Thursday 27 August 2020

அன்னையிட்டத் தீ!

 ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான்.

பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் கொள்ளும் மனம் கூட பச்சைத்துளிர் ஒன்று வீழும்போது ஆற்றிக்கொள்ள இயலாமல் பரிதவித்துப் போகிறது. புத்த ஜாதகக் கதையொன்றில் தன் இளவயது மகனைப் பறிகொடுத்தத் தாய் ஒருத்தி வருகிறாள். ஒரே மகன் என்பதால் அவனை உயிர்ப்பித்துத் தருமாறு புத்தரிடம் அழுது அரற்றுகிறாள். அவளை அமைதிப்படுத்திய கௌதமர், மரணம் நிகழ்ந்திராத வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு வாங்கி வரப் பணிக்கிறார். அலைந்து திரிந்த பிறகும் அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும் அத்தாய் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்று அறிய வருகிறாள். ஆனால் தனக்கு முன் தன்பிள்ளை போய்விட்ட தவிப்பை அவ்வுண்மை எவ்விதத்தில் தணிவித்திருக்கும் என்பது புதிர்தான். உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கு முன் தர்க்கங்களுக்கு பெறுமதி ஏதுவுமில்லை.

முகநூலில் நான் விரும்பிப் படிப்பனவற்றுள் கவிஞர் பாதசாரியின் பதிவுகள் முதன்மையானவை. பற்றற்றதொரு நோக்கிலும் சுயஎள்ளல் தொனியிலும் அவர் எழுதிச் சேர்த்திடும் எண்ண விசாரங்கள், பல சமயங்களில் நம்முள் மென்னகையைத் தருவிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை மன இறுக்கத்திலிருந்தும் விடுப்பதாகவும் அமையும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் எழுதியிருந்த ஒரு பதிவு, வழக்கத்திற்கு மாறாக, மனதைக் கனக்கச் செய்வதாக இருந்தது

ஓராண்டுக்கு முன் பணிவு ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். கடும் மனப்பிறழ்வில், ஓயாது பேசி, உறக்கத்திலும் பேசி, நிரந்தரமாக ஓய்ந்துவிட்டார். முடிவு நிகழ்ந்தது இப்போது தான் என்றாலும் இதற்கான மூலவித்து பல வருடங்களுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது.

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போய் தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனையின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் போது வந்த தகவல் இடியென இறங்கி அவரைச் சிதறடித்தது. வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த அவருடைய ஒருவயது குழந்தை வாசலில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து மூழ்கிவிட்டது. கணவர் இவரை ஸ்கூட்டரில் கொண்டுவந்து பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு மறுபடியும் வீடு திரும்புவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்போதும் போல அவர்களோடு ஸ்கூட்டரில் முன்னால் நின்றுகொண்டு வராமல் அன்று பார்த்து வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்த பையனை கவனிக்காமல் மாமியார், நாத்தனார் கவனக் குறைவாக இருந்துவிட்டார்கள்.



கால் நூற்றாண்டு கடந்து, அந்த செவிலி பணிஓய்வு பெற்றவராக வீட்டில் உட்காரும் போது உள்ளத்தின் உள்ளே பதுங்கியிருந்த இனம்புரியாத, அறிவின் கரைதாண்டிய குற்றவுணர்வு, ஆழிப் பேரலையாக உருவெடுத்து அவருடைய மனநலனைச் சூறையாடிவிட்டது. இறந்த குழந்தைக்கு அன்று காது குத்தி, சடங்கு செய்வித்துப் புதைத்த நினைவுகள் அவர் மனதிலிருந்து நீங்கியிருக்கவில்லை.

ஒரு சாட்சி போல சம்பவத்தை விலகி நின்று விவரிக்கிற கவிஞர் கடைசியாக, ‘மனசாட்சி உள்ளவர் எவரும் குற்றவுணர்வுக்கு ஆட்படலாகாது, பட்டால் படுவினைத்துயர் அது காவு வாங்கும்’, என்று தமது பதிவை முடிக்கிறார்.

‘அனைத்து உயிரிகளிலும் அன்னை என்பவள் தான் மூர்க்கமானவள்’ என்றொரு ஆங்கில வழக்கு உண்டு. தன் குழந்தையின் பொருட்டு ஓர் அன்னை அடைய நேரிடுகிற துயரத்திற்கும் ஆவேசத்திற்கும் எல்லை ஏதும் இல்லை. அத்தகையதொரு அன்னையின் குரலாக ஒலிக்கிறது பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்ஓர் அன்ன இளையர் இருப்பப்
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டில் கிடபித்
தூவென் அறுவை போர்ப்பித் திலதே”

திணை – கறந்தை, துறை – வேத்தியல்
புறம் – 286, பாடியவர் – ஒளவையார்

‘வெள்ளாட்டுக் கிடாக்களைப் போல அவனையொத்த இளைஞர் பலர் இருந்தபோதிலும் அவர்களுக்கும் மேலாக என் மகனுக்கு வழங்கப்பட்ட கள், அவனை காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடக்க வைத்து, தூய வெண்ணிற ஆடையால் மூடச் செய்திருக்கிறது.‘ இங்கு மகனைப் பறிகொடுத்த அன்னை அழுது அரற்றினாள் அல்ல. மாறாக அவளது சீற்றம், தணிந்த குரலில் ஆனால் தணியாத வெம்மையோடு வெகு சிக்கனமாக வெளிப்படுகிறது – இக்கவிதையில். இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு இப்போது படிக்கும் போதும் உறையாதிருக்கும் அத்துக்கம் இவ்வரிகளில் இன்னமும் கசிந்து கொண்டிருப்பதை உணரலாம். இதற்கு மாறாக மன்னரால் கள் வழங்கப்பட்ட தன் மகன், அவருக்காக வேண்டிப் போரில் மரித்திடும் பேறு பெறாமல் போயினானே என அத்தாய் வருந்துவதாகப் பொருள் கொள்பவரும் உண்டு. அது போரை ,வெற்றியை, வீரத்தை சிறப்பிக்கும் முகமாக வரித்துக்கொண்ட ஆண்மைய  நோக்கினின்று பிறப்பது. ஆனால், ஒரு தாயின் ஆற்றாமை எனக் காண்போமாயின் முதற்சொன்ன பொருளே சாலவும் பொருந்தி நிற்கும்.

என்னுடைய நண்பரொருவர் பயிற்சிபெற்ற உளவியல் ஆலோசகர். தொடக்க நிலையிலான மனநலப் பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்டவர்களோடு உரையாடி, அவர்களுடைய சிக்கலின் மூலத்தைக் கண்டறிந்து தகுந்த ஆலோசனைகள் வழங்குவது அவருடைய பணி. பெயர் , ஊர் முதலிய அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு அவர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவில் ஆழப் பதிந்துபோனது.

திருமண வயதிலுள்ள இளம்பெண் பொறியியல் படித்து முடித்து பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனமொன்றில் கைநிறைய ஊதியத்துடன் பணிபுரிகிறாள் .பள்ளிப்பருவம் தொட்டு உடன் பயின்றுவரும் நண்பன் கல்லூரியின் இறுதிவருடத்தில் அவள் மீதான தன் காதலைச் சொல்கிறான். முதலில் தயங்கினாலும் அவனுடைய தொடர்ச்சியான வேண்டுதல்களுக்கு  இணங்கி சம்மதிக்கிறாள்.

சிலவருடங்கள் இனிமையாகக் கழிந்தது. திருமணம் குறித்து வீட்டில் பேச வேண்டும் என்கிற நிலை வரும்போது பையன் தயங்குகிறான். அவன் வீட்டில் அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அப்பெண்மணி முதலில் மகனின் முடிவைக் கடுமையாக எதிர்க்கிறார். பிறகு அவனுடைய மனவாட்டத்தைக் கண்டு சற்றே  இறங்கிவந்து ஒரு தீர்வை முன்வைக்கிறார். குல தெய்வம் கோவிலில் வைத்து பூ போட்டு பார்ப்பது. முடிவு சாதகமாக வந்தால் அம்மா சம்மதிப்பது, பாதகமாக வந்தால் மகன் விட்டு கொடுத்து விடவேண்டும். பையனுக்கு எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற நிலை. தலையாட்டுகிறான்.



ஒரு வெள்ளிக்கிழமைக் காலையில் சாமி சன்னதியில் அவர்கள் நினைத்துக்கொண்ட வெள்ளைப் பூவுக்கு பதிலாக சிவப்பு பூ கையில் வந்தது. பையன் தயங்கித் தயங்கி வந்து தன்னை மன்னித்துவிடுமாறு அப்பெண்ணிடம் அழாதகுறையாக வேண்டுகிறான்

“சுயமாக முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதி சார் அவன்” என நண்பரிடம் குமுறினாள் அப்பெண். “பள்ளி நாட்களிலிருந்து அப்படிதான். எந்த வண்ணத்தில் உடை எடுப்பது, என்ன உணவிற்கு ஆர்டர் செய்வது, எந்தப் படத்திற்கு செல்வது எனச் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட தயங்கித் தடுமாறுவான். நான்தான் அவனுக்காக முடிவெடுப்பேன். கைளைப் பற்றிக்கொண்டு நன்றி சொல்வான். ‘நீ இல்லாவிட்டால் நான் என்ன ஆவேனோ தெரியாது’ என்று குரல் ததும்ப அவன் சொல்லிய போதெல்லாம் நான் நெஞ்சு விம்ம நின்றிருக்கிறேன். இன்று என்னை வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக அவனால் எப்படி முடிந்தது என்று ஆத்திரம் ஒருபக்கம் வந்தாலும், மறுபக்கம் நான் இல்லாமல் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற கவலை தான் என்னைப் பெரிதாக வருத்துகிறது. வேலையில் கவனம் சிதறகிறது. வீட்டில் எல்லோரிடமும் எரிந்து விழுகிறேன். நண்பர்களைப் பார்ப்பதில்லை. வெளியே எங்கும் போவதில்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இது என் சுபாவமேயல்ல.“ கண்ணில் நீர் வழியச் சொன்னவளை நிறைய பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் கடைசியாக அவளிடம் வினவுகிறார்.

“ஒருவேளை மனம் திரும்பி வந்தால் அவனை மறுபடியும் நீ ஏற்றுக்கொள்வாயா?”

என்ன சொல்வது எனப் புரியாமல் ஒருநிமிடம் மெளனமாக யோசிக்கிறாள்.

“என்னை வேண்டாம் என்று மறுத்த போதே அவன் மீதிருந்த காதலெல்லாம் வடிந்து விட்டது. இப்போது நான் இப்படி கிடந்து அல்லல்படுவதெல்லாம் அவன் பாவம் தனியே எப்படி சமாளிக்க போகிறானோ என்கிற பச்சாதாபத்தால் தான் என்று தோன்றுகிறது.”

நண்பர் அவளைக் கண்மூடி உள்மனதை உற்றுக் கவனிக்கச் சொல்லிவிட்டு, அவள் ஞாபகத்தை மெல்ல மெல்லப் பின்னகரச் செய்கிறார்.

“நீ அவனை எப்போது முதன் முதலாகப் பார்த்தாய்? நினைவுபடுத்திச் சொல்”

அவள் மெதுவாக நினைவின் தடத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறாள். கல்லூரி நாட்களையெல்லாம் கடந்து பள்ளிப் பிராயத்திற்குள் நுழைகிறாள்.

“ம். இப்போது கவனத்திற்கு வந்துவிட்டது” தலையை ஒருதரம் உதறிக்கொண்டவளாகத் தன் கண்களைத் திறவாமலேயே சொல்கிறாள்.

“அது நடந்தது மூன்றாம் வகுப்பில். நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அவன் புதிதாக வந்துசேர்கிறான். அவனுடைய அப்பா விட்டுவிட்டுப் போன பிறகும் வாசலையே பார்த்து தேம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ‘பயப்படாதே’ என்று சமாதானப்படுத்தி பையில் வைத்திருந்த சாக்லேட்டில் பாதியைப் பிட்டு அவனுக்குத் தந்தேன்”. நண்பர் பிறகு அவளிடம் பொறுமையாக விளக்குகிறார். ‘உங்களிருவருக்குமிடையில் ஆழமான ஒரு உறவு இருந்திருக்கிறது, பொய்யில்லை. ஆனால், அது நீங்கள் புரிந்து கொண்டது போல காதல் அல்ல. சின்னஞ்சிறுவனாக அவன் அழுதுகொண்டு வகுப்பில் நின்றிருந்த முதல் கணத்திலிருந்து அவனிடம் பரிவுகாட்டியும் பாவனை செய்தும் நீ வகித்து வந்திருப்பது ஓர் அன்னையின் பாத்திரத்தைத் தான். வீட்டில் அவனுக்காக முடிவுகளை எடுப்பது அவனது அம்மா என்றால், வெளியே எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொண்டாய். இரண்டு இடத்திலும் அவனாக சிந்தித்து சொல்பட வேண்டிய நெருக்கடிகள் எதுவும் இதுவரையிலும் நேர்ந்ததில்லை. இப்போது அம்மாவா? நீயா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அம்மாவின் நிழலில் ஒளிந்து கொண்டுவிட்டான். இப்போது நீ வருந்துவதும் கூட இழந்த காதலை எண்ணி அல்ல. உன்னுடைய இந்தத் துக்கம் மகனைப் பிரிந்த அன்னையுடையதைப் போன்றதே”



அவள் அதிர்ச்சியாக நண்பரை ஏறிட்டுப் பார்க்கிறாள். அவர் புன்னகையோடு மேலும் தொடர்கிறார். ‘உனக்குக் கிடைக்காமல் போவது எல்லாமே இழப்பு என்று எண்ணாதே! சில சமயம், அது அதிர்ஷ்டத்தின் தீண்டலாகக் கூட இருக்கும் என்று சொல்வார்கள். ஒருவேளை, அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆண், பெண் உறவின் உண்மையான பரிமாணத்தை, அதன் கொடுக்கல் வாங்கலை முழுமையாக அறிந்திராமலே போயிருப்பாய். ஆனால், இப்போது எதிர்காலத்தில் வரவிருக்கும் கணவனுக்கு உகந்த மனைவியாகவும், உனது சொந்த குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கப் போகிற நல்வாய்ப்பு உன்முன் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் ”

வெகுவிரைவிலேயே அந்தப் பெண் அவ்வழுத்தத்தினின்றும் விடுப்பட்டவளாக தன் அன்றாடத்திற்கு திரும்ப வந்துவிட்டதாக நண்பர் சொல்லி முடித்தார். அதன் பிறகு பலமுறை நான் இதைக் குறித்து யோசித்ததுண்டு. மூன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு எட்டு வயதான பெண் அந்த வயதிற்கேயுரிய குழந்தைத்தனத்தையும் தாண்டி தன்வயதுடைய ஒரு சிறுவனுக்கு தாய்மையின் பரிவைக் காண்பிக்க முடிந்திருக்கிறது. அது எவ்விதம் சாத்தியமாகிறது என்று வியந்து நின்றிருக்கிறேன். பரிணாமத்தின் தொடர்ச்சி இடையில் எங்கும் அறுந்துபடாமல் இருக்க இயற்கை வரித்துக் கொண்டிருக்கும் உத்திதான் போலும் இத்தாய்மை உணர்வு என்று தோன்றியது. தாயைக் குறித்து எண்ணிறந்த கவிதைகள் நாம் படித்திருப்போம் என்றாலும் தாய்மை என்கிற பிம்பத்தை பெரிய அளவில் ரொமான்டிசைஸ் செய்யாமலும், அதே சமயத்தில், அதன் அசலான ஆகிருதியை துல்லியமாகவும் நேரடியாகவும் விவரிக்கிறது ராஜாசுந்தரராஜனின் பின்வரும் கவிதை. இது அவருடைய மொத்தக் கவிதைகள் அடங்கிய “தாய்வீடு” தொகுப்பில் உள்ளது.

அம்மா

வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்
கொதிகலன் நாள்பட நாள்பட இற்றுப்போகும்
வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்
செடிகளுக்கு
விதையிலைகள் வேண்டாதனவாகிவிடும்
குஞ்சுகள் கோழியாகும்
சேவல்கள் கூட வரும்
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்துவரும்
காற்றோடு போய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்
சாவிலும் கூட
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்


 

நம்முடைய கரிசனமும், வாஞ்சையும் நம் சந்ததிக்குத் தான் மிகுதியும் போய்ச் சேருகிறது. பெற்றோருக்கு அதில் பகுதி கிடைத்தாலே அதிகம் தான். அடைக்கப்பட முடியாதது பெற்றகடன். அதனால் தானோ என்னவோ தாய்மை பற்றின ஆக்கங்கள் அனைத்திலும் நிழலெனப் படிந்திருக்கும் ஒருவித சுய இரக்கத்தையும் குற்றவுணர்வையும் நாம் காண முடியும். பிள்ளைகளின் அந்த விலகலை உயிர் இயல்பு இதுவென பற்றற்றதொரு தொனியில் இக்கவிதை சுட்டுகிறது. இத்தொனியினாலேயே அவ்வுணர்வு மேலும் ஆழமாகிறது. ‘இனியும் பாலாகப் பாலாகத் துடிக்கும் மார்புக் குருதியின் நாடி’ என்றொரு வரி பாதசாரியின் கவிதையில் வரும். ஒரு பெண் தன் வாழ்வின் போக்கில் இயல்பெனக் கடக்கும் அந்த அனுபவம் எம் போன்ற ஆணுக்கு எவ்வளவு யோசித்தாலும் தீராத அதிசயம் தான். அதை வியப்பதன்றி வேறென்ன செய்யவியலும் அவர்களால்?

Tuesday 25 August 2020

மாமதயானை

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவை முன்னிட்டு , ஜெயமோகனும் நண்பர்கள் சிலரும் திருப்பூர் அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்குச் சென்றிருந்தோம் . செவித்திறன் இழந்த , வாய் பேசவியலாத குழந்தைகள் நூற்றுக்கும் அதிகமானோர் பயிலும் சிறப்பு பள்ளி அது .'குக்கூ' சிவராஜ் அப்பொழுது அங்கிருந்தார் அவருடைய முன்னீட்டில் 'யானை டாக்டர் 'சிறுகதையை அக்குழந்தைகள் வாசித்திருந்தனர். அந்த அனுபவத்தை தங்கள் கற்பனையின் துணை கொண்டு கோட்டோவியங்களாக வரைந்து வண்ணம் தீட்டி இருந்தனர். ஒரு வகுப்பறை முழுவதிலும் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சித்திரங்களைக் கண்டதும் நாங்கள் நெகிழ்ந்து போனோம் .சிறிதும் பெரிதுமான அளவுகளில் கறுப்பு மட்டுமல்லாது சிவப்பு ,பச்சை ,நீலம் என எல்லாவிதமான நிறங்களிலும் மிளிர்ந்தன யானைகள் . அவை எல்லாவற்றிலும் தென்பட்டதொரு ஒற்றுமை , அவை அனைத்துமே ஏகதேசமாக குழந்தமையின் சாயலை கொண்டிருந்தன என்பதுவே அல்லது அச்சித்திரங்களின் எளிமையினால் பார்த்த எனக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம். 

விழா அரங்கில் அக்குழந்தைகளின் முன் சிவராஜ் 'யானை டாக்டர் 'எழுதியவர் என்று ஜெயமோகனை அறிமுகப்படுத்தியபோது பலமாக கரவொலி எழுப்பிய அக்குழந்தைகளின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் அளவில்லாதது . தன் எழுத்துக்காக எவ்வளவோ வாசக எதிர்வினைகளை ஜெயமோகன் கண்டிருப்பார் , அவை அனைத்தையும் காட்டிலும் இக்குழந்தைகளின் நன்றி பெருக்கு நிச்சயம் தனியான ஒன்றுதான். ஒருவேளை ஜெயமோகனின் வேறு ஒரு கதையை படித்து இருந்தால் , அவர்கள் இவ்வளவு தூரம் ஈர்க்கப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே ?  யானைதான் அக்குழந்தைகளின் குதுகுலத்திற்கு முதன்மையான காரணம் என்றும் தோன்றியது. பொதுவாகவே தம்மைக் காட்டிலும் அளவில் பெரியதான உருவம் எதைக் கண்டாலும்  குழந்தைகள் முதலில் அடையக்கூடிய உணர்வு திகைப்பு அல்லது அச்சம் என்பதாகவே இருக்கும் . அதற்கு நேர்மாறாக , ஒரு யானையைக் காணும் போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள் இது வினோதமாக தெரிந்தாலும் கூட யானையின் தோற்றம் அல்லது நடத்தையில் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஏதோ ஒரு தன்மை இயல்பாகவே இருக்கிறது. அதன் ஆகிருதியைக் கண்டு மிரட்சி அடைவதற்கு பதிலாக அதனை அளவில் பெரியதொரு விளையாட்டு பொம்மை என்பதாகவேக கருதி அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்படுகிறார்கள்.

தரைவாழ் விலங்குகளிலேயே மிகப் பெரியது யானைதான். சராசரியாக 6 ஆயிரம் கிலோ வரையிலும் எடையைக் கொண்டிருக்கும் அது கோவில் மண்டபங்களில் காதுகளை அசைத்தபடி அசட்டையாக நின்றுகொண்டு ஒரு வாழை பழத்திற்காக பக்தர்களை ஆசீர்வதிக்கும் . அதன் தும்பிக்கை தனித்தன்மை வாய்ந்தது அதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. அதைக்கொண்டு மெலிந்த ஒரு குண்டூசியை கூட அதனால் தவறவிடாமல் பொறுக்கி எடுத்துவிட இயலும். ஆனால் அதுவோ பாகனால் தெருவில் நடத்திவரப்படிகையில் அந்தத் துதிக்கையை நீட்டி கடைகடையாக சில்லறை வேண்டி யாசிக்கிறது. அபாரமான நினைவுத் திறன் உடையதாகக் கணிக்கப்படும் யானையை , ஒரு கண்ணாடி முன் நிற்க வைத்தால் , அதனால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மனிதக் குரங்குகளைத் தவிர்த்து இத்தகைய தன்னுணர்ச்சி கொண்ட விலங்கு யானைதான் என்கிறார்கள் உயிரியலாளர்கள். 

அதனால்தானோ என்னவோ மனிதர்களால் எளிதில் பழக்கப்படுத்த கூடிய ஒன்றாக இது இருக்கிறது .தனது வலிமையை முழுமையாக உணர்ந்த ஆனால் அதை அநாவசியமாகப் பிற உயிர்களிடம் காட்டிடாத  ஒரு பெருந்தன்மை அதனிடம் இயல்பாகவே இருக்கிறது. ஒரு தலைவனுக்குரிய தகுதியாக அமைய வேண்டியது இத்தன்மையே ஆகும். இலகுவான சூழலில் எல்லோராலும் எளிதில் அணுகும்படியானவனாகவும் அதுவே , அசாதாரணமான தருணம் என்று  வரும்போது அஞ்சாது அதை எதிர்கொள்ளும் அளவு இறுகிய நெஞ்சத்தவனாகவும் அவன் இருக்கவேண்டும் . அவ்வையார் பின்வரும் புறநானூற்றுப் பாடலில் யானை என்கிற ஒற்றை படிமத்தின் வாயிலாக அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வாறான வலிமையும் எளிமையும் கொண்ட ஒரு தலைவனாக நமக்கு காட்சிப்படுத்துகிறார்.

 

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலின்

நீர்த்துறை படியும் பெருங்களிரு போல

இனியை , பெரும! எமக்கே; மற்றுஅதன்

துன்அருங் கடாஅம் போல

இன்னாய், பெரும!நின் ஒன்னா தோர்க்கே.

-        அவ்வையார்

புறம்-94

திணை- வாகை

துறை- அரச வாகை

 

ஊரின் கண் உள்ள சிறுவர்கள் கூடி , தனது வெண்மையான தந்தங்களைக் கழுவுவதற்கு ஏதுவாக நீர் துறையில் அமிழ்ந்திருக்கும் பெரிய யானையை போல எம்மனோர்க்கு நீ இனியவன் . ஆனால் , அதே யானை மதம்கொண்டு சினந்து எழுவதே போலும் எம் எதிரிகளுக்கு நீ இன்னாதவன் என்பதே இப்பாடலில் எளிய பொருள்

 சிங்கமாகவும் புலியாகவும் இருந்து அஞ்சி நடுங்கச் செய்வதில்லை ஒரு யானையைப் போல் வலிமை இருந்தும் சக உயிர்களிடத்தே மென்மையாக இருப்பதே மெய்யான வீரம் ஆகும் .

            +++

ஒரு கோடையில் , நண்பர்கள் சிலர் பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் அருகே , சிறிய கல் வீடு ஒன்றில் தங்கி இருந்தோம் . உப்பும் உறைப்பும் போதாது ,  நாங்களே சமைத்து உண்ட எளிமையான இரவு உணவிற்குப் பிறகு , முன் வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். மின் வெளிச்சத்தின் எதிரீடு ஏதுமில்லாத வானத்தில் , எட்டிப் பிடித்தால் அள்ளிக் குவித்து விடலாம் போலக் கொட்டிக்கிடந்த நட்சத்திரங்களை வியப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில் , திடுமென  கூப்பிடு தூரத்தில் கூச்சல் எழுந்தது . தொடர்ந்து விட்டுவிட்டு சிறிய வெடிச் சத்தமும் சேர்ந்து வந்தது.

 அந்தக் கூச்சலோடு அத்திசையில் இருந்து அணைந்து எரியும் விளக்குகளின் வெளிச்சமும் எங்களை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம் 'யானை இறங்கியிருக்கும்' உற்று கவனித்த உள்ளூர் நண்பர் சொன்னார் .சில நிமிடங்களில் நாங்கள் இருந்த  இடத்திற்கு

எதிரே , கண் எட்டும் தொலைவில் இறக்கத்தில் இருந்த பாதையில், மேலும் கீழுமாக அசையும் விளக்குகளின் வெளிச்சத்தில், உலோகத்தை தட்டுவதால் எழும் கனத்த  ஒசைக்கு  நடுவே, ஓட்டமும் நடையுமாக விரையும் யானை ஒன்றைக் கண்டோம் .காட்டின் எல்லை வரை அதைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார்கள் என்றார்  நண்பர். முன்பு அரிதாக நடக்கும் ஒன்றாக இருந்தது இப்பொழுது அடிக்கடி நிகழும் சம்பவமாகிவிட்டது . அதற்கு யானைகளைக் குறை சொல்ல முடியாது .ஒரு யானைக்கு உணவாக நாளொன்றுக்கு சராசரியாக 200 கிலோவுக்கும் அதிகமான பசுந்தழை தேவைப்படும். கூட்டமாகச் சென்று அவை உண்பதால் அழிந்து போகும் இடத்தை விட்டு பெயர்ந்து வேறு இடத்திற்கு  சென்று, செடிகள் வளர்ந்தபிறகு அவ்விடத்திற்கு அவை திரும்ப வரும் .அவ்வாறான இடப்பெயர்ச்சிக்கு உகந்ததாக அல்லாமல்  அடர்ந்த காடுகளின் பரப்பு சுருங்கி போனதாலும் அவற்றின் வலசை பாதைகள் மனிதர்களால் தடைசெய்யப் படுவதாலும் யானைகள் இவ்வாறு ஊருக்குள் திரும்பி விடுகின்றன என்றார். அவர் குரலில் , மனுஷங்க பிழைப்பே நிச்சயம் இல்லாத காலத்தில் , இதற்கெல்லாம் யார்தான் என்ன செய்துவிட முடியும் என்பதை போல வருத்தம் தொனித்தது .

 நாங்கள் சற்று நேரம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை .அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தோம். முன் இரவில் நட்சத்திரங்களின் மெல் ஒளியில் , ஒரு பெரிய கரிய நிழலைப் போல நகர்ந்து சென்ற அப் பேறுருவைப்  பார்த்தது , ஏதோ ஒரு கனவு போல தோன்றியது. வெகு காலம் முன்பாக படித்திருந்த கதை ஒன்று எனது நினைவில் எழுந்தது .

 ஒரிரண்டு நல்ல கதையோ கவிதைகளோ எழுதிவிட்டு , அதன் பிறகு காணாமல் போய்விடும் எத்தனையோ பேர் தமிழில் இருக்கிறார்கள். கோவில்பட்டியை சேர்ந்த கௌரிசங்கர் அவர்களில் ஒருவர் . முழுவதும் கறுப்புத் தாள்களில் வெண்ணிற எழுத்துகளால் அச்சிடப்பட்டு வந்த அவருடைய கவிதைத் தொகுதியான ' மழைவரும் வரையில் ' அது வெளியான காலத்தில் அதிகமும் கவனிக்கப்பட்டது. கூடி வராத நேசம் குறித்த இழப்புணர்வை கழிவிரக்கம் தொனிக்காததொரு விட்டேற்றியான குரலில் பேசுபவையாக அமைந்தவை அக்கவிதைகள் என்று நினைவு. அவரது சிறுகதைத் தொகுப்பும் வெளியாகிருந்தது. தலைப்பு கதையாக அமைந்த 'முந்நூறு யானைகள்' என்ற சிறுகதை மெர்ஸி என்கிற பதின்ம வயதுப்பெண்ணைப் பற்றியது .

 அவ்வயதிற்கே உரிய பேதமையும் விளையாட்டுத்தனமும் அதே சமயத்தில் , பார்க்கின்ற ஆண்களை எல்லாம் பேதலிக்கச் செய்கிற அழகும் நிரம்பியவள் அவள்.  எல்லா அழகிகளைப் போலவும் அவளைக் குறித்தும் உண்மையும் கற்பனையுமாக பல வதந்திகள் ஊரில் உலவுகிறது. அக்கதையில் மெர்ஸி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு வந்த கனவு பற்றி தன் சினேகிதி தனசீலியிடம் விவரிப்பாள். ' நேற்று இரவு என் வீட்டுத் தோட்டத்தில் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு  யானைகள் வந்து நின்றன. அவ்வளவையும்வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் இருநூறு முந்நூறு என்று கொடுத்து அனுப்பியதில் தோட்டம் காலியாகிவிட்டது' என சிரித்துக்கொண்டே சொல்கிறாள் கனவில்தான் என்றாலும் , யானைகளைத் தூக்கிக் கொடுக்க எவ்வளவு விசாலமான மனம் வேண்டியிருக்கும். அந்த மனமே பிறகு அவளது அத்தனை துயரத்திற்கும் காரணமாக எப்படி அமைந்துவிடுகிறது என்று அந்தக் கதை விவரித்து போகும் .

 பாம்பு துரத்துவது , பள்ளத்தில் விழுவது என நம்மில் பலருக்கும் வரும் பொதுவான கனவுகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் அறிமுகமற்ற புதிரான ஒரு இடத்தில் வெளியேற வழி தெரியாமல் நாம் அகப்பட்டுக் கொண்டு தவிப்பது போல் வரும் கனவு. அறிமுகமற்ற ஒரு நகரத்திற்கோ, பணிக்கோ பந்தத்திற்கோ அல்லது பழக்கத்திற்கோ  நாம் ஆட்படும்போது ,  அறியத் துடிக்கும் ஆவலில் உள்நுழைந்து விடுவது எளிதாக இருக்கும்.  அகப்பட்டுக் கொண்டதாக ஒரு அச்ச உணர்வு எழும்போது பார்த்தால் , திரும்பும் வழி தெரியாது திகைத்து நிற்போம். போகிற வழியில்தான் திரும்ப வருகிறோம் என்றாலும் இரண்டும் ஒன்றல்ல அவை இரண்டு  வெவ்வேறு பயணங்களால் ஆனது .

 கல்யாண்ஜியின் பின்வரும் கவிதையிலும் ஒரு யானை அவ்வாறு ஒரு வாசல்வழி நுழைந்துவிட்டு வெளியேற வழி தெரியாமல் அகப்பட்டுக் கொள்கிறது. 

சொப்பன வாசல்

________________

 உங்களுக்குத் தெரியும்

எங்கள் வீட்டுத் தலவாசல்

சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை

சொப்பனத்தில் வந்த யானையை

வெளியே விரட்டுகிறோம் எல்லோரும்

' இவ்வளவு சின்னவாசல் வழியாக

எப்படிப் போவேன்? ' அழுகிறது.

' போகிற வாசலாக அல்ல,

வருகிற வாசலாக நினைத்துப்

போ ' என்கிறோம்

போய்விட்டது சிரித்துக்கொண்டே

        - கல்யாண்ஜி

    ( நொடி நேர அரை வட்டம்)

 

ஒரு தீற்றல் கூடுதலோ குறைவோ இன்றி துல்லியமாக வரையப்பெறும் ஒவியங்களை ஒத்தவை கல்யாண்ஜியின் பெரும்பாலான கவிதைகள் . இக் கவிதையும் அத்தகைய கச்சிதமான காட்சித்தன்மை கொண்டதே.ஒரு சொல்லையும் கூடுதல் குறைவென்று ஒதுக்கவியலாது.நிற்க இதிலும் ஒரு யானை வெளியேறும் வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. நினைத்தால் வாசலென்ன வீட்டையே கூட அதனால் அசைத்து தகர்த்துவிட முடியுமாகயிருக்கும். ஆனால் அதுவோ வழி தெரியாமல் அழுகிறது . ஒரு குழந்தையைப் போல. தெரிந்த பிறகோ சமாதானமடைந்து சிரிக்கிறது . அதுவோ இன்னும் குழந்தையைப் போலிருக்கிறது. தன் உருவத்திற்கு சம்மந்தமில்லாத உள்ளம் கொண்ட உயிரி அது.அதனால்தான் போலும் 'இயற்கையின் உன்னதமான படைப்பு யானைதான் , தீதொன்றுமிலாத பேருரு அது ' என்று ஆங்கிலக் கவி ஜான் டன் விதந்து கூறுகிறான்.

 நிர்வாகவியலில் 'சட்டகத்திற்கு  வெளியே சிந்தித்தல்' என்றொரு கருதுகோள் உண்டு . சிக்கலான பிரச்சினைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட மரபான வழியாகவே தீர்வுகாண முயல்வதை விடவும் ,  முறை சாராத யோசனைகள் மூலம் சமயங்களில் மிக எளிதான தீர்வைக் காண முடியும் என்கிறது அது. போகிற வழியையே வருகிற வழியாகவும் எண்ணிக் கொள் என்று இக்கவிதையில் அத்தகையோர்  யோசனையைதான் கவிஞர் முன்வைக்கிறார். முதல் வாசிப்பிற்கு இது ஏதோ மொழி மாற்றம் என்று தோன்றலாம் . ஆனால் அது எண்ணம் சார்ந்த மாற்றமாகவும் பிறகு செயல் சார்ந்த மாற்றமாகவும் ஆகும்போது வழி கிடைத்து விடுகிறது .

 டினோசரை  நெருங்குவது எப்படி ? என்கிற கேள்விக்கு ,  அது நம்மை நெருங்க செய்வதுதான் என்கிறார் தனதொரு கவிதையில் தேவதச்சன். இது கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் , அதற்கு நாம் ஒரு வனமே ஆகுமளவிற்குப் பொறுமையுடனும் நிபந்தனையற்றும்  காத்திருக்க வேண்டும் . டினோசரை நெருங்குவதற்கு மட்டுமல்ல ஒரு கவிதையை நெருங்குவதற்கும்  கூட.