Tuesday 24 July 2018

கபாடபுரம் - இதழ் 2

நம் புலப்பெயல்




















இறுதி மட்டும்
இணையவேப் போவதில்லை
எனத்தெரிந்த பின்னும்
விட்டு விலகாது
நெடுங் கோடுகளென
நீளக் கிடக்கும்
நம் உடல்களின் மீது
தட தடத்துக் கடக்கும்
இருப்பூர்திப் பெட்டிகளில்
தொலைதூரம் சென்று
மறையட்டுமென நாம்
நிறைத்து அனுப்பிய
ஏக்கப் பெருமூச்சுகள்தாம்
கண்ணே
உலர்ந்த இந்நிலம் முழுவதையும்
ஒருசேர நனைக்கவல்ல
பெரு மழையை
அடிவானத்தில்
கருக் கொள்ளச் செய்கின்றன.

திருவிளையாடல்

நெஞ்சு வெடித்து
சாகப் போகுமுன்
அவன் கேட்டான்
`என் தெய்வமே
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?’
காதில் விழாததுபோல
பாவனை செய்த கடவுள்
கடமையே கண்ணாக
தனது அடுத்த
அற்புதத்தை நிகழ்த்த
புதியதொரு
பூஞ்சையான இதயத்தை
தேடத் தொடங்கினார்

நெஞ்சொடுபுலத்தல்












உற்றாரும்
மற்றோரும் கூடியிருக்கும்
மன்றப் பொதுவில்
நோக்கெதிர் நோக்காது
ஊடி
என்னெதிரே
ஏதிலார் போல்
புறங்காட்டி நிற்கும்
மயக்குறு மின்மகளவள்
மயிற்தோகை கழுத்தில்
மடலவிழ்கிறதென்
மையல்.

கபாடபுரம் இதழ் 2

No comments:

Post a Comment