல்லி. அதற்கு அவள் சொல்லும் பதில்: ‘‘நீ என் புருஷனைவிட, நான் ஏதோ குருட்டு ஆசையில் சேர்த்துக்கிட்டு அவமானப்பட்ட அந்த செல்வத்தைவிட ஏன், என்னைவிடவும் நீ உசத்தி. அதனால்தான் வேண்டாம்கிறேன். புரியுதா?’’
இப்படியாகச் சில கதைகள். க.மோகனரங்கன், இவற்றை ‘அன்பின் ஐந்திணை’ என்கிறார். இது ஒரு நுட்பம். சங்க இலக்கியம், காதல் வகைமைகள் அனைத்தையும் அன்பின் ஐந்திணைக்குள் அடக்க வில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய திணை களில், அதாவது நிலங்களில் வாழ்ந்த மனிதர்களின் காதலைச் சொன்ன தோடு; அந்தக் காதல்கள் கற்பு எனப்பட்ட மணவாழ்க்கைக்குள் செலுத் தப்பட்டபோதுதான் அன்பின் ஐந்திணை ஆயின. அல்லாத காதல்கள் கைக்கிளை மற்றும் பெருந்திணை என்றே பெயரிடப்பட்டன.
மொழி கருத்துச் சாதனமாகிப் பின்னர் கலைச் சாதனமானபோது, கவிதைகள் பரவலாகக் காதலின் அனைத்துச் சாகைகளிலும் எழுதப்பட் டன. கைக்கிளை, பெருந்திணை என்பவை வாழ்க்கையின் பெறு பொருள். ஆகையால் அவை புறக்கணிக் கப்படவில்லை. கவிதைகள் தொகுக் கப்பட்டு அகம் என்றும் புறம் என்றும் பிரிக்கப்பட்டபோது, சமூகத்தில் நிலவிய பொய்யும் வழுவும் கண்ட பெரியோர்கள் காதலை நன்னெறியாகிய குடும்ப நெறிக்குள் செலுத்த கைக்கிளையையும் பெருந்திணைப் பாட்டுகளையும் புறக் கணித்தார்கள்.
கைக்கிளையும் பெருந்திணையும் செய்த குற்றம் என்ன? ஒரு குற்றமும் செய்யவில்லை. சேட்டும், சேகரும், கருணாநிதியும் செய்த குற்றம் என்ன? காதலித்ததுதான்!
குலம், வயது, தகுதி, பொருளாதாரம் முதலான பல வகைகளில் இழிந்தவர்கள், ஏவலர்கள் காதலிப்பதையும் அவர் களின் காதலுக்கு அந்தஸ்து தருவதை யும் மேலோர் விரும்பவில்லை. அவர்கள் காதல் கைக்கிளையும் பெருந்திணையுமாயிற்று. கை = சிறுமை, அல்லது ஒருதலைக் காமம் என்று கைக்கிளையையும், பொருந்தாக் காமம் என்பது பெருந்திணையையும் குறித்தது.
எல்லாக் காதலும், பெருமை பெற்ற அம்பிகாபதி அமராவதி காதலும் கூட, கைக்கிளையில்தான் தொடங்கி இருக்க முடியும். பார்த்து, பேசி, பழகிய பின் வந்து சேரும் இடம் காதல் என்றால்; சேருமட்டும் அதன் பெயர் என்ன? பொருந்தாக் காமம் என்பது எப்படிச் சரி? காதலர்க்கு மனம் பொருத்திய பின், பிறர் அதை பொருந்தாதது என்பது என்ன வகையில் சரி?
க.மோகனரங்கனின் கதைகள், இந்தப் பார்வையில் முக்கியமானவை. சிறு பையன்களின் காதல்கள் சரியா என்று பெரிய பையன்கள் கேட்பது புரிகிறது. சிறு பையன்களின், பெண்களின் உயிரே போயிற்றே அதற்கென்ன பதில்? இதுகுறித்த பரவலான ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்கிற கவலை எழுத்தாளர்களுக்கு உண்டு. மோகனரங்கனும் அவர் பொறுப்புக்கு இதைச் செய்திருக்கிறார். கைக்கிளை பெருந்திணை என்று அக்காலத்துப் புறக்கணிப்பு போல இக்காலத்திலும் தமிழ்ச் சமூகம் அதைத் தொடர வேண்டுமா என்கிற கேள்வி புறக்கணிக்கக் கூடியதல்ல.
இரண்டாயிரம் பெண்கள் படிக்கிற பள்ளி. அறுபது ஆசிரியர்கள். ஐந்து பேர் ஆண் ஆசிரியர்கள். இடைவேளையின்போது டீ குடிக்கப் போவார்கள். ஒருவர் - அவர் பேர் மணிவாசகம். தனியாக இன்னொரு கடைக்குப் போய் டீ குடித்துவிட்டுத் திரும்புவார். ஏன்? ‘இந்தக் கடையில் முட்டை போண்டா போடுறானே’ என்பார். அந்த அளவு சைவர். பட்டினி கிடப்பார்கள். ஆனால் ஆசார அநுஷ்டானங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவரைப் பற்றி ஒரு வதந்தி. வீட்டு வேலைக்காரப் பெண்மணியோடு தொடர்பு வைத்திருக்கிறாராம். ஆசிரியப் பணிக்கான கவுரம் பிரச்சினையானது. மணிவாசகம் சார் அவளைத் தேடிக் கொண்டு குப்பத்துக்கே செல்கிறார். இரவுக் காட்சி சினிமாவில் அவர்களைப் பார்த்தார்கள் என்று பேச்சு. கிராமப் பள்ளி. பெண்கள் பள்ளி. தலைமை ஆசிரியர் மணிவாசகம் சாரைப் பணி மாறுதல் செய்கிறார். போகும்போதுதான் மணிவாசகம் மனம் திறக்கிறார்.
உடல் நலம் குன்றி அவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அந்த வேலைக்கார அம்மா கையால் தண்ணீர்கூடக் குடிக்காத சார், அவள் கொடுத்த மாத்திரைகளையும் துப்பிய சார், கண் திறக்க முடியாது மயங்கிக் கிடந்தபோது அவள் உதவியை ஏற்றுக்கொள்ளும்படி ஆயிற்று. அங்கிருந்து ஆரம்பித்தது எல்லாம்.
மோகனரங்கன் எழுதுகிறார்:
புத்திக்கும் மனசுக்கும் இடையே எழும்பி நின்ற சுவர், எப்புள்ளியில் எவ்விதம் நெக்குவிட்டுக் கசிந்தது என்று நிதானிக்கும் முன்னரே, சரிந்து விழுந்த மிச்சமுமின்றி அடித்துச் செல்லப்பட்டு விட்டிருந்தது...
மணிவாசகம் சார், கதை சொல்லியிடம் சொல்கிறார்.
‘‘டாக்டரிடம் காட்டி ஊசி மருந்தெல் லாம் போட்டு தேறி எழுந்திருக்க நாலு நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ள எனக்குள்ள கலைச்சு அடுக்கின மாதிரி எல்லாமே மாறிப்போச்சு. உங்களுக்கு சின்ன வயசு. நான் பேசறது ஏதோ அற்ப சாக்கு மாதிரி தோணும். இப்ப இல்லன்னாலும் பின்னால் ஒருநாள் புரியும். அப்புறம், இந்த மாதிரி உறவெல்லாம் கடைசியில் இப்படி மனவேதனையில்தான் போய் முடியும்னு எனக்கு முன்னாலேயே தெரியும். எல்லாத்தையும் ஏத்துக்கிற பக்குவம் இப்போது எனக்குக் கிடைச்சுடுச்சு.’’
இந்தப் பக்குவம்தான் முக்கியம். இதை ஏற்படுத்துவதுதான் எழுத்தில் அகப் பயன். இதற்காகத்தான் இந்தக் கதைகளை மோகனரங்கன் எழுதி இருக்கிறார். உலகத்தின் பெரும் படைப்பாளிகள் எல்லோரும் இந்த அகச் சிடுக்குகளில் விரும்பியே போய் சிக்குகிறார்கள். சிடுக்குகளை எடுக்க முயற்சிக்கிறார்கள். இம்முயற்சிகளில் பல கதவுகள் திறக்கப்படுகின்றன. க.மோகனரங்கனும் திறந்திருக்கிறார்.
ஒரு கவிஞராக, விமர்சகராக, நாள் தவறாமல் படிக்கிற என் மரியாதைக்குரியவர் க.மோகனரங்கன். இனி அவர் கதைகளையும் வாசிக்கக் காத்திருப்பேன்.
‘அன்பின் ஐந்திணை என்கிற இந்தத் தொகுப்பை ‘ யுனைடெட் டைரட்டர்ஸ்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.