Monday 26 October 2020

தந்தையர்களும் தனையர்களும்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு கல்லூரிக்குச் சேர்க்கை விஷயமாக நண்பர்கள் இருவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன் . ஒருவர் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர், என்னைக் காட்டிலும் பத்து வயது மூத்தவர். மாலைநேரக் கல்லூரியில் என்னுடைய வகுப்புத்தோழராக இருந்தவர். மற்றவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளை மேலாளர். இருவரும் தங்களுடைய நேரடிப் பொறுப்பின் கீழ் ஒரு குட்டி அலுவலகத்தையே கட்டிக்காத்து வந்தார்கள். வெவ்வேறு துறையில் பணிபுரிபவர்கள் என்றாலும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

காரில் ஏறிஅமர்ந்ததுமே இருவரின் பேச்சும் அவர்களுடைய குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. காரை மேலாளர் ஓட்டிக்கொண்டிருந்தார். அருகில் உதவிப் பொறியாளர் உட்கார்ந்திருந்தார். நான் பின் இருக்கையில் சாய்ந்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“என் பையன் இப்பதான் சுவரைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறான்!"

"என் பையன் என்னைப் பார்த்ததும் ஒடி வந்து காலைக் கட்டிக்குவான்!"

“என் பையனுக்கு 'ப்' வராது. அபான்னுதான் கூப்புடுவான்"

"என் பையனுக்குப் போனவாரம் காய்ச்சல் வந்து ரொம்பப்படுத்திடுச்சு"

"என் பையனுக்கு அடுத்த மாசம் மொட்டை போட்டுறலாம்னு இருக்கேன். முடி இப்பவே கண்ணை வந்து மறைக்குது “

“என் பையனுக்கு இப்பதான் மேல மூணு பல்ல முளைச்சிருக்கு “


இருவரும் மாறிமாறித் தம் மழலைச் செல்வங்களின் மகாமியங்களைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்தார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை . குழந்தைகள் என்று இருந்தால் ஆடவும் பாடவும் அழவும் சிரிக்கவும் தானே செய்வார்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று இவர்களிருவரும் இப்படி மாறி மாறி மாய்ந்து போகிறார்கள்? ஒன்றும் விளங்காமல் கேட்டுக் கொண்டு வந்தேன். இத்தனைக்கும் இரண்டுபேரும் அலுவலகத்தில் இருக்கும்போது இறுக்கமான முகத்துடனும், குறைவாகப் பேசுபவர்களாகவுமே காணப்படுவார்கள் . எனக்கு அலுத்துப் போகவும் ஜன்னல் வழியாக, ஓடிக் கொண்டிருக்கும் சாலையோரக் காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அவர்கள் பின் இருக்கையில் நானொருவன் இருப்பதையே மறந்து போனவர்களாகப் பயணம் நெடுகிலும் தம் பேச்சிலேயே மூழ்கியிருந்தனர்.

அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் கழித்து மேற்சொன்ன சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய தருணம் எனக்கு வாய்த்தது. அப்போது எனக்கு திருமணமாகி மகன் பிறந்திருந்தான். தள்ளாடி நடக்கத் துவங்கியிருந்த அவனது அர்த்தமற்ற சொற்பிரயோகங்களுக்கெல்லாம் கவிப்பொருள் கண்டு பரவசமடைந்து கொண்டிருந்தேன். 'குழலினிது யாழினிது என்பர்' என்ற வள்ளுவனுடய வரிகளின் அர்த்தம் அதன் மொத்த பரிமாணத்துடனும் எனக்குள் அப்போதுதான் இறங்கியது. குறைந்தது ஐந்தாறு குழந்தைகளையேனும் பெற்று, கொஞ்சி மகிழ்ந்திராத பட்சத்தில் இந்தச் சொற்றொடர் அவரிடத்தே பிறந்திருக்க வாய்ப்பில்லை. அள்ளிச் செறுகிய கொண்டையும், மீசைதாடியுடன் ஒற்றையாய்ச் சுற்றிய அங்கவஸ்திரமுமாய், ஒரு துறவிக்கோலத்தில் அவரை வரைந்த சித்திரக்காரனிடத்தே எனக்கு மனக்குறைதான்.

நம் குழந்தையின் மீதான தாயின் பரிவும் பாதுகாப்புணர்வும் அனைத்து ஜீவராசிகளுக்குமான பொதுவான இயற்கை நியதி.தந்தையின் உணர்வு அப்படிப்பட்ட ஒன்றல்ல . குழந்தையின் மீதான தந்தையின் பாசம் முரண்களும் புதிர்களும் நிரம்பிய ஒன்று என்றாலும், தன்சுயத்தின் நீட்சியாய் தனது கைகளில் தன்னுடைய குழந்தையைக் காணும் ஒரு ஆண் முதலில் சற்றுக் கலவரமடைவது என்னவோ உண்மைதான் என்றாலும் தான் என்னும் உணர்வை ஓரளவேனும் அழித்துக் கொள்ளும்போதே அவன், தன்னின் ஒரு பகுதியாக அக்குழந்தையை ஏற்றுக்கொண்டு கொஞ்சத் துவங்குகிறான். அதுகாறும் ஆண் என்ற இந்த ஜந்துவை சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பியும் அஞ்சியும் அருவருத்தும் தன் விருப்பு வெறுப்புடன் எதிர்கொண்டுவந்த பெண், தாயான பிறகே குழந்தையை முன்னிட்டுத் தன் மெய்யான அதிகாரத்தைக் கைப்பற்றுகிறாள் . தான் பெற்றெடுத்து தன் கைக்குள் வைத்திருக்கும் குழந்தையை விடவும் எவ்வகையிலும் மேம்பட்ட ஒன்றல்ல ஆண் என்கிற அசட்டு ஜன்மம் என்கி்ற தன்நிச்சயம் பிறந்தவுடன் கணவனை, அவனது அதிகார ஆர்ப்பாட்டங்களை அவள் சற்றும் சட்டைசெய்வது கிடையாது. ஆக ஒரு ஆண் தன் விட்டேற்றியான மனோபாவத்தை விட்டொழித்துக் குடும்பம் என்ற அமைப்புக்குள் தன்னை முழுவதுமாகப் பொருத்திக்கொள்வது அவன் தந்தையாகத் தன் பொறுப்பைஉணரும் போதுதான்



பிரியத்தை வெளிப்படுத்துவதற்குத் தொடுதலைக் காட்டிலும் சிறப்பான வழிமுறை வேறில்லை. தம் அன்பிற்குரியவர்களைக் காணும்போது வரவேற்கும் விதமாகக் கைகனைப் பற்றிக்கொள்ளுதல், மார்புறத் தழுவிக் கொள்ளுதல், உச்சிமுகர்தல், கன்னத்தில் முத்தமிடுதல் போன்ற செயல்கள் மொழி , இன பேதமின்றி உலகெங்கிலும் பொதுவான வழக்கமாகவே காணப்படுகிறது. மேலும் வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடத்தே செல்லுபடியாகக்கூடிய ஒரே மொழியும் அதுதான். எனில் குழந்தைகளைக் கொஞ்சும் போது சொல்லவேத் தேவையில்லை. அத்தனை இலக்கண வழுவுகளுக்குப் பிறகும், மொழி அதன் உச்சபட்ச உணர்வைத் தருவது அவ்விடத்தில்தான் என்றாலும், அள்ளி எடுத்து ஆரத்தழுவாவிட்டால் அது கொஞ்சலே இல்லை. குழந்தையின் மேனியைத் தழுவுவதால் கிடைக்கும் அவ்வின்பத்திற்கு இணை வைக்கக்கூடிய பிறிதொரு இன்பம் இவ்வையகத்தில் இல்லை. மெய் தீண்டல் எனப்படும் அவ்வின்பம் தன் குழந்தைகளை முன்னிட்டு ஒரு ஆணுக்குக் கிடைக்கப்பெறுவது மிக குறுகிய காலமே . அது பற்றிய ஒரு நுட்பமான சித்திரத்தைத் தருகிறது பின்வரும் புறநானூற்றுப்பாடல்,

படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ்செல்வர் ஆயினும், இடைபடக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி
இட்டும், தொட்டும். கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே

பாடியவர் - பாண்டியன் அறிவுடை நம்பி
திணை- பொதுவியல்
துறை - பொருண்மொழிக் காஞ்சி

குறுகுறுவென்று நடந்து தன் சிறுகை நீட்டி நெய் கலந்த சோற்றினைக் கலத்தினின்றும் அள்ளிஎடுத்து வாயிலிட்டும். மண்ணில் இறைத்தும். மேனியில் பசி கொண்டும். அதே கையால் பெற்றோரைக் கட்டிக் கொண்டும் தம்மைப் பெற்றவர் எண்ணிப் பார்க்கும்படியான பல செயல்களையும் செய்யும் குழந்தையைப் பெறாதவர்கள். பலரோடு சேர்த்து விருந்துண்ணும் பெருஞ்செல்வராயினும் அவர்களுடைய வாழ்க்கை வீணானதே என்கிறது இப்பாடல்

குழந்தைக்குத் தன் உடம்பு பற்றிய பிரக்ஞை வரும் வரையிலேயே தன்னைப் பிறர் தொட அனுமதிக்கும் அதன் பின்னர் நீங்கள் மேலேபடாமல் எட்டிநிற்க வேண்டியிருக்கும் . அந்த தருணத்திலிருந்தே தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி தொடங்கிவிடுகிறது. தாய்க்கும் மகனுக்குமான இணக்கமும் புரிதலும் வேறு வகையிலானது. அது ஆயுள் பரியந்தமும் நீடித்திருக்கும் . ஆனால், மகன் வளரவளரத் தந்தை பின்வாங்க வேண்டியிருக்கிறது. இருவருக்கும் இடையிலான அந்தக் கபடமான இடைவெளியே மரியாதை எனப்படுகிறது. அந்த இடைவெளி எதேனும் ஒரு காரணம் பற்றிக் குறைவுறும்போது தந்தைக்கும் மகனுக்குமான முரணும் வளரத் தொடங்கிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது என் அறைத்தோழனாக இருந்தவன் கிரி. என்னைக்காட்டிலும் ஒரு வருடம் இளையவன், நயத்தக நாகரீகத் தோற்றமும் அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத முரட்டுக்குணமும் கொண்டவன் . சகநண்பர்கள் பலரும் அவனுடன் பழகவிரும்பிய அளவிற்கு அவனைக்கண்டு அஞ்சவும் செய்தனர். சிறிய விஷயங்களுக்காகக் கூட சச்சரவில் இறங்கிவிடுவது அவனது சுபாவமாக இருந்தது. துவக்கத்தில் என்னுடனும் பல உரசல்கள் இருந்தன என்றாலும், விரைவிலேயே நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். நான் இயல்பிலேயே அதிகம் பேசாதவன். ஆனால் அவனோ நேரெதிர் அவனைப் பற்றிய எந்த ரகசியமும் எனக்குத் தெரியாததல்ல . அத்தனை விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறான் அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியம்மா, அக்கா மாமா, தங்கையென ஆளுக்கொரு திசையில், திசைக்கொரு மனப்போக்கில் சிதறிக்கிடந்த குடும்பத்தில் பாட்டியிடம் வளர்ந்தவன் அவன் .

தன்தந்தையைக் குறித்து எள்ளளவும் அவனுக்கு மதிப்பில்லை. எப்போதும் ஏகவசனத்திலேயே குறிப்பிடுவான். அவன் அவ்வாறு முதலில் பேசக்கேட்ட போது திகைத்துப்போனேன் . நான் என்னுடைய வழக்கமான உபதேசத்தொனியில் தந்தை மீது இருக்கவேண்டிய மரியாதை குறித்து பிரசங்கிக்கத் துவங்கினேன், "மூடு பெருசா பேசவந்திட்ட ! சண்டைபோட்டு அம்மாவோட கன்னத்தில் அறைந்து படுக்கையில் தள்ளிவிட்டு வந்து, அடுப்பில் எரியும் நெருப்பை எடுத்து சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கும் மகனிடம் பணத்தைக் கொடுத்துப் பாட்டில் வாங்கிகொண்டு வரச்சொல்லிக் குடித்த அப்பன் உனக்கு வாய்த்திருந்தால் நீயும் இப்படித்தான் பேசுவாய் “ சினத்துடன் கூறினான். இத்தனைக்கும். அவன் தந்தையும், தாயும் காதல் , கலப்புமணம் செய்தவர்கள் என்று சொல்லியிருக்கிறான். அதற்குப் பிறகான வருடங்களில் தந்தையை உள்ளூர வெறுக்கவும் எதிர்க்கவும் செய்த தனயர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் முரண் என்பது பாலியல் தன்மையிலான சிக்கலை அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் பிறகு படித்து தெரிந்து கொண்டேன்

சமீபத்தில் என் மூத்தநண்பரும் தமிழ்அறிஞருமான ஆர் . கேயுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது குரு சிஷ்ய பாவம் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னது எனக்கு மிகவும் வெளிச்சத்தைத் தருவதாக இருந்தது. குரு -சிஷ்ய உறவு என்பதும் ஒருவகையில் தந்தை மகன் உறவு போன்றதுதான் . குருவின்மீது துவக்கத்தில் எந்த அளவுக்கு சிஷ்யனுக்கு பக்தியும், மதிப்பும் இருக்கிறதோ அதே அளவிற்குப் பின்னாளில் பகையும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் . ஏதோ ஒரு கட்டத்தில் தன்சிஷ்யனுக்கு இனிமேல் தான் தேவையில்லை என உணர நேரிடும் குருவிற்கு வரும் குரோதத்தை அவரால் வெகுகாலத்திற்கு கட்டி வைத்திருக்க முடியாது. குருவை, தந்தையை அவர்களுடைய ஆளுமையை, அதிகாரத்தை அழித்தால் அல்லது தாண்டினால் மட்டுமே தனக்கு வாழ்க்கை என அறியவரும் சீடனும் மகனும் மூர்க்கமாக எதிர்கொண்டு தாக்கத்தொடங்குகிறார்கள். இந்த அழிவு அல்லது மீறல் என்பது சிலபோது யதார்த்த தளத்திலும், பலபோது குறியீட்டுத் தளத்திலும் நிகழ்ந்தேறும். தந்தையைக் கொலை செய்துவிட்டு, சிறையிலடைத்துவிட்டு அரசு கட்டிலேறிய மகன்களைச் சரித்திரத்தின் பக்கங்களில் நாம் சாதாரணமாகக் காணமுடியும். மாறாக தந்தையைவிட அதிக வெற்றிகளைப் பெறவேண்டும். பெரிய கோவில்களைக் கட்டவேண்டும். அகலமான ஏரிகளை வெட்ட வேண்டும் என்று இன்னொரு வகையில் தந்தையரை விஞ்சத் தவித்த தனயர்களையும் பார்க்கலாம். உண்மை தான் மகன் பிறந்து தோளுயரம் வளர்ந்து என் முன்நின்று கேள்வி கேட்கத் துவங்கும்போதுதான் எனது தந்தையை நான் உண்மையாகவே புரிந்துகொள்ளத் துவங்குகிறேன் இந்த தேசத்திற்கே தந்தையாக விளங்கிய காந்தி, தன் சொந்தமகன் ஹரிலாலிடம் அப்பாத்திரத்தை வகிக்க இயலாமல் தோற்றுப்போனார். தந்தையைப் பற்றிய காப்காவின் எதிர்ப்புணர்வுதான் அவருடைய எழுத்துக்களுக்கே அடிப்படை என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


முன்பு முன்னேற்றப் பதிப்பகம் கெட்டி அட்டைப்பதிப்பாக வெளியிட்ட இவான் துர்கனேவின் 'மூன்று காதல் கதைகள்' என்ற குறுநாவல் தொகுதி வெகுகாலம் வரையில் NCBHல் மலிவு விலையில் கிடைத்து வந்தது. இப்போது பிரதிகள் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை . அதில் 'முதல் காதல்' என்றொரு குறுநாவல், பதின்பருவத்தில் அப்போதுதான் நுழைத்திருக்கும் மகன், பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்திருக்கும் இளம்சீமாட்டி மீது மையல் கொள்கிறான். அவள் இச்சிறுவனைவிடவும் சிலஆண்டுகள் மூத்தவள், இவனோடு வாஞ்சையுடனும், விளையாட்டுத்தனத்துடனும் பழகுகிறாள். ஒருநாள் தொப்பி அணிந்து, முரட்டுத்தோல் காலுறைகளுடன், சேணம் பூட்டிய குதிரைமீது, முள்பதித்த சாட்டையை வீசியபடி விரைந்து செல்லும் தந்தையைத் தொலைவிலிருந்து காண்கிறான். அக்குதிரையில் அவரை அணைத்தபடி களிகொண்ட சிரிப்புடன் போகிறவள் அந்த இளம் சீமாட்டிதான். இக்கதையை முதன்முறையாக எனது பதினேழாவதுவயதில் நான் படித்தபோது , அடைந்த உணர்வு உயர்அழுத்தம் கொண்ட மின்கம்பி ஒன்றினை தொட்டது போலிருந்தது.

குடும்பஅமைப்பில் உள்ளார்ந்து உருவாகிவரும் வன்முறைக்கு அதிகமும் ஆளாகிவருவது குழந்தைகள்தாம் . தம்மை நாகரீகமடைந்துவிட்ட சமுதாயமாக கூறிக்கொள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க சமூகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல . கட்டுப்பாடு, ஒழுங்குவிதிகள் என்கிற பெயரால் பல தந்தையர்கள் தம்பிள்ளைகளின் பால்யத்தின்மீது கண்மூடித்தனமான வன்முறையை செலுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் . யூமா வாசுகியின் ‘ரத்தஉறவு’ நாவல் இத்தகையதொரு குரூரமான கொடுமையின் ஆவணப்பதிவு போல விளங்குகிறது. இதனுடைய பலபக்கங்களை நடுங்கும் மனதோடுதான் நாம் கடந்துபோக முடியும். 'தாய்' என்ற தொல்படிமம் மொழியும் இலக்கியமும் தோன்றும் முன்பே மனித ஆழ்மனதில் பதிந்து போனது. உலகின் எல்லா மொழிகளில பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அவளைக் குறித்து எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தந்தையைப் பற்றி எழுதப்பட்டவை மிகச் சொற்பமும் விதிவிலக்கானவைகளுமே ஆகும். குறிப்பாக நவீனத்துவ இலக்கிய படைப்புகளில்தான் தந்தைக்கும் மகனுக்குமான முரண் குறித்து அதிக பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

சுந்தரராமசாமியின் படைப்புகளிலும் மகனின் மீது கட்டுப்பாடும் அதிகாரமும் செலுத்துகிற தந்தை வருகிறார். அந்த அதிகாரத்தைக் குறித்து மகனிடம் கேள்விகள் எழும்போதும்கூட அது எவ்விடத்திலும் தந்தையின் மீதான வெறுப்பாக மாறுவதில்லை. எனக்குத் தெரிந்த வரையில் முழுக்கமுழுக்க தந்தையைப் பற்றிய சித்திரங்கள் மட்டுமே அடங்கிய நூல் என்று சுதேசமித்திரன் எழுதிய ‘அப்பா' கவிதைத்தொகுப்பை கூறலாம் .ஆனால் , அது பெரிதும் நேர்மறையான சித்திரிப்புகள் கொண்டது. பா.சத்தியமோகனின் சில கவிதைகளிலும் இத்தகைய ஆளுமைகொண்ட தந்தை தென்படுகிறார். என்றாலும், தமிழ் நவீன கவிதையில் தந்தை மகன் உறவை முன்னிறுத்திக் கூர்மையாக எழுதப்பட்ட ஒருகவிதை சுகுமாரனின் ‘கோடைகாலக் குறிப்புகளில்’ வருகிறது.



அப்பா

உன்னுடைய மனித முகம் கழன்று
கழுதைப் புலியாகி நெடுநாட்களாயிற்று
எனக்கு மூலம் நீ தான்
எனினும்
பறவைகள் ஒருபோதும் முட்டைக்குத் திரும்புவதில்லை

என் சிறகுகளை அறுக்க வாள் ஒங்கியவன் நீ
நான் வாள் முனையில் கால் உதைத்துப் பறக்கத் தொடங்கியவன்

என் சங்கீதத்தின் ஊற்றை அடைத்தவன் நீ
எனினும்
ரத்த துடிப்புகளுக்கு இடையில் அது எதிரொலிக்கிறது
உன் போதையும் புறக்கணிப்பும் பொறுப்பின்மையும்
நிராதரவாய் உன்னைக் கொல்லலாம் ஒரு நாள்
நான் வெறும் வழிப்போக்கனாய்ப் போகலாம்
எனக்கு உன்னிடம் பகையில்லை
அன்பைப் போலவே

இக்கவிதையின் முதல் வரியைப் படித்ததும் முகத்தில் அறைவாங்கியது போலத் திகைத்து நின்றேன். காரணம், இன்றளவும் தந்தையின் மீதான எனது மதிப்பு பக்திபூர்வமானது. தன்னை வைத்தே உலகை அளக்கும் அங்குலப்புழுவைப் போல இருந்த என்னைக் கண்திறக்கச் செய்வித்தவை இதுபோன்ற இலக்கிய ஆக்கங்களே வெறுப்பைக்கூட ஒரு எதிர்வினை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இக்கவிதையின் இறுதியில் வரும் அன்பைப் போலவே வெறுப்பும் இல்லை உன்னிடம் எனக்கு என்னும் போது கூடும் பற்றற்ற தன்மையின் உக்கிரம் தணிக்கமுடியாதது.

முதலில் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் சித்திரிப்பதுபோலப் பெறற்கரிய செல்வமாக, ஒருவனின் வாழ்வை அர்த்தப்படுத்தும் அரும்பொருளாகப் பிறக்கும் ஒரு குழந்தை எந்த வயதிற்குப்பிறகு, சுகுமாரனின் இக்கவிதையில் குறிப்பிடப்படுவது போலத் தந்தையின் விரோதத்திற்குரியவனாகிறான் ?அன்பு எப்புள்ளியிலிருந்து அதிகாரமாக மாறுகிறது? பயம் எக்கணத்திலிருந்து வெறுப்பாக வளர்கிறது ? இக்கேள்விகளுக்கெல்லாம் அறுதியான பதில்கள் என்று எதுவும் கிடையாது எனினும், படைப்பின் வெளிச்சத்தைக் கொண்டு வாழ்வை அணுகுவோம் எனில், பல சமயங்களில் நாம் காண்பிக்க நேரிடும் இந்த அதிகாரத்தினுடைய, வெறுப்பினுடைய கூர்மையை ஓரளவேனும் முனை மழுங்கச் செய்யலாம்.

Monday 5 October 2020

ஈராயிரத்திற்குப் பிறகான கவிதைகள் - ஒரு பார்வை

கரை மீது நின்று காணும்போது கடல் அதன் மேற்புற அலைகளோடு மாற்றமேதுமின்றி ஒரே மாதிரியாகவே தோற்றமளித்திடும் போதிலும் , அதனுள் நாம் அறிந்திடாத விதத்தில் சில உள்நீரோட்டங்கள் மறைவாக வந்து கலக்கும் . அந் நீரோட்டங்கள் அக்கடல் பகுதியின் உப்புத்தன்மையை , தட்பவெப்பத்தை , உயிர்ப் பெருக்கத்தை பாதிப்பதாக அமையும். அவ்வாறே ஒரு மொழியில் , ஒரு காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகளிலும் மேலெழுந்தவாரியாக நோக்குகையில் அவற்றின் புறவடிவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய அளவிலான வேறுபாடுகள் எதையும் நாம் காணவியலாது . என்றாலும் , அவற்றின் வரியொழுங்குகளுக்கு அப்பால் அக்கவிதைகளின் நோக்கு நிலைகளிலும் அர்த்த உருவாக்கத்திலும் மொழிதல் முறையிலும் சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை , நுட்பமான மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதை காணலாம் . கூர்ந்த வாசிப்புடைய எவருமே இம்மாறுதல்களை அவதானிக்க முடியும். ஒரு காலகட்டத்தினுடைய கவிதை சூழலை நெருங்கிக் காணவும்  , ஆழமாக புரிந்துகொள்ளவும் , ஆராய்ந்து மதிப்பிடவும் இத்தகைய அவதானிப்புகள் உதவும் .


அவ்வகையில் ஈராயிரத்திற்குப் பிறகான வருடங்களில் தமிழ்க் கவிதையானது ,அதன் நோக்கிலும் போக்குகளிலும் எத்தகைய மாறுதல்களை அடைந்துள்ளது என்பதை குறுக்கு வெட்டாக , ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கும் முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது .


 'புது அல்லது நவீன கவிதை ' என்கிற பதத்தில் முன்னொட்டாக வரும் 'புதுமை'அல்லது 'நவீனம்' என்பது 'modern' என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதே . அதை 'Fashion' எனப்படும் காலத்தை ஒட்டிய நாகரீக மோஸ்தர் என்பதைப்போல மேலோட்டமாக புரிந்து கொள்வதைக் காட்டிலும் அபத்தம் வேறில்லை ;  அப்படி எண்ணுபவர்கள் கவிதையை வெறும் ஏட்டளவிலான செயல்பாடாகவும் , சொற்களை வரிகளை மாற்றிப் போட்டு ஆடும் மொழி விளையாட்டாகவும் மாத்திரமே கருதி மேலோட்டமாக எழுதவும் பேசவும் செய்கின்றனர் .

மாறாக , ஒரு சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் நடுவில் இருக்கும் இடைவெளி குறித்த புரிதலோடு அர்த்த உருவாக்கம் மற்றும் தொடர்புறுத்தும் முறைகளில் காலத்தையொட்டி ஒரு மொழியினூடாக ஏற்படும் மாறுதல்களை வரவேற்கும் தன்மையே நவீனம் அல்லது புதுமை எனப்படும் .


   பொதுவாக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விதந்து ஓதப்படும் அழகியல் மற்றும் வடிவ நுட்பங்கள் முதலியவை , செறிவும் செழுமையும் அடைந்து ஒருவகை இலக்கணமாக மாறிவிடும் போது , இயல்பாகவே அதனை மீறவும் விட்டு விலகவுமான ஒரு போக்கு உருவாகி , புதிய திசையில் நகரத் தொடங்கும். பிறகு , அதுவும் பூரித நிலையை அடையும்போது ,பிரிதொரு கிளைப்பாதை அதனின்றும் பிரிந்தேகும் . இதுவே பொதுவான இயக்கவியல் நியதி .என்பது, தொன்னூறுகளில் எழுதப்பட்ட கவிதைகளில் அதிகமும் காணக் கிடைப்பது இறுக்கமான படிமங்கள் , குறியீடுகள் மற்றும் உருவகங்கள் விரவி வரும் குறுகத் தறித்த வரிகள், கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுத் தெறிப்புகள் ,தத்துவார்த்தமானதொரு வாழ்வியல் நோக்கு முதலிய அம்சங்கள்தாம். இவை பெரிதும் நவீனத்துவம் முன்வைத்த அழகியல் நியதிகள். இவை பொது விதிகள் ஆகிவிட்ட இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்தவர்கள் இவற்றிற்கு நேரெதிராக , அணி அழகுகளை உதறிவிட்ட கிட்டத்தட்ட உரைநடைக்கு ஒப்பான ஒரு மொழியில் , உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த முயலாமல் கட்டற்று விரித்து எழுதுவதன் மூலம் , நுண்தருணங்களை அகப்படுத்துவதன் வாயிலாக தமது கவித்துவத்தை உருவாக்க முனைகிறார்கள் எனப் பொதுவாகக் கூறலாம். இந்த வரையறையும் கூட கறாரானதொரு காலப் பிரிவினை அல்ல. தனிப்பட்ட கவிஞர்களைப் பொறுத்து நெகிழ்ந்தும் முன்பின்னாக வளைந்தும் போகக்கூடிய தோராயமானதொரு கருதுகோளே ஆகும் .

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் , தமிழ் சிறுபத்திரிகைகளில் பல்வேறு இலக்கியக் கோட்பாட்டு அறிமுகங்களும் அவை பற்றிய விவாதங்களும் பெரும் வீச்சாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இருத்தலியல் , அமைப்பியல் , பின்அமைப்பியல் , பின் நவீனத்துவம் போன்ற  கோட்பாடுகளோடு , உளவியல் மானுடவியல் ,மொழியியல் போன்ற பிற துறை சார்ந்த விளக்கங்களைக் கொண்டு நவீன இலக்கியப் பிரதிகளை அலசவும் ஆராயவும் அளவிடவும் பலரும் முனைந்தனர் . குறிப்பாக கல்விப்புலம் சார்ந்த பேராசிரியர்கள் பலரும்

இதில் மிகுந்த ஆர்வம் காட்டினர் .


பொழிகின்ற பெருமழையில் வழிந்தோடியது போக மண்ணில் வடிந்து இறங்கி தன் தனிச் சுவையோடு ஊற்றாகிக் கசியும் நீர் போல மேற்சொன்ன விவாதங்கள் எல்லாமும் ஏதோ வகையிலும் , அளவிலும் பிறகான படைப்புகளை பாதிக்கவே செய்தன .


மூத்த கவிஞர்களான தேவதேவன் ,விக்ரமாதித்யன் ,கலாப்பிரியா ஆனந்த் , பிரம்மராஜன் , சமய வேல் , சுகுமாரன் இவர்களைத் தொடர்ந்து அடுத்த தலைமுறையில் பிரேம் ரமேஷ் ,யவனிகா ஸ்ரீராம் ,மனுஷ்யபுத்திரன், லட்சுமி மணிவண்ணன் , கரிகாலன் பெருமாள் முருகன் , ரவிசுப்பிரமணியன் , சங்கர ராமசுப்ரமணியன், பாலை நிலவன் மகுடேஸ்வரன் என பலரும் இரண்டாயிரத்திற்குப் பின்னரும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். தவிரவும் பதிப்புத்துறையில் நிகழ்ந்திருக்கும் தொழில்நுட்ப மாற்றம் மற்றும் நூல் விற்பனையில் கண்டிருக்கும் வளர்ச்சி காரணமாக , பல முன்னோடிக் கவிஞர்களின்  மொத்த கவிதைகளும் ஒரே தொகையாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஒரு கவிஞனின் மொத்தக் தொகுப்புகளையும் ஒருசேரக் காண்பதோ , வாசிப்பதோ இருபதுஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு எளிதான காரியமன்று. அவ்வகையில்  பிரமிள், சுரா, அபி ஆத்மாநாம் ,ஞானக்கூத்தன் கல்யாண்ஜி ,சுகுமாரன் ஆகியோரின் பெருந்தொகை அவர்களுடைய பெயரையே தலைப்பாகக் கொண்டு வெளியாகியுள்ளன. இவை போக எஸ் வைதீஸ்வரனின் 'மனக் குருவி'  தேவதச்சனின் 'மர்மநபர் ' ராஜ சுந்தரராஜனின் 'தாய்வீடு 'மு. சுயம்புலிங்கத்தின் ' 'நிறமழிந்த வண்ணத்துப் பூச்சிகள் ' யூமா வாசுகியின் 'கசங்கல் பிரதி' எம் யுவனின் 'தீராப் பகல்' பிரதீபனின் 'கண் மறைத் துணி' முதலியனவும் வெளியாகியுள்ளன. இதுதவிர தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'கொங்குதேர் வாழ்க்கை' எனும் நூற்றுக்கும் அதிகமான கவிஞர்களின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகை நூல் ,  நவீன கவிதையின் இதுகாறுமான வளர்ச்சிப் போக்கின் ஒரு வரைபட மாதிரியை காட்டுவதாக அமைந்திருக்கிறது .

தொடந்து எழுதும் கவிஞர்களின் இத்தகைய பெருந்தொகை நூல்களை வாசிப்பதன் வாயிலாக ,ஒரு கவிஞரின் அகஉலகமும் அதனோடு கூடி அவருடைய ஆளுமையும் எவ்விதமாக உருப்பெற்று வந்திருக்கிறது என்பதை அறிய முடிவதோடு மட்டுமல்லாமல் , புறத்தே அவருடைய வெளியீட்டு மொழியானது ,  காலத்தை ஒட்டி எவ்விதமான வளர்சிதை மாற்றங்களை அடைந்திருக்கிறது என்பதையும் , நாம் அனுமானிக்க முடியும் .


 மனிதர்களின் மனம் என உருவகிக்கப்படும் அருவமான ஒரு பரப்பை களமாகவும் , அதில் நிழலாடும் உணர்வுகளையும் எண்ணங்களையும் கைமுதலாகவும் கொண்டு சொற்களில் இயங்கும் வடிவமே கவிதை . பட்டறிவையும் அதன் புற தர்க்கங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது என்றாலும் , உலகத்தை விளித்து ஒட்டுமொத்த வாழ்வையும் முன்வைத்து ஒரு வரியை எழுதும்போது உருவாகிவரும் பார்வைக் கோணமானது ,தவிர்க்கவே முடியாதபடி தத்துவத்தின் சாயலைப் பெற்றுவிடுகிறது. தமிழின் நவீன கவிதை இன்றளவும் உதறி விட முடியாத அல்லது முயலாத ஒரு அம்சம் என்று அதனுடைய இந்த தத்துவார்த்த நோக்கை குறிப்பிடலாம். பாரதி, பிச்சமூர்த்தி என்று அதன் ஊற்றுமூலத்திலேயே 

தொடங்கி விடுகிற இந்தச் சாய்வு பிறகு சி.மணி, நகுலன், பசுவய்யா , அபி , தேவதச்சன், ஆனந்த், ந. ஜெயபாஸ்கரன்  எனத் தொடர்ந்து இடையறாததொரு தைலதாரையாக இன்றளவும் நம் கவிதை போக்கோடு ஒழுகி வருகிறது .இது நம் மொழியின் செவ்வியல் மரபோடும் கலாச்சார தொன்மங்களின் நினைவுகளோடும் நம்மைப் 

பிணைக்கிறது . அவ்விதமாக தமக்கேயுரிய தனிப் பார்வையோடுகூடிய வாழ்வனுபவங்களை தம் கவிதையில் தரிசனப் படுத்த முயல்பவர்கள் என  இத்தலைமுறையில் எழுதும் ஷாஅ, எஸ். சண்முகம் ,தேவேந்திரபூபதி ,இளங்கோ கிருஷ்ணன், நேசமித்திரன் , ஆத்மார்த்தி, அமலன் ஸ்டான்லி , தபசி ,போகன் சங்கர், சாகிப் கிரான், குணா கந்தசாமி , எஸ். ஜே. சிவசங்கர், கார்த்திக் நேத்தா,ராஜன் ஆத்தியப்பன் , கே. சி. செந்தில் குமார் , சபரிநாதன் ,அகச்சேரன் , வே. நி.சூர்யா முதலியோரைக் குறிப்பிடலாம் .


தனிமனிதனின் விசனங்களுக்கும் சமூக மனிதனின் விமர்சனங்களுக்கும் நடுவிலான பிளவைக் கடந்து அவை ஒன்றையொன்று சந்திக்கவும் பாதிக்கவும் செய்கின்ற புள்ளியிலிருந்து எழுதப்படுவன இன்றைய சமூக அரசியல்கவிதைகள் அவை நமது சமகால வாழ்வின் அபத்தங்களையும் அர்த்தமின்மையையும் சுட்டுவது போல் அல்லாமல் தனது கூர்மையான அங்கதத்தால் அவற்றின் அறமின்மையையும் அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் அமைகின்றன . நமது மரபிலக்கியத்தில்  உள்ள சித்தர் பாடல்களிலும் தனிப்பாடல்களிலும் வெளிப்பட்ட அந்த பரிகாசத்தின் தொடர்ச்சியை இன்றைய கவிதைகளிலும் காணலாம் . வரிகளை மீறி மெல்லிய நகைப்பாக மெலெழும் அது , அமைப்பிற்கு எதிரான விமர்சனமாகவும் அதே சமயத்தில் அதிகாரமற்ற தனது தன்னிலை குறித்த சுய எள்ளலாகவும் வெளிப்படுவதைக் காணலாம். தோராயமாக இவ்விதமான வகைமைக்குள் அடங்கும் விதமான கவிதைகளை எழுதுபவர்கள் என என். டி. ராஜ்குமார் ,அழகிய பெரியவன் , கண்டராதித்தன் ,   இசை, லிபி ஆரண்யா, செல்மா பிரியதர்ஷன் , சாம்ராஜ் ,   பூவிதழ் உமேஷ் , ஸ்டாலின் சரவணன் ,பெரு. விஷ்ணுகுமார், றாம் சந்தோஷ் , பா. ராஜா, தங்க பாலு போன்றோரைக் குறிப்பிடலாம்


நாம் வாழும் நிலத்திற்கும் அதன் சூழல் அமைவிற்கும் அதில் நிலவும் தட்பவெட்ப நிலைகளுக்கும் , நமது உடலுக்கும் அதில் உறையும் நம் மனதிற்கும் ,

நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தொடர்புகள் உண்டு .இயற்கைக்கும் மனிதனுக்கும் நடுவிலான இந்த தொப்புள் கொடி உறவை நம் தன்முனைப்பினாலும் பேராசையினாலும் , அதிக முடிச்சுகளும் சிடுக்குகளும் கொண்ட ஒன்றாக , நாம் மாற்றிக் கொண்டுவிட்டோம் . திரிந்தலையும் திணைகளால் ,நம்மில் பலரும் நிலம் பெயர்ந்து அலையும் ஏதிலிகள் ஆக்கப்பட்டு விட்டோம் .நம்மின் இருப்பும் அடையாளமும் நினைவுகளும் வேரிழந்துபோகத் தொடங்கிவிட்டன. இது தரும் பதற்றமும் வலியும் இன்று எழுதும் பலரின் கவிதைகளில் ஆற்றாமையென ஒலிக்கிறது . தம் கவிதைகளில் அத்தகைய உணர்வுகளுக்கு முகம்தரும் விதமாக

எழுதுபவர்கள் என்று கரிகாலன், வெய்யில், மெளனன் யாத்ரீகா, கண்மணி குணசேகரன், கலிய மூர்த்தி , கதிர்பாரதி,  நா. பெரியசாமி , இயற்கை , கடங்கநேரியான், கண்ணகன், ஜி. எஸ். தயாளன், மண்குதிரை ,தாணுபிச்சையா , முருக தீட்சண்யா , சா . துரை, சூ. சிவராமன்,  முத்துராசா குமார் என பலரைக் குறிப்பிடலாம் 


மேலெழுந்தவாரியான ஒரு நோக்கிலேயேகூட ,  நாம் அவதானிக்க முடிகின்ற இன்றைய கவிதையின் பொதுவான போக்கு என்று ஒன்றை சொல்வதென்றால் , உரைநடையை நெருங்கிவரும் அதன் மொழியைச் சொல்லலாம் .இது ஒன்றும் இற்றைப் புதுமையுமல்ல ; உறையிட்ட செய்யுள் என்று சிலப்பதிகாரத்தில் ஒரு மொழிதலாகவும் அது சுட்டப்பெறுகிறது. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கிலும்  நேர்கவிதை , எதிர் கவிதை என்ற வடிவங்களில் இத்தன்மை பேசப்பட்டிருக்கிறது. க. நா. சு , விக்ரமாதித்யன், சமயவேல் ராஜ மார்த்தாண்டன் , பழமலை , இந்திரன்  எனப் பலரும் தமக்கே உரிய விதத்தில் கையாண்ட இம்முறையை ஒரு இயக்கமாக முன்னெடுத்தவர் என மனுஷ்யபுத்திரனை கூறலாம். தொடர்ந்து பெருந்தேவி 

இதையே எதிர்கவிதையின் வகைபாட்டிற்குள்  பலவிதமாக முயன்றிருக்கிறார் . இவர்களைத் தவிர  சங்கர ராமசுப்பிரமணியன் , குவளைக் கண்ணன் ,ஸ்ரீநேசன் , ராணி திலக், ஸ்ரீ சங்கர், நரன்,  முகுந்த் நாகராஜன் , வே. பாபு, அய்யப்ப மாதவன் , சிபிச் செல்வன், குமாரநந்தன் , ரவி உதயன் ,கார்த்திக் திலகன்  எனப் பலரையும் இன்று இவ்வடிவில் எழுதுபவர்கள் என்று குறிப்பிடலாம். 


தொன்னூறுகளின் முற்பகுதியில் அழுத்தமான குரலுடன் துலக்கமாக எழுந்து வந்த பெண்ணிய ,தலித்திய , விளிம்புநிலை கருத்துநிலைகளின் அழுத்தமான அடையாளங்களுடன் தொடர்ச்சியாக இன்றும் பலர் எழுதுகிறார்கள். ஆனால் ,

அவ்வடையாளங்கள் தனித்து இயங்காமல் கரைந்ததொரு நிலையிலேயே , பொது சமூகத்தோடு விவாதிக்கவும் உரையாடவும் முனைவதாக அவை காணப்படுகின்றன. அவ்வகையில் சுகந்தி சுப்பிரமணியன், குட்டிரேவதி , மாலதிமைத்ரி , சுகிர்தராணி , சல்மா, லீனா மணிமேகலை , அ. வெண்ணிலா, உமாமகேஸ்வரி, இளம் பிறை ,

சக்திஜோதி, என்கிற வரிசையில் பெருந்தேவி, தி.பரமேஸ்வரி , அழகு நிலா 

சே. பிருந்தா , உமா மோகன் கனிமொழி ஜி ,தேன்மொழி தாஸ் , கு.உமா தேவி , எழிலரசி , லாவண்யா சுந்தரராஜன் தென்றல் , சசிகலா பாபு, லதா அருணாச்சலம் , நறுமுகை தேவி,  கயல் ,ஸ்வாதி முகில், பொன்முகலி எனப் புதிதாக பலரும்  எழுதி வருகின்றனர் . அன்று மொழியில் தமது இடத்தை பெறுவதற்காக உரத்து ஒலித்த குரல்கள் , இன்று சற்று தணிந்தும் அதே சமயத்தில் தனது தனித்துவத்தை மேலும்  வலியுறுத்தும் வகையிலுமாக இன்றைய கவிதைகளில் வெளிப்படுகின்றன எனலாம்.


தமிழ் கவிதையின் நில எல்லைகளை மாத்திரமல்லாமல் , அதன் நிகழ் அனுபவங்களின் சாத்தியங்களையும் விரிவடையச் செய்ததில் , ஈழக் கவிதைகளுக்கு முதன்மையான பங்கு உண்டு. இன ஒடுக்குதலும் உள்நாட்டு யுத்தமும் புலம்பெயர்வுமாகக் கழிந்த பல வருடங்களின் அலைகழிப்பிற்குப் பிறகு , இழப்புகளின் துயரமும் , எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும் ,நிம்மதியான வாழ்வு குறித்த எதிர்பார்ப்புமாக நீளும் இன்றைய சூழ்நிலை வரையிலுமான வரலாற்று தருணங்களின் உணர்வுபூர்வமான ஆவணப் பதிவுகளாக , அவர்களின் கவிதைகள் விளங்குகின்றன . புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் இன்று உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் எழுதப்படும் கவிதைகள் 'யாதும் ஊரே!' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிக்கு மேலதிகமான அர்த்தத்தையும் ஒரு உலகளாவிய நோக்கினையும் அளிக்கின்றன. அவ்வகையில் மஹாகவி , நீலாவணன் , மு.பொ. அ. யேசு ராசா, சு. வில்வரத்தினம் , வ.ஐ. ச.ஜெயபாலன் ,சேரன், பா. அகிலன்,  திருமாவளவன், கி.பி அரவிந்தன் , செல்வி ,சிவரமணி எஸ். போஸ் , கருணாகரன் சோலைக்கிளி முதலியோரின் தொடர்ச்சியாக இத்தலைமுறையில் எழுதுபவர்கள் என பஹீமாஜஹான் ,அனார், தமிழ்நதி அலறி, ரஷ்மி, ரியாஸ் குரானா ,தீபச்செல்வன், கிரிசாந் , நெற்கொழுதாசன், ஊர்வசி,  பிரதீபா , அகமது ஃபைசல் , நிலாந்தன் ,சர்மிளா சய்யீத் , ரிஷான்செரிப் எனப் பலரையும் சுட்டலாம் .


வரலாற்றுக் காலம் தொட்டு வணிகத் தொடர்பு இருந்து வந்தபோதிலும் சமீப காலமாக பரவலாகியிருக்கும் இணையத் தொடர்பு வசதி வழியாகவே சிங்கப்பூர், மலேசிய கவிதைகள் குறித்த கூடுதல் அறிமுகம் நமக்கு கிடைத்திருக்கிறது . இங்கே தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்படும் சில எழுத்தாளர்களின் படைப்புகளுக்கப்பால்  , அங்கே உள்நாட்டிலேயே பதிப்பு காணும் பலரின் எழுத்துக்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு அரிதாகவே கிடைக்கிறது . தவிரவும் புலம்பெயர்ந்து அங்கு வசிப்பவர்களது எழுத்துக்களுக்கும் ,  பாரம்பரியமாக அங்கேயே வசிப்பவர்களின் ஆக்கங்களுக்கும் நடுவே ஒரு இடைவெளி இருப்பதாகவும் தெரிகிறது . மட்டுமல்லாமல் , நம்முடைய சமகால போக்கோடு ஒப்பிடுகையில் அவை வேறுபட்ட கால வளர்ச்சியை கொண்டிருப்பதாகவும்  சொல்லப்படுகிறது . கவிதையைப் பொறுத்த வரையிலும் சிங்கப்பூரில் இந்திரஜித் , லதா, மாதங்கி தேன்மொழி சதாசிவம், சுபா செந்தில்குமார் , சித்துராஜ் பொன்ராஜ் முதலியோரும் , மலேசியாவில் கோ .புண்ணியவான் , சை.பீர்முகமது ,கே .பாலமுருகன் மா .நவீன் முதலியோரும் முதன்மையாக சுட்டப்படுகின்றனர் 


ஒரு காலத்தில் ஒரு மொழியில் நேரடியாக எழுதப்படும் படைப்புகளுக்கும் அதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் அம்மொழியில் மொழிபெயர்க்கப்படும் ஆக்கங்களுக்கும் உள்ளார்ந்ததொரு தொடர்பு இருக்கும். ஒரு மொழியில் நிகழும் புதிய எத்தனிப்புகளுக்கு , பல சமயங்களிலும் தூண்டுதலாக அமைபவை அயல்மொழி படைப்புகளே. தவிரவும் நம் மொழியில் நாம் அடைந்திருக்கும் உயரங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்  நமக்கு உதவுவன மொழியாக்கங்களே. அவ்வகையில் , கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு கவிதை நூல்கள் எனப் பார்த்தால் , சமகால உலகக் கவிதைகள், நெருடாவின் கேள்விகளின் புத்தகம்,மிராஸ்லோவ் ஹோலூப் கவிதைகள் (பிரம்மராஜன் ) கடைசி வானத்திற்கு அப்பால் ( வ.கீதா , எஸ். வி. ராஜதுரை ),

பாப்லோ நெருடா கவிதைகள் , கவிதையின் திசைகள் (சுகுமாரன்),  தொலைவிலிருக்கும் கவிதைகள் (சுரா) அன்னா அக்மதோவா கவிதைகள் (லதா ராமகிருஷ்ணன்) ' கண்ணாடியில் மிதக்கும் பிம்பம் எமிலி டிக்கின்சன் கவிதைகள் (இர.மிதிலா) அண்ணா ஸ்வீர் கவிதைகள் , குளோரியா ப்யூடர்ஸ் கவிதைகள் (சமயவேல் ) பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் (யுவன் சந்திரசேகர்)

உறைநிலைக்கும் கீழே தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் கவிதைகள் (சபரிநாதன் )

தெரிதாவுக்குத் தெரியும் (ஆர். அபிலாஷ் ) மிதந்திடும் சுய பிரதிமைகள் சீனக் கவிதைகள் (ஜெயந்தி சங்கர் ) , வலசைப் பறவைகள், குரல் என்பது மொழியின் விடியல் (ரவிக்குமார்) சாத்தானுக்குப் பிரார்த்தனை விண்ணப்பங்கள் ( கால சுப்ரமணியம் ) நரகத்தில் ஒரு பருவகாலம் ( கார்த்திகைப் பாண்டியன் )

ஆலன் கின்ஸ்பெர்க் கவிதைகள் (பாலகுமார் விஜயராமன்) தாவோ தே ஜிங் ( சி. மணி)  உமர் கய்யாம் கவிதைகள் (தங்க. ஜெயராமன் ஆசை) நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (ஜெயமோகன் ) தாகம் கொண்ட மீன் ரூமி கவிதைகள் ( சத்தியமூர்த்தி ) புன்னகைக்கும் பிரபஞ்சம் கபீர் கவிதைகள் (செங்கதிர்) காற்றின் குரல் (ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ) பிணத்தை எரித்தே வெளிச்சம் ( இந்திரன்), துயர் நடுவே வாழ்வு

( எம். கோபால கிருஷ்ணன்) , குவாண்டமோனோ கவிதைகள்  ( மண் குதிரை) , எண் ஏழுபோல் வளைபவர்கள் (அனுராதா ஆனந்த்) ஐயப்பன் கவிதைகள் , பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் (என். டி. ராஜ்குமார்)  முதலியவற்றைச் சொல்லலாம் .


      இன்று நூல்களும், வாசிப்பும் அச்சுப்பதிப்பிலிருந்து மெல்ல இணையத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. வலைதளங்களும் , முகநூலும் சுயேச்சையாக எழுதுபவர்களுக்கு பெரும் வெளியை திறந்துவைத்திருக்கிறது. வடிகட்டலும் தணிக்கையுமின்றி , எதை வேண்டுமானாலும் எவ்விதமாகவும் எழுதிப் பார்க்கலாம் என்கிற அளவிறந்த சுதந்திரத்தை இது புதிதாக எழுதுபவர்களுக்கு அளித்திருக்கின்றது. இந்த சுதந்திரத்திற்குப் பின்னால் அதேயளவிற்குப் பொறுப்புணர்வும் இருக்கிறது என்பதை உணர்ந்து எழுதுபவர்கள் வெகுவிரைவிலேயே நம் கருத்தை ஈர்ப்பவர்களாகிவிடுகின்றனர். அவ்வகையில் முகநூலில் கவிதைகள் எழுதுபவர்கள் என பாலாகருப்பசாமி , ராயகிரி சங்கர், ராம் வசந்த், விஷ்வக் சேனன், நாகப் பிரகாஷ், மதிக்குமார் தாயுமானவன், அன்பில் பிரியன், நெகிழன் , நிசப்தன், ரோஸ்லின் , சுபத்திரா , ஷோபனாநாராயணன் போன்றோரைக் குறிப்பிடலாம். என் கவனத்திற்கு எட்டாத பலரும் இவ்வகையில் இருப்பர்.


              சிறுகதை நாவல் மற்றும் கட்டுரை நூல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கவிதைத் தொகுப்புகளுக்கு கிடைப்பதில்லை.  எனவே பெரிய பதிப்பகங்கள் , புதிய கவிதை நூல்களை பெரும்பாலும் தவிர்க்கவே செய்கின்றன என்று ஒரு பேச்சு உண்டு . இதை குறித்து ஒரு பதிப்பாளரிடம் வினவியபோது அவர் விற்பனை கூட இரண்டாம்பட்சம்தான் ; தேங்கிக் கிடக்கும் நூல்களை அடுக்கி வைத்திருக்க இடம்தான் எங்களுக்கு பெரிய பிரச்சனை என்று பதிலிறுத்தார். மாறாக சிறிய பதிப்பகங்களான மணல்வீடு , புது எழுத்து , யாவரும் காம் , சால்ட் , தமிழ் வெளி போன்றவை புதியவர்களின் கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுகின்றன . இப்போது தேவைக்கேற்ப குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளை அச்சடித்துக் கொள்ளும் வசதியும் , மின்னூலாக வெளியிடும் வாய்ப்பும் உள்ளமையால் பலரும் சுயமாகவே தங்கள் நூல்களை பதிப்பித்து கொள்ளும் போக்கும் காணப்படுகிறது. இக்கட்டுரைக்காக வேண்டி , எனது வாசிப்பு , நினைவு இவற்றை மட்டுமே முழுமையாக நம்பாமல் தேடிப் படிக்கும் பழக்கமுடைய என் நண்பர்கள் சிலரிடமும் தகவல்களை கேட்டுப் பெற்றேன். அவ்வகையில் நண்பர் ஒருவர் நீண்ட பட்டியலை அனுப்பியிருந்தார்.  அது ஒரு விருது வழங்கும் அமைப்பின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட , கடந்த இரண்டு வருடங்களில் வெளிவந்த கவிதை நூல்களின் பட்டியல் அதில் 54 நூல்களின் பெயர்கள் அடங்கியிருந்தன . விருதின் பரிசீலனைக்கு வராத நூல்கள் இன்னுமொரு 50 இருக்குமென யூகித்துக்கொள்வோமாயின் , இரு வருடங்களுக்குத் தோராயமாக 100 கவிதை நூல்கள் வெளியாகின்றன.  கடந்த இருபது வருடங்களில் உத்தேசமாக ஆயிரத்துக்கும் குறையாத தொகுப்புகள் வந்திருக்கக் கூடும். இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒருவர் எழுதுவது என்பது அசாத்தியமான காரியம் . மாறாக பரந்துபட்ட பார்வையுடைய மூன்றோ நான்கோ பேர்கள் , தனித்தனியாக எழுதும் கட்டுரைகளை தொகுத்து பார்ப்போமாயின் அப்போது ஓரளவிற்கு முழுமையானதொரு சித்திரம் நமக்கு கிடைக்கும்.