Monday 22 October 2018

புதிய பிரமைகளைத் தேடி



வாழ்வு என்கிற பெயரில் வழிவழியாக நாம் உருவகித்து வைத்திருக்கிற பிரமைகளை, நுட்பமான கேள்விகளின் வாயிலாக கலைத்து மாற்றுவதோடு அல்லாமல் இக்காலத்திற்கேற்ற புதிய பிரமைகள் உருவாக்கி அளிப்பவராகவும் இருக்கும் போகன் நவீன தமிழ்க்கவிதையின் இளம் தலைமுறை அடையாளங்களில் ஒருவர். இளமைக்கேயுரிய வேகத்தையும் வேறொன்றை நாடும் வேட்கையையும் இவருடைய கவிதைவரிகளில் காணலாம்.

 நூல்களாக அச்சில் வெளிவருவதற்கு முன்பாகவே முகநூல் வாயிலாக இவர் கவிதைகள் பலருக்கும் பரிச்சயம். ஓரிரு வரிகள் கொண்ட குறுங்கவிதை களிலிருந்து சிலபக்கங்கள் நீளும் நெடுங்கவிதைகள் வரையிலும் ஒரே நாளில் ஏழெட்டு கவிதைகள் பதிவிடுவதை பார்த்ததுண்டு. நிறைய எழுதும்போது வகை மாதிரி வடிவங்களில் அகப்பட்டுக் கொண்டு தன்னைத்தானே பிரதிசெய்யத் தொடங்கி எழுத்தின் சாரம் நீர்த்துப் போய்விடக்கூடிய அபாயம் அதிகம். ஆனால் ஏராளமாக எழுதியும் வடிவத்திலும் உணர்வின் வண்ணங்களிலும் அவரால் வேறுபாடுகள் எளிதாக காட்டிவிட முடிகிறது என்பது வியப்பே.

 அவருடைய முதல்தொகுப்பி்லுள்ள முக்கியமான கவிதைகளில் ஒன்று ‘சுழி’ அது பின்வருமாறு தொடங்குகிறது.

தாமிரபரணி ஆற்றில்
மழைக்காலத்தில்
என்னென்னவோ
மிதந்துவருகிறது
மரக்கிளைகள்...
பூ...
செத்தை...
அசங்கியம்...
கண்களை அசையாமல்
வானத்துக்கு காட்டிக்கொண்டு போகும் மாடு..
(எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.15)

போகன் கவிதை மொழியும் இப்படியாக நுரைத்து போகும் புது வெள்ளம் போன்றதே, இதன் ஓட்டத்தில் அழகு, அசிங்கம், காதல், காமம், துயரம் மகிழ்ச்சி, வலி இன்பம் என நாலாவித உணர்வுகளும் அதன் இயல்பான கச்சாத்தன்மை மிதந்து வருவதை காணலாம்.

எந்த ஒரு கவிஞனுக்கும் அவனுடைய யோசனைகளும், நினைவுகளும் அலையவென்று மானசீகமானதொரு மேய்ச்சல் நிலம் இருக்கும். அதன் விஸ்தீரணமே அக்கவிதைகளின் வீச்சை தீர்மானிப்பதாக அமையும். அவ்வகையில் நோக்கும்போது போகன் தனது கவிதைகள் ஊடாக உருவகித்துக் காட்டும் அகநிலம் வித்தியாசமானது. சற்று விபரீதமானதும் கூட. மேலெழுந்தவாரியான அமைதிக்கும் திருப்தியுணர்வுக்கும் அப்பால் கொந்தளிப்பும், நிம்மதியின்மையுமே இவரது கவிதைகளின் அடியோட்டமாக இழைகிறது எனலாம்.

பொதுவாக புதிதாக ஆற்றில் இறங்குபவர்கள் கரையோரமாக, பாதுகாப்பான எல்லைக்குள்ளாகவே நீந்துவதுதான் வழக்கம். ஆனால் போகன் அதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஓட்டத்தின் மையத்தை நோக்கி தாவுகிறவராகவே இருக்கிறார். அவ்விடத்தில் உடுதுணி மாத்திரமல்ல. சமயத்தில் ஆளே இழுபட்டு போய்விடக்கூடிய ஆபத்தும் உண்டு. இந்த சாகச உணர்வும் அது சார்ந்த அடைதல்களும் சரிவுகளும் இவருடைய கவிதைகளின் இயல்பாக அமைந்து விட்டிருக்கின்றன.
கலை என்பதன் அடிப்படையே ‘மாறுபட்ட பார்வை’ என்கிற கோணத்திலிருந்துதான் பிறக்கிறது. விஷயங்களை காண்பதிலும், முன்வைப்பதிலும் பிறரிடமிருந்து எவ்வளவுக்கு வேறுபடுகிறான் என்பதை பொருத்தே ஒரு கலைஞனின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஆக ஒரு கவிஞனின் விலகல் அல்லது கோணல் என்பது அவனுடைய தனித்துவமாக எழுத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது எனலாம். இதை ‘வக்ரோக்தி’ என்று சிறப்பித்துக் கூறுகிறது வடமொழி இலக்கணம்.

வெள்ளை நாடா தெரியும்
கிழிந்த பாவாடை சிறுமியும்
அவள் கோல்் இழுத்து கூட்டிப் போகும்
குருட்டு தகப்பனும்
மழையில்  எங்கோ
சிரித்த வண்ணம் அவசரமே இன்றி போகிறார்கள்
அருகில் ஒரு நாய்க்குட்டி
வாலைச் சுழற்றியபடியே
ஏறக்குறைய அவர்கள் கால்களுக்குள்
விழுந்து விழுந்து
எழுந்து ஓடுகிறது
பாய்லரிலிருந்து எழும்
தேநீர் புகை பரந்து
இன்னொரு நாய்க்குட்டி போல்
அவர்கள் பின்னால் போகிறது
எனக்கேனோ கடை தெருவில் இருந்து எழுந்து
இயேசுநாதர்கள் பின்னால் போகும்
சீடர் பரம்பரை அது நினைவுபடுத்துகிறது

தகப்பன் எப்பொழுதும் சிரித்தபடி தான் இருப்பார்
சிரிப்பல்ல
குருடர்களுக்கு உரிய முகத் தசை இழுப்பு
என்பார் மருத்துவ நண்பர்
ஆனால் இம்முறை அது சிரிப்பே தான் என்பதில்
எனக்கு கொஞ்சம் நிச்சயம் உண்டு
அது இல்லாவிட்டால்
நான் இந்த மழைக் காலத்திற்குள்
செத்துப் போய் விட மாட்டேனா?
(நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.15)

நெகிழ்வான ஒரு காட்சி சித்திரமாகத் தொடங்கி விரியும் இக்கவிதையில், அந்த நெகிழ்ச்சி உணர்வை அவ்விதமாகவே வாசிப்பவர்களும் அடைய தடையாக குறுக்கிடுகிறது, ‘அது சிரிப்பல்ல குருடர்களுக்கு உரிய முக தசை இழுப்பு’ என்கிற ஒருவரி. அந்த குறுக்கீடு அல்லது கோணலிலிருந்து தான் இக்கவிதையின் கோணம் பிறிதொன்றாக துவங்குகிறது.
நிலையானது என நாம் நம்புகிற இந்த வாழ்க்கை விபத்தொன்றினாலோ, நோயினாலோ, நொடியில் கலைந்து போய் விட கூடிய சாத்தியங்கள் கொண்டது. அத்தகைய தருணங்கள், அவை தரும் பதற்றங்கள் அதன் காரணமாக உருவாகும் மனச்சோர்வு, அச்சமூட்டும் கற்பனைகளைச் சற்று அழுந்தவே விவரிப்பதால் உருவாவதே போகனின் மொழி. அமானுஷ்யம் என நாம் கருத சாத்தியம் உள்ள உணர்வுகள் போகனின் கவிதைகளில் யதார்த்தமாக விரிகிறது.

சற்றேப் பதம் மீறிக்
கடுத்துவிட்ட
வெந்நீரின் சுகந்தம் எழுப்பி
குளிரால் உறைந்த அறையை
இதமாய் அலம்புகிறது.
சதா கோபக்கார புருஷனால்
பீடிக்கப்பட்டு துக்கிக்கும்
பக்கத்து வீட்டுப் பெண்
அபூர்வமாய் விடுபட்டு
குளியலறையிலிருந்து
ஒரு மலையாளப் பாடலை பாடுகிறார்
நீண்ட நாள் காணாமல் போயிருந்த
வாலில் வானம் காட்டும் குருவி
சிணுங்கும் சாரலையும் மீறி
மீண்டும் வந்து
துணிக்கொடியில் அமர்ந்துகொண்டு
ஆடி பார்த்து கொண்டிருக்கிறது
ஒருவன்
தற்கொலை செய்யவிருக்கும் நாள்
இப்படி தொடங்கக் கூடாது
என்று நினைக்கிறான் அவன்
 (எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.14)

படிக்கும் நமக்கும் கூட ஒரு நல்ல கவிதை இப்படி முடியக் கூடாது என்றுதான் தோன்றுகிறது. மேலெழுந்தவாரியான பார்வைக்கு உடலின் நோய்மையை, மனதின் பீதியை அவை உருவாக்கும் அவநம்பிக்கையை, திரும்பத் திரும்ப பேசுவதன் வழியாக வாழ்க்கையின் வியர்த்தத்தை, அதன் அபத்தத்தை, முன்வைப்பதாக தோன்றும் இவரது கவிதைகள் நேர்மாறாக அவற்றின் ஆழத்தில் வாழ்வின் அபூர்வத்தை, அரிதாகவேணும் அது நல்கும் ஆன்ம வெளிச்சத்தை அடிக்கோடிட்டு காட்டுபவனகவே அமைந்துள்ளன. பின்வரும் கவிதையை அதற்கு ஒரு உதாரணமாக சுட்டலாம்.

ஒலியில்லா
ஒரு கண்ணைச் செய்வது
ரொம்ப கஷ்டம்
என்பதை பரிணாமமும் உடல் கூறும் படித்தவர்கள் அறிவார்
கடவுள் ஒரு கண்ணைச் செய்ய
மில்லியன் வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டான்
ஒளி தனியாகத் தன்னை அறியஇயலாது
என்று புரிந்துகொள்ள அவனுக்கு கொஞ்சம் தாமதமாயிற்று
ஆனாலும் இவர்கள் அதை செய்துகொண்டே இருக்கிறார்கள்
கடவுளைவிடவும் சீக்கிரமாக
கடவுளைவிடவும் நேர்த்தியாக
செய்த கண்ணை
பிறருக்கு கொடுப்பது
அதைவிட ரொம்பக் கஷ்டம்
ஆனாலும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்
அந்தப் பக்கம் வருகிற ஒவ்வொருவருக்கும்
நீங்களோ மறுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்
காலில் போட்டு மிதிக்கி்றீர்கள்
போதாதென
முகத்தில் காறி வேறு துப்புகிறீர்கள்
எனினும்
துடைத்துவிட்டு மீண்டும்
தடவி தடவி அவர்கள்
வேறொரு கண்ணை செய்ய ஆரம்பிக்கிறார்கள்
(தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக்.19)

கண்களால் நாம் சாதாரணமாகப் பார்த்து முடிந்தவைகளுக்கப்பால் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. உள்ளத்தால் மட்டுமே அறிய முடிய கூடிய அதை உணர செய்வது என்பதுவும் ஒரு நல்ல கவிதையின் தன்மை அவ்வகையில் இது போகனின் நல்ல கவிதைகள் ஒன்று.
சமகால உரைநடை எழுத்து மற்றும் சம்பிரதாய மான பேச்சு வழக்கிலிருந்து தனக்கான வெளிப்பாட்டு மொழியை உருவாக்கி கொண்டிருக்கும் போகன் தனது தர்க்கபோதம் மற்றும் காட்சிப் படிமங்கள் வாயிலாக தனது கவித்துவத்தை உருவாக்குகிறார். பரிச்சயமழிப்பு, முரண்தர்க்கம், எதிரிடை இணைவுகள் போன்றவை வெறும் உத்திகளாக தனித்து துருத்திக்கொண்டு தெரியாமல் விவரணை மொழியோடு வெகு இயல்பாக இயைந்து நிற்கின்றன. இதனால் உருவாகும் புத்துணர்ச்சியும் பிறிதொன்றில்லாதத் தன்மையும் இவர் கவிதைகளுக்கு தனி வசீகரத்தை தருகின்றன.
உடலின் தாபத்தை காமமென்றும் உள்ளத்தின் தவிப்பை காதலென்றும் பகுத்து எளிதாகப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் இத்தகைய கார்டீசியப் பிளவு சாத்தியமாவதே இல்லை. ஒன்றின் ஓங்குதலில் மற்றொன்று ஒடுங்கிக் கிடக்கும் தருணங்கள் மாத்திரமே உண்டு. தன் கவிதைகளில் இன்னமும் சற்று நகர்ந்து சென்று, உடல் மீதான வேட்கையை வாழ்வின் மீதான பற்றுதலாக, மரணத்திற்கான எதிரிடையாக முன்நிறுத்துவதைக் காணமுடிகிறது.

வெட்டிக் கொல்ல வேண்டும்
அல்லது
ஒரு பெரிய ஆறுபோல
உன் தொடைகளில்
குருதி வழிய
மிக வலுவாக
உன்னைப்
புணர வேண்டும்
என்று தோன்றுகிறது
வேறு தருணங்களில்
செத்துப் போகவேண்டும்
அல்லது
ஒரு சிறிய சவரக் கத்தியால்
ஆணுறுப்பை அறுத்துக் கொள்ளவேண்டும்
என்று கூட
……
 (எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.69)

ஆனையுரித்துத் தின்னும்
யாளிகள்
ஏன் எப்போதும்
குறிகள் விறைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களாகவே இருக்கின்றன
என்று
நேற்று
அந்தப் பழமை வாய்ந்த கோயிலுள்
வைத்துத் தோழி கேட்டாள்
கொல்வதில் நிறைய காமம்
உள்ளது
என்று
சொன்னதோடு அப்போது
நிறுத்திக் கொண்டேன்
…………’
 (எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.96)

வாழ்க்கை மிக அருகில்
மரணத்தைப் போலவே இருக்கிறது
புனலூர்ச் சாலையில்
விலாவெலும்புகள் தென்னிய
அடிமாடுகள் வரிசை
சிறு குழந்தைகள் போல
குதித்தெழும் மார்புகள்
பற்றி கவலையுறாது
தலைவாரும் இளம்பெண்ணை
மவுனமாக கடந்து செல்கிறது’.
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.44)

இந்த எதிர்வும்கூட மேற்கத்திய உளவியல் முன்வைக்கும் பார்வையினின்றும் பிறப்பதுவே. நம் மரபு இம்முரணை ஒன்றை மற்றதின் நிரப்பியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ காண்பதன் வழி நேர்மறையாக இதை எதிர்கொள்கிறது எனத் தோன்றுகிறது. போகன் தனது வாசிப்புத்தேடலின் போக்கிலோ அல்லது ஆன்மிக நாட்டத்தின் ஒரு பகுதியாகவோ நம் மரபை சற்றுத் தேடி படித்திருக்கிறார். என்றபோதிலும் அவரது கவிதைகளில் அதன் தத்துவார்த்தமான சுவடுகளையோ, மொழிரீதியிலான பாதிப்புகளையோ அதிகம்  காணமுடிவதில்லை. ‘சிறுகை அளாவிய கூழ்’ என்று ஒருவரி மட்டுமே விதிவிலக்காக கண்ணில் பட்டது. இதை ஒரு விமர்சனமாக அல்ல அவதானிப்பாக மட்டுமே முன்வைக்க முடியும். ஏனெனில் எழுத்தில் எதைத் தேர்வது என்பது கவிஞனின் தனிப்பட்ட சுதந்திரம். தவிரவும் அத்தகைய சுதந்திரமும் கூட முழுவதுமாக அவன் வசமில்லை. அவனால் முழுமையாக நிர்வகிக்க முடியாத உள்ளுணர்வும், ஆழ்மனமும் கூட அத்தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருக்கும் போது தந்தையை தவிர்க்கவும் விலக்கவும் செய்துவிட்டு, அவர் இல்லாமல் போன பிறகு தேடும் மகனின் தவிப்பு என்பது ஒரு ஆதாரமான உணர்வு. இளமை கழிந்து நடுவயதிற்குள் நுழைகையில் ஒவ்வொரு ஆணும் கடந்துவரவேண்டிய அடையாளச் சிக்கல் அது. காஃப்காவிற்கு பிறகு நவீனத்துவ இலக்கியத்தில் இந்தத் தத்தளிப்பிற்கு செவ்வியல் அந்தஸ்து கிடைத்துவிட்டது. நம் மரபில் தந்தை என்கிற அடையாளம் என்பது கடவுளரை நிகர்த்த ஒன்று. எனவே அதை எதிர்க்க முனைவது என்பது பாவகரமான காரியங்களில்  ஒன்றாகிவிடும். தமிழில் புதுமைப்பித்தன்தான் அந்தக் கணக்கை முதலில் துவங்கி வைக்கிறார் என நம்புகிறேன். சுகுமாரனின் கவிதை ஒன்றில் வரும் ‘கழுதைப்புலி’ என்கிற படிமம் அந்நாளில் தந்த அதிர்ச்சியும் அதிகம்தான். போகனின் கவிதைகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட தருணங்களில் அப்பாவைப்பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

கொஞ்ச நாட்களாக
அப்பாவுடன் அதிகம்
பேசிக் கொண்டிருக்கிறேன்
அப்பா இறந்து வருடங்களா்யிற்று
மனைவி கவனித்து
மருத்துவரிடம் போகலாமா
என்கிறாள் கவலையுடன்
உயிரோடிருந்த போது
அப்பாவும் நானும்
ஒருவருடம் முழுக்க
ஒரேவீட்டில் இருந்து கொண்டு
பேசாமல் இருந்தோம்
இப்போது நானும்
என் மகனும்
இருப்பது போல...’
(எரிவதும் அணைவதும் ஒன்றே : பக்.51)

நேற்று திருவனந்தபுரம் ஜெனரல் ஆஸ்பத்திரியில்
இங்கே முடிவெட்டுகிற கடை
எங்கிருக்கிறது
என்று கேட்ட முதியவரை விட்டு
விரைந்து விலகி ஓடினான்
அப்பா கடைசியாய்
மரணப் படுக்கையில் விழும் முந்திய நாள்
எழுந்து போய்
முடிவெட்டிக் கொண்டார்
ஒரு சினிமா பார்த்தார்
என்ன சினிமா என்று பெயர் கேட்டபோது
மறந்து விட்டது என்றார்
அது ஒரு தெலுங்குசினிமா என்று
பிறகு அவன் கண்டுபிடித்தான்’
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்48)

அப்பாவைப் போலவே இருந்த
மனிதருக்கு
பேருந்தில் இடம்தர மறுத்துவிட்டேன்’
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.44)

தந்தையைப் பற்றிய நினைவு அதன் நீட்சியின் ஒரு குற்றஉணர்வாகவும், நோய்த்தன்மையாகவும் மாறுவதோடல்லாமல் பிறகு அதுவே அடையாள மீட்சியாகவும், ஆறுதலாகவும் ஆகும் ஒரு பயணத்தை இவருடைய கவிதைகளிலி்ருந்து நாம் உருவகித்துக் கொள்ளமுடிகிறது.
நான் ஏன் நல்லக்கவிஞன் இல்லை என்பதற்கு நான் நல்லவன் இல்லை என்பதைத்தவிர வேறுகாரணம் சொல்லுங்கள்’ என்று கேட்கும் போகன் சங்கரின் கவிதைகளில் அழுத்தமாகத் தெரியும் ஒரு பண்பாக அதன் ‘சினிக்கல்’ தன்மையைக் குறிப்பிடலாம் அந்த ஆங்கிலச் சொல்லிற்க்கு எல்லாவற்றிலும் குறை காணக்கூடிய, இன்பட்டத்தை அவ்வளவாக விரும்பாத, நன்மையில் நம்பிக்கையில்லாத, சிடுசிடுப்புத்தன்மையுடைய என்றெல்லாம் அகராதி பொருள் சுட்டுகிறது. இக்குணங்கள் ஒருவரின் சொந்த வாழ்க்கையில் இருந்தால் அது குறையாகத் தோன்றக் கூடும். ஆனால் இலக்கியத்திலோ அது நிறையாகவே அர்த்தப்படும்.

மிக பரிசுத்தமான சுகந்தம் வீசும்
ஒரு பெண்ணை நேற்று சந்தி்த்தேன்
எல்லாப் பரிசுத்தத்திற்குப் பின்னாலும்
மிக நேர்த்தியான
ஒரு கழிநீர் வடிகால் அமைப்பு இருக்கிறது
என்றா்ள் அவள்’
 (தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக்.50)

ஒரு மழைக்குப்பிறகு
ஒரு கூடலுக்குப்பிறகு
ஒரு கவிதைக்குப்பிறகு
சூழும் அமைதியின் பரிசுத்ததை
தாங்க முடியாமல்தான்
வெளியே வந்து
இந்த சேற்றைப்பூசிக் கொள்கிறேன்
(தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக்.72)

 நமக்கு எப்போதும் வழங்கப்படும் எளிய சமாதானங்களுக்கும், ஒளி பொருந்திய உண்மைகளுக்கும், பின்னால் இருக்கும் நிம்மதியின்மைன்யை, நிழலை பார்க்கக் கூடிய கண் என்பது காட்சியைக் குறையாகவேக் காணும். அதனாலேயே பலசமயங்களில் நம் மனசாட்சியை தொந்தரவு செய்வதாகவும் அமையும். கலையின் அடிப்படையான பண்புகளில் ஒன்று அது.

புனைவியின் சாத்தியங்களையும், கதைக்கேயுரிய மனிதர்களின் முகங்களையும் கவிதையின் தருணங்களுக்குள்ளாக வரைந்து பார்ப்பதன் வழியாக, கவிதையின் வடிவ இறுக்கத்தை சற்றே கிழ்த்தவும் நீட்சி யடையச் செய்யவும் முயன்று பார்த்திருக்கிறார் போகன். அவ்வகையில் காட்சி அனுபவம் தரும் குறுங்கதைகளை போல விரியும் சில நீளமான கவிதைகள் அவருடைய தொகுப்புகளில் உண்டு.

அழுகிய வாதாம் பருப்பு வாசனை’ எனத் தொடங்கும் கவிதை
 (தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக் 38-43)

‘1995’ என்ற தலைப்பிட்டகவிதை
 (தடித்த கண்ணாடி அணிந்த பூனை : பக் 86-87)

கிருஷ்ணன் தம்பி’ எனத் தொடங்கும் கவிதை
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக் 46-48)

அளவுகள்’ என்ற தலைப்பிட்டகவிதை
 (நெடுஞ்சாலையை மேயும் புள் : பக் 90-92)

கவிதையில் கதை சொல்லும்போது உருவாகும் சாதகபாதகங்களை இக்கவிதைகளை முன்னிறுத்தி நாம் யோசித்துப் பார்க்கலாம்.
கறாரான மொழிப்பிரக்யோ, சீரான காட்சித்றுதன்மையோ  கொண்டவை அல்ல போகனின் கவிதைகள். உள்ளடக்க ரீதியிலான உத்தேசமான பகுப்புகளுக்கும் கூட அடங்காமல் திமிறியும், வழிந்தும் நழுவுபவை அவை. காற்றின் போக்கிற்கு ஏற்ப பற்றி ஏறும் தீயைப் போல அந்தத் தருணத்து உணர்வெழுச்சிக்குத் தக மொழியில் தொற்றி நீளுபவையாகவே இவருடைய கவிதை வரிகள் அமைகின்றன.

நீங்கள் பிறந்ததிலிருந்து வாழும் வீட்டில்
நீங்கள் அறியாத
ஒரு அறையை
உங்கள் காதலி
கண்டுபிடிக்கிறாள்’
(நெடுஞ்சாலையை மேயும் புள் : பக்.57)

 ஒரு நல்ல கவிதை செய்வதும் அதுவே. நாம் பிறந்ததிலிருந்து உடனிருக்கும் மனதில் நாம் அதுகாறும் அறிந்திராத ஒரு அறையில் நம்மை விழிக்கச் செய்கிறது. புனைவின் சாயல்களை வாழ்வின் தருணங்களில் கூட்டிப் பார்க்கும்போது ஒரு மாய அழகு பிறக்கிறது. அது போகனின் கவிதைகளில் பல இடங்களிலும் மிளிர்கிறது.