Thursday, 27 August 2020

அன்னையிட்டத் தீ!

 ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான்.

பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் கொள்ளும் மனம் கூட பச்சைத்துளிர் ஒன்று வீழும்போது ஆற்றிக்கொள்ள இயலாமல் பரிதவித்துப் போகிறது. புத்த ஜாதகக் கதையொன்றில் தன் இளவயது மகனைப் பறிகொடுத்தத் தாய் ஒருத்தி வருகிறாள். ஒரே மகன் என்பதால் அவனை உயிர்ப்பித்துத் தருமாறு புத்தரிடம் அழுது அரற்றுகிறாள். அவளை அமைதிப்படுத்திய கௌதமர், மரணம் நிகழ்ந்திராத வீட்டிலிருந்து ஒருபிடி கடுகு வாங்கி வரப் பணிக்கிறார். அலைந்து திரிந்த பிறகும் அப்படியொரு வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் போகும் அத்தாய் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்று அறிய வருகிறாள். ஆனால் தனக்கு முன் தன்பிள்ளை போய்விட்ட தவிப்பை அவ்வுண்மை எவ்விதத்தில் தணிவித்திருக்கும் என்பது புதிர்தான். உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கு முன் தர்க்கங்களுக்கு பெறுமதி ஏதுவுமில்லை.

முகநூலில் நான் விரும்பிப் படிப்பனவற்றுள் கவிஞர் பாதசாரியின் பதிவுகள் முதன்மையானவை. பற்றற்றதொரு நோக்கிலும் சுயஎள்ளல் தொனியிலும் அவர் எழுதிச் சேர்த்திடும் எண்ண விசாரங்கள், பல சமயங்களில் நம்முள் மென்னகையைத் தருவிப்பதோடு மட்டுமல்லாமல் நம்மை மன இறுக்கத்திலிருந்தும் விடுப்பதாகவும் அமையும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அவர் எழுதியிருந்த ஒரு பதிவு, வழக்கத்திற்கு மாறாக, மனதைக் கனக்கச் செய்வதாக இருந்தது

ஓராண்டுக்கு முன் பணிவு ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். கடும் மனப்பிறழ்வில், ஓயாது பேசி, உறக்கத்திலும் பேசி, நிரந்தரமாக ஓய்ந்துவிட்டார். முடிவு நிகழ்ந்தது இப்போது தான் என்றாலும் இதற்கான மூலவித்து பல வருடங்களுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது.

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலையில் ஆறு மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போய் தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனையின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் போது வந்த தகவல் இடியென இறங்கி அவரைச் சிதறடித்தது. வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த அவருடைய ஒருவயது குழந்தை வாசலில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து மூழ்கிவிட்டது. கணவர் இவரை ஸ்கூட்டரில் கொண்டுவந்து பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு மறுபடியும் வீடு திரும்புவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்போதும் போல அவர்களோடு ஸ்கூட்டரில் முன்னால் நின்றுகொண்டு வராமல் அன்று பார்த்து வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்த பையனை கவனிக்காமல் மாமியார், நாத்தனார் கவனக் குறைவாக இருந்துவிட்டார்கள்.



கால் நூற்றாண்டு கடந்து, அந்த செவிலி பணிஓய்வு பெற்றவராக வீட்டில் உட்காரும் போது உள்ளத்தின் உள்ளே பதுங்கியிருந்த இனம்புரியாத, அறிவின் கரைதாண்டிய குற்றவுணர்வு, ஆழிப் பேரலையாக உருவெடுத்து அவருடைய மனநலனைச் சூறையாடிவிட்டது. இறந்த குழந்தைக்கு அன்று காது குத்தி, சடங்கு செய்வித்துப் புதைத்த நினைவுகள் அவர் மனதிலிருந்து நீங்கியிருக்கவில்லை.

ஒரு சாட்சி போல சம்பவத்தை விலகி நின்று விவரிக்கிற கவிஞர் கடைசியாக, ‘மனசாட்சி உள்ளவர் எவரும் குற்றவுணர்வுக்கு ஆட்படலாகாது, பட்டால் படுவினைத்துயர் அது காவு வாங்கும்’, என்று தமது பதிவை முடிக்கிறார்.

‘அனைத்து உயிரிகளிலும் அன்னை என்பவள் தான் மூர்க்கமானவள்’ என்றொரு ஆங்கில வழக்கு உண்டு. தன் குழந்தையின் பொருட்டு ஓர் அன்னை அடைய நேரிடுகிற துயரத்திற்கும் ஆவேசத்திற்கும் எல்லை ஏதும் இல்லை. அத்தகையதொரு அன்னையின் குரலாக ஒலிக்கிறது பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்ஓர் அன்ன இளையர் இருப்பப்
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டில் கிடபித்
தூவென் அறுவை போர்ப்பித் திலதே”

திணை – கறந்தை, துறை – வேத்தியல்
புறம் – 286, பாடியவர் – ஒளவையார்

‘வெள்ளாட்டுக் கிடாக்களைப் போல அவனையொத்த இளைஞர் பலர் இருந்தபோதிலும் அவர்களுக்கும் மேலாக என் மகனுக்கு வழங்கப்பட்ட கள், அவனை காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடக்க வைத்து, தூய வெண்ணிற ஆடையால் மூடச் செய்திருக்கிறது.‘ இங்கு மகனைப் பறிகொடுத்த அன்னை அழுது அரற்றினாள் அல்ல. மாறாக அவளது சீற்றம், தணிந்த குரலில் ஆனால் தணியாத வெம்மையோடு வெகு சிக்கனமாக வெளிப்படுகிறது – இக்கவிதையில். இவ்வளவு கால இடைவெளிக்குப் பிறகு இப்போது படிக்கும் போதும் உறையாதிருக்கும் அத்துக்கம் இவ்வரிகளில் இன்னமும் கசிந்து கொண்டிருப்பதை உணரலாம். இதற்கு மாறாக மன்னரால் கள் வழங்கப்பட்ட தன் மகன், அவருக்காக வேண்டிப் போரில் மரித்திடும் பேறு பெறாமல் போயினானே என அத்தாய் வருந்துவதாகப் பொருள் கொள்பவரும் உண்டு. அது போரை ,வெற்றியை, வீரத்தை சிறப்பிக்கும் முகமாக வரித்துக்கொண்ட ஆண்மைய  நோக்கினின்று பிறப்பது. ஆனால், ஒரு தாயின் ஆற்றாமை எனக் காண்போமாயின் முதற்சொன்ன பொருளே சாலவும் பொருந்தி நிற்கும்.

என்னுடைய நண்பரொருவர் பயிற்சிபெற்ற உளவியல் ஆலோசகர். தொடக்க நிலையிலான மனநலப் பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்டவர்களோடு உரையாடி, அவர்களுடைய சிக்கலின் மூலத்தைக் கண்டறிந்து தகுந்த ஆலோசனைகள் வழங்குவது அவருடைய பணி. பெயர் , ஊர் முதலிய அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு அவர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவில் ஆழப் பதிந்துபோனது.

திருமண வயதிலுள்ள இளம்பெண் பொறியியல் படித்து முடித்து பெயர்பெற்ற பன்னாட்டு நிறுவனமொன்றில் கைநிறைய ஊதியத்துடன் பணிபுரிகிறாள் .பள்ளிப்பருவம் தொட்டு உடன் பயின்றுவரும் நண்பன் கல்லூரியின் இறுதிவருடத்தில் அவள் மீதான தன் காதலைச் சொல்கிறான். முதலில் தயங்கினாலும் அவனுடைய தொடர்ச்சியான வேண்டுதல்களுக்கு  இணங்கி சம்மதிக்கிறாள்.

சிலவருடங்கள் இனிமையாகக் கழிந்தது. திருமணம் குறித்து வீட்டில் பேச வேண்டும் என்கிற நிலை வரும்போது பையன் தயங்குகிறான். அவன் வீட்டில் அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அப்பெண்மணி முதலில் மகனின் முடிவைக் கடுமையாக எதிர்க்கிறார். பிறகு அவனுடைய மனவாட்டத்தைக் கண்டு சற்றே  இறங்கிவந்து ஒரு தீர்வை முன்வைக்கிறார். குல தெய்வம் கோவிலில் வைத்து பூ போட்டு பார்ப்பது. முடிவு சாதகமாக வந்தால் அம்மா சம்மதிப்பது, பாதகமாக வந்தால் மகன் விட்டு கொடுத்து விடவேண்டும். பையனுக்கு எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டால் போதும் என்கிற நிலை. தலையாட்டுகிறான்.



ஒரு வெள்ளிக்கிழமைக் காலையில் சாமி சன்னதியில் அவர்கள் நினைத்துக்கொண்ட வெள்ளைப் பூவுக்கு பதிலாக சிவப்பு பூ கையில் வந்தது. பையன் தயங்கித் தயங்கி வந்து தன்னை மன்னித்துவிடுமாறு அப்பெண்ணிடம் அழாதகுறையாக வேண்டுகிறான்

“சுயமாக முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதி சார் அவன்” என நண்பரிடம் குமுறினாள் அப்பெண். “பள்ளி நாட்களிலிருந்து அப்படிதான். எந்த வண்ணத்தில் உடை எடுப்பது, என்ன உணவிற்கு ஆர்டர் செய்வது, எந்தப் படத்திற்கு செல்வது எனச் சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட தயங்கித் தடுமாறுவான். நான்தான் அவனுக்காக முடிவெடுப்பேன். கைளைப் பற்றிக்கொண்டு நன்றி சொல்வான். ‘நீ இல்லாவிட்டால் நான் என்ன ஆவேனோ தெரியாது’ என்று குரல் ததும்ப அவன் சொல்லிய போதெல்லாம் நான் நெஞ்சு விம்ம நின்றிருக்கிறேன். இன்று என்னை வேண்டாம் என்று உதறிவிட்டுப் போக அவனால் எப்படி முடிந்தது என்று ஆத்திரம் ஒருபக்கம் வந்தாலும், மறுபக்கம் நான் இல்லாமல் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற கவலை தான் என்னைப் பெரிதாக வருத்துகிறது. வேலையில் கவனம் சிதறகிறது. வீட்டில் எல்லோரிடமும் எரிந்து விழுகிறேன். நண்பர்களைப் பார்ப்பதில்லை. வெளியே எங்கும் போவதில்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். இது என் சுபாவமேயல்ல.“ கண்ணில் நீர் வழியச் சொன்னவளை நிறைய பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நண்பர் கடைசியாக அவளிடம் வினவுகிறார்.

“ஒருவேளை மனம் திரும்பி வந்தால் அவனை மறுபடியும் நீ ஏற்றுக்கொள்வாயா?”

என்ன சொல்வது எனப் புரியாமல் ஒருநிமிடம் மெளனமாக யோசிக்கிறாள்.

“என்னை வேண்டாம் என்று மறுத்த போதே அவன் மீதிருந்த காதலெல்லாம் வடிந்து விட்டது. இப்போது நான் இப்படி கிடந்து அல்லல்படுவதெல்லாம் அவன் பாவம் தனியே எப்படி சமாளிக்க போகிறானோ என்கிற பச்சாதாபத்தால் தான் என்று தோன்றுகிறது.”

நண்பர் அவளைக் கண்மூடி உள்மனதை உற்றுக் கவனிக்கச் சொல்லிவிட்டு, அவள் ஞாபகத்தை மெல்ல மெல்லப் பின்னகரச் செய்கிறார்.

“நீ அவனை எப்போது முதன் முதலாகப் பார்த்தாய்? நினைவுபடுத்திச் சொல்”

அவள் மெதுவாக நினைவின் தடத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறாள். கல்லூரி நாட்களையெல்லாம் கடந்து பள்ளிப் பிராயத்திற்குள் நுழைகிறாள்.

“ம். இப்போது கவனத்திற்கு வந்துவிட்டது” தலையை ஒருதரம் உதறிக்கொண்டவளாகத் தன் கண்களைத் திறவாமலேயே சொல்கிறாள்.

“அது நடந்தது மூன்றாம் வகுப்பில். நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அவன் புதிதாக வந்துசேர்கிறான். அவனுடைய அப்பா விட்டுவிட்டுப் போன பிறகும் வாசலையே பார்த்து தேம்பிக் கொண்டிருந்தவனைப் பார்த்து, ‘பயப்படாதே’ என்று சமாதானப்படுத்தி பையில் வைத்திருந்த சாக்லேட்டில் பாதியைப் பிட்டு அவனுக்குத் தந்தேன்”. நண்பர் பிறகு அவளிடம் பொறுமையாக விளக்குகிறார். ‘உங்களிருவருக்குமிடையில் ஆழமான ஒரு உறவு இருந்திருக்கிறது, பொய்யில்லை. ஆனால், அது நீங்கள் புரிந்து கொண்டது போல காதல் அல்ல. சின்னஞ்சிறுவனாக அவன் அழுதுகொண்டு வகுப்பில் நின்றிருந்த முதல் கணத்திலிருந்து அவனிடம் பரிவுகாட்டியும் பாவனை செய்தும் நீ வகித்து வந்திருப்பது ஓர் அன்னையின் பாத்திரத்தைத் தான். வீட்டில் அவனுக்காக முடிவுகளை எடுப்பது அவனது அம்மா என்றால், வெளியே எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொண்டாய். இரண்டு இடத்திலும் அவனாக சிந்தித்து சொல்பட வேண்டிய நெருக்கடிகள் எதுவும் இதுவரையிலும் நேர்ந்ததில்லை. இப்போது அம்மாவா? நீயா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அம்மாவின் நிழலில் ஒளிந்து கொண்டுவிட்டான். இப்போது நீ வருந்துவதும் கூட இழந்த காதலை எண்ணி அல்ல. உன்னுடைய இந்தத் துக்கம் மகனைப் பிரிந்த அன்னையுடையதைப் போன்றதே”



அவள் அதிர்ச்சியாக நண்பரை ஏறிட்டுப் பார்க்கிறாள். அவர் புன்னகையோடு மேலும் தொடர்கிறார். ‘உனக்குக் கிடைக்காமல் போவது எல்லாமே இழப்பு என்று எண்ணாதே! சில சமயம், அது அதிர்ஷ்டத்தின் தீண்டலாகக் கூட இருக்கும் என்று சொல்வார்கள். ஒருவேளை, அவனைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆண், பெண் உறவின் உண்மையான பரிமாணத்தை, அதன் கொடுக்கல் வாங்கலை முழுமையாக அறிந்திராமலே போயிருப்பாய். ஆனால், இப்போது எதிர்காலத்தில் வரவிருக்கும் கணவனுக்கு உகந்த மனைவியாகவும், உனது சொந்த குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கப் போகிற நல்வாய்ப்பு உன்முன் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் ”

வெகுவிரைவிலேயே அந்தப் பெண் அவ்வழுத்தத்தினின்றும் விடுப்பட்டவளாக தன் அன்றாடத்திற்கு திரும்ப வந்துவிட்டதாக நண்பர் சொல்லி முடித்தார். அதன் பிறகு பலமுறை நான் இதைக் குறித்து யோசித்ததுண்டு. மூன்றாம் வகுப்பில் படிக்கும் ஒரு எட்டு வயதான பெண் அந்த வயதிற்கேயுரிய குழந்தைத்தனத்தையும் தாண்டி தன்வயதுடைய ஒரு சிறுவனுக்கு தாய்மையின் பரிவைக் காண்பிக்க முடிந்திருக்கிறது. அது எவ்விதம் சாத்தியமாகிறது என்று வியந்து நின்றிருக்கிறேன். பரிணாமத்தின் தொடர்ச்சி இடையில் எங்கும் அறுந்துபடாமல் இருக்க இயற்கை வரித்துக் கொண்டிருக்கும் உத்திதான் போலும் இத்தாய்மை உணர்வு என்று தோன்றியது. தாயைக் குறித்து எண்ணிறந்த கவிதைகள் நாம் படித்திருப்போம் என்றாலும் தாய்மை என்கிற பிம்பத்தை பெரிய அளவில் ரொமான்டிசைஸ் செய்யாமலும், அதே சமயத்தில், அதன் அசலான ஆகிருதியை துல்லியமாகவும் நேரடியாகவும் விவரிக்கிறது ராஜாசுந்தரராஜனின் பின்வரும் கவிதை. இது அவருடைய மொத்தக் கவிதைகள் அடங்கிய “தாய்வீடு” தொகுப்பில் உள்ளது.

அம்மா

வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்
கொதிகலன் நாள்பட நாள்பட இற்றுப்போகும்
வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்
செடிகளுக்கு
விதையிலைகள் வேண்டாதனவாகிவிடும்
குஞ்சுகள் கோழியாகும்
சேவல்கள் கூட வரும்
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்துவரும்
காற்றோடு போய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்
சாவிலும் கூட
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்


 

நம்முடைய கரிசனமும், வாஞ்சையும் நம் சந்ததிக்குத் தான் மிகுதியும் போய்ச் சேருகிறது. பெற்றோருக்கு அதில் பகுதி கிடைத்தாலே அதிகம் தான். அடைக்கப்பட முடியாதது பெற்றகடன். அதனால் தானோ என்னவோ தாய்மை பற்றின ஆக்கங்கள் அனைத்திலும் நிழலெனப் படிந்திருக்கும் ஒருவித சுய இரக்கத்தையும் குற்றவுணர்வையும் நாம் காண முடியும். பிள்ளைகளின் அந்த விலகலை உயிர் இயல்பு இதுவென பற்றற்றதொரு தொனியில் இக்கவிதை சுட்டுகிறது. இத்தொனியினாலேயே அவ்வுணர்வு மேலும் ஆழமாகிறது. ‘இனியும் பாலாகப் பாலாகத் துடிக்கும் மார்புக் குருதியின் நாடி’ என்றொரு வரி பாதசாரியின் கவிதையில் வரும். ஒரு பெண் தன் வாழ்வின் போக்கில் இயல்பெனக் கடக்கும் அந்த அனுபவம் எம் போன்ற ஆணுக்கு எவ்வளவு யோசித்தாலும் தீராத அதிசயம் தான். அதை வியப்பதன்றி வேறென்ன செய்யவியலும் அவர்களால்?

Tuesday, 25 August 2020

மாமதயானை

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவை முன்னிட்டு , ஜெயமோகனும் நண்பர்கள் சிலரும் திருப்பூர் அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்குச் சென்றிருந்தோம் . செவித்திறன் இழந்த , வாய் பேசவியலாத குழந்தைகள் நூற்றுக்கும் அதிகமானோர் பயிலும் சிறப்பு பள்ளி அது .'குக்கூ' சிவராஜ் அப்பொழுது அங்கிருந்தார் அவருடைய முன்னீட்டில் 'யானை டாக்டர் 'சிறுகதையை அக்குழந்தைகள் வாசித்திருந்தனர். அந்த அனுபவத்தை தங்கள் கற்பனையின் துணை கொண்டு கோட்டோவியங்களாக வரைந்து வண்ணம் தீட்டி இருந்தனர். ஒரு வகுப்பறை முழுவதிலும் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சித்திரங்களைக் கண்டதும் நாங்கள் நெகிழ்ந்து போனோம் .சிறிதும் பெரிதுமான அளவுகளில் கறுப்பு மட்டுமல்லாது சிவப்பு ,பச்சை ,நீலம் என எல்லாவிதமான நிறங்களிலும் மிளிர்ந்தன யானைகள் . அவை எல்லாவற்றிலும் தென்பட்டதொரு ஒற்றுமை , அவை அனைத்துமே ஏகதேசமாக குழந்தமையின் சாயலை கொண்டிருந்தன என்பதுவே அல்லது அச்சித்திரங்களின் எளிமையினால் பார்த்த எனக்கு அவ்வாறு தோன்றியிருக்கலாம். 

விழா அரங்கில் அக்குழந்தைகளின் முன் சிவராஜ் 'யானை டாக்டர் 'எழுதியவர் என்று ஜெயமோகனை அறிமுகப்படுத்தியபோது பலமாக கரவொலி எழுப்பிய அக்குழந்தைகளின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் அளவில்லாதது . தன் எழுத்துக்காக எவ்வளவோ வாசக எதிர்வினைகளை ஜெயமோகன் கண்டிருப்பார் , அவை அனைத்தையும் காட்டிலும் இக்குழந்தைகளின் நன்றி பெருக்கு நிச்சயம் தனியான ஒன்றுதான். ஒருவேளை ஜெயமோகனின் வேறு ஒரு கதையை படித்து இருந்தால் , அவர்கள் இவ்வளவு தூரம் ஈர்க்கப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே ?  யானைதான் அக்குழந்தைகளின் குதுகுலத்திற்கு முதன்மையான காரணம் என்றும் தோன்றியது. பொதுவாகவே தம்மைக் காட்டிலும் அளவில் பெரியதான உருவம் எதைக் கண்டாலும்  குழந்தைகள் முதலில் அடையக்கூடிய உணர்வு திகைப்பு அல்லது அச்சம் என்பதாகவே இருக்கும் . அதற்கு நேர்மாறாக , ஒரு யானையைக் காணும் போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள் இது வினோதமாக தெரிந்தாலும் கூட யானையின் தோற்றம் அல்லது நடத்தையில் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஏதோ ஒரு தன்மை இயல்பாகவே இருக்கிறது. அதன் ஆகிருதியைக் கண்டு மிரட்சி அடைவதற்கு பதிலாக அதனை அளவில் பெரியதொரு விளையாட்டு பொம்மை என்பதாகவேக கருதி அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்படுகிறார்கள்.

தரைவாழ் விலங்குகளிலேயே மிகப் பெரியது யானைதான். சராசரியாக 6 ஆயிரம் கிலோ வரையிலும் எடையைக் கொண்டிருக்கும் அது கோவில் மண்டபங்களில் காதுகளை அசைத்தபடி அசட்டையாக நின்றுகொண்டு ஒரு வாழை பழத்திற்காக பக்தர்களை ஆசீர்வதிக்கும் . அதன் தும்பிக்கை தனித்தன்மை வாய்ந்தது அதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. அதைக்கொண்டு மெலிந்த ஒரு குண்டூசியை கூட அதனால் தவறவிடாமல் பொறுக்கி எடுத்துவிட இயலும். ஆனால் அதுவோ பாகனால் தெருவில் நடத்திவரப்படிகையில் அந்தத் துதிக்கையை நீட்டி கடைகடையாக சில்லறை வேண்டி யாசிக்கிறது. அபாரமான நினைவுத் திறன் உடையதாகக் கணிக்கப்படும் யானையை , ஒரு கண்ணாடி முன் நிற்க வைத்தால் , அதனால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மனிதக் குரங்குகளைத் தவிர்த்து இத்தகைய தன்னுணர்ச்சி கொண்ட விலங்கு யானைதான் என்கிறார்கள் உயிரியலாளர்கள். 

அதனால்தானோ என்னவோ மனிதர்களால் எளிதில் பழக்கப்படுத்த கூடிய ஒன்றாக இது இருக்கிறது .தனது வலிமையை முழுமையாக உணர்ந்த ஆனால் அதை அநாவசியமாகப் பிற உயிர்களிடம் காட்டிடாத  ஒரு பெருந்தன்மை அதனிடம் இயல்பாகவே இருக்கிறது. ஒரு தலைவனுக்குரிய தகுதியாக அமைய வேண்டியது இத்தன்மையே ஆகும். இலகுவான சூழலில் எல்லோராலும் எளிதில் அணுகும்படியானவனாகவும் அதுவே , அசாதாரணமான தருணம் என்று  வரும்போது அஞ்சாது அதை எதிர்கொள்ளும் அளவு இறுகிய நெஞ்சத்தவனாகவும் அவன் இருக்கவேண்டும் . அவ்வையார் பின்வரும் புறநானூற்றுப் பாடலில் யானை என்கிற ஒற்றை படிமத்தின் வாயிலாக அதியமான் நெடுமான் அஞ்சியை அவ்வாறான வலிமையும் எளிமையும் கொண்ட ஒரு தலைவனாக நமக்கு காட்சிப்படுத்துகிறார்.

 

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழா அலின்

நீர்த்துறை படியும் பெருங்களிரு போல

இனியை , பெரும! எமக்கே; மற்றுஅதன்

துன்அருங் கடாஅம் போல

இன்னாய், பெரும!நின் ஒன்னா தோர்க்கே.

-        அவ்வையார்

புறம்-94

திணை- வாகை

துறை- அரச வாகை

 

ஊரின் கண் உள்ள சிறுவர்கள் கூடி , தனது வெண்மையான தந்தங்களைக் கழுவுவதற்கு ஏதுவாக நீர் துறையில் அமிழ்ந்திருக்கும் பெரிய யானையை போல எம்மனோர்க்கு நீ இனியவன் . ஆனால் , அதே யானை மதம்கொண்டு சினந்து எழுவதே போலும் எம் எதிரிகளுக்கு நீ இன்னாதவன் என்பதே இப்பாடலில் எளிய பொருள்

 சிங்கமாகவும் புலியாகவும் இருந்து அஞ்சி நடுங்கச் செய்வதில்லை ஒரு யானையைப் போல் வலிமை இருந்தும் சக உயிர்களிடத்தே மென்மையாக இருப்பதே மெய்யான வீரம் ஆகும் .

            +++

ஒரு கோடையில் , நண்பர்கள் சிலர் பர்கூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் அருகே , சிறிய கல் வீடு ஒன்றில் தங்கி இருந்தோம் . உப்பும் உறைப்பும் போதாது ,  நாங்களே சமைத்து உண்ட எளிமையான இரவு உணவிற்குப் பிறகு , முன் வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தோம். மின் வெளிச்சத்தின் எதிரீடு ஏதுமில்லாத வானத்தில் , எட்டிப் பிடித்தால் அள்ளிக் குவித்து விடலாம் போலக் கொட்டிக்கிடந்த நட்சத்திரங்களை வியப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில் , திடுமென  கூப்பிடு தூரத்தில் கூச்சல் எழுந்தது . தொடர்ந்து விட்டுவிட்டு சிறிய வெடிச் சத்தமும் சேர்ந்து வந்தது.

 அந்தக் கூச்சலோடு அத்திசையில் இருந்து அணைந்து எரியும் விளக்குகளின் வெளிச்சமும் எங்களை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டோம் 'யானை இறங்கியிருக்கும்' உற்று கவனித்த உள்ளூர் நண்பர் சொன்னார் .சில நிமிடங்களில் நாங்கள் இருந்த  இடத்திற்கு

எதிரே , கண் எட்டும் தொலைவில் இறக்கத்தில் இருந்த பாதையில், மேலும் கீழுமாக அசையும் விளக்குகளின் வெளிச்சத்தில், உலோகத்தை தட்டுவதால் எழும் கனத்த  ஒசைக்கு  நடுவே, ஓட்டமும் நடையுமாக விரையும் யானை ஒன்றைக் கண்டோம் .காட்டின் எல்லை வரை அதைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார்கள் என்றார்  நண்பர். முன்பு அரிதாக நடக்கும் ஒன்றாக இருந்தது இப்பொழுது அடிக்கடி நிகழும் சம்பவமாகிவிட்டது . அதற்கு யானைகளைக் குறை சொல்ல முடியாது .ஒரு யானைக்கு உணவாக நாளொன்றுக்கு சராசரியாக 200 கிலோவுக்கும் அதிகமான பசுந்தழை தேவைப்படும். கூட்டமாகச் சென்று அவை உண்பதால் அழிந்து போகும் இடத்தை விட்டு பெயர்ந்து வேறு இடத்திற்கு  சென்று, செடிகள் வளர்ந்தபிறகு அவ்விடத்திற்கு அவை திரும்ப வரும் .அவ்வாறான இடப்பெயர்ச்சிக்கு உகந்ததாக அல்லாமல்  அடர்ந்த காடுகளின் பரப்பு சுருங்கி போனதாலும் அவற்றின் வலசை பாதைகள் மனிதர்களால் தடைசெய்யப் படுவதாலும் யானைகள் இவ்வாறு ஊருக்குள் திரும்பி விடுகின்றன என்றார். அவர் குரலில் , மனுஷங்க பிழைப்பே நிச்சயம் இல்லாத காலத்தில் , இதற்கெல்லாம் யார்தான் என்ன செய்துவிட முடியும் என்பதை போல வருத்தம் தொனித்தது .

 நாங்கள் சற்று நேரம் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை .அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தோம். முன் இரவில் நட்சத்திரங்களின் மெல் ஒளியில் , ஒரு பெரிய கரிய நிழலைப் போல நகர்ந்து சென்ற அப் பேறுருவைப்  பார்த்தது , ஏதோ ஒரு கனவு போல தோன்றியது. வெகு காலம் முன்பாக படித்திருந்த கதை ஒன்று எனது நினைவில் எழுந்தது .

 ஒரிரண்டு நல்ல கதையோ கவிதைகளோ எழுதிவிட்டு , அதன் பிறகு காணாமல் போய்விடும் எத்தனையோ பேர் தமிழில் இருக்கிறார்கள். கோவில்பட்டியை சேர்ந்த கௌரிசங்கர் அவர்களில் ஒருவர் . முழுவதும் கறுப்புத் தாள்களில் வெண்ணிற எழுத்துகளால் அச்சிடப்பட்டு வந்த அவருடைய கவிதைத் தொகுதியான ' மழைவரும் வரையில் ' அது வெளியான காலத்தில் அதிகமும் கவனிக்கப்பட்டது. கூடி வராத நேசம் குறித்த இழப்புணர்வை கழிவிரக்கம் தொனிக்காததொரு விட்டேற்றியான குரலில் பேசுபவையாக அமைந்தவை அக்கவிதைகள் என்று நினைவு. அவரது சிறுகதைத் தொகுப்பும் வெளியாகிருந்தது. தலைப்பு கதையாக அமைந்த 'முந்நூறு யானைகள்' என்ற சிறுகதை மெர்ஸி என்கிற பதின்ம வயதுப்பெண்ணைப் பற்றியது .

 அவ்வயதிற்கே உரிய பேதமையும் விளையாட்டுத்தனமும் அதே சமயத்தில் , பார்க்கின்ற ஆண்களை எல்லாம் பேதலிக்கச் செய்கிற அழகும் நிரம்பியவள் அவள்.  எல்லா அழகிகளைப் போலவும் அவளைக் குறித்தும் உண்மையும் கற்பனையுமாக பல வதந்திகள் ஊரில் உலவுகிறது. அக்கதையில் மெர்ஸி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு வந்த கனவு பற்றி தன் சினேகிதி தனசீலியிடம் விவரிப்பாள். ' நேற்று இரவு என் வீட்டுத் தோட்டத்தில் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து ஏழு  யானைகள் வந்து நின்றன. அவ்வளவையும்வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் இருநூறு முந்நூறு என்று கொடுத்து அனுப்பியதில் தோட்டம் காலியாகிவிட்டது' என சிரித்துக்கொண்டே சொல்கிறாள் கனவில்தான் என்றாலும் , யானைகளைத் தூக்கிக் கொடுக்க எவ்வளவு விசாலமான மனம் வேண்டியிருக்கும். அந்த மனமே பிறகு அவளது அத்தனை துயரத்திற்கும் காரணமாக எப்படி அமைந்துவிடுகிறது என்று அந்தக் கதை விவரித்து போகும் .

 பாம்பு துரத்துவது , பள்ளத்தில் விழுவது என நம்மில் பலருக்கும் வரும் பொதுவான கனவுகள் சில உண்டு. அவற்றில் ஒன்றுதான் அறிமுகமற்ற புதிரான ஒரு இடத்தில் வெளியேற வழி தெரியாமல் நாம் அகப்பட்டுக் கொண்டு தவிப்பது போல் வரும் கனவு. அறிமுகமற்ற ஒரு நகரத்திற்கோ, பணிக்கோ பந்தத்திற்கோ அல்லது பழக்கத்திற்கோ  நாம் ஆட்படும்போது ,  அறியத் துடிக்கும் ஆவலில் உள்நுழைந்து விடுவது எளிதாக இருக்கும்.  அகப்பட்டுக் கொண்டதாக ஒரு அச்ச உணர்வு எழும்போது பார்த்தால் , திரும்பும் வழி தெரியாது திகைத்து நிற்போம். போகிற வழியில்தான் திரும்ப வருகிறோம் என்றாலும் இரண்டும் ஒன்றல்ல அவை இரண்டு  வெவ்வேறு பயணங்களால் ஆனது .

 கல்யாண்ஜியின் பின்வரும் கவிதையிலும் ஒரு யானை அவ்வாறு ஒரு வாசல்வழி நுழைந்துவிட்டு வெளியேற வழி தெரியாமல் அகப்பட்டுக் கொள்கிறது. 

சொப்பன வாசல்

________________

 உங்களுக்குத் தெரியும்

எங்கள் வீட்டுத் தலவாசல்

சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை

சொப்பனத்தில் வந்த யானையை

வெளியே விரட்டுகிறோம் எல்லோரும்

' இவ்வளவு சின்னவாசல் வழியாக

எப்படிப் போவேன்? ' அழுகிறது.

' போகிற வாசலாக அல்ல,

வருகிற வாசலாக நினைத்துப்

போ ' என்கிறோம்

போய்விட்டது சிரித்துக்கொண்டே

        - கல்யாண்ஜி

    ( நொடி நேர அரை வட்டம்)

 

ஒரு தீற்றல் கூடுதலோ குறைவோ இன்றி துல்லியமாக வரையப்பெறும் ஒவியங்களை ஒத்தவை கல்யாண்ஜியின் பெரும்பாலான கவிதைகள் . இக் கவிதையும் அத்தகைய கச்சிதமான காட்சித்தன்மை கொண்டதே.ஒரு சொல்லையும் கூடுதல் குறைவென்று ஒதுக்கவியலாது.நிற்க இதிலும் ஒரு யானை வெளியேறும் வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. நினைத்தால் வாசலென்ன வீட்டையே கூட அதனால் அசைத்து தகர்த்துவிட முடியுமாகயிருக்கும். ஆனால் அதுவோ வழி தெரியாமல் அழுகிறது . ஒரு குழந்தையைப் போல. தெரிந்த பிறகோ சமாதானமடைந்து சிரிக்கிறது . அதுவோ இன்னும் குழந்தையைப் போலிருக்கிறது. தன் உருவத்திற்கு சம்மந்தமில்லாத உள்ளம் கொண்ட உயிரி அது.அதனால்தான் போலும் 'இயற்கையின் உன்னதமான படைப்பு யானைதான் , தீதொன்றுமிலாத பேருரு அது ' என்று ஆங்கிலக் கவி ஜான் டன் விதந்து கூறுகிறான்.

 நிர்வாகவியலில் 'சட்டகத்திற்கு  வெளியே சிந்தித்தல்' என்றொரு கருதுகோள் உண்டு . சிக்கலான பிரச்சினைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்ட மரபான வழியாகவே தீர்வுகாண முயல்வதை விடவும் ,  முறை சாராத யோசனைகள் மூலம் சமயங்களில் மிக எளிதான தீர்வைக் காண முடியும் என்கிறது அது. போகிற வழியையே வருகிற வழியாகவும் எண்ணிக் கொள் என்று இக்கவிதையில் அத்தகையோர்  யோசனையைதான் கவிஞர் முன்வைக்கிறார். முதல் வாசிப்பிற்கு இது ஏதோ மொழி மாற்றம் என்று தோன்றலாம் . ஆனால் அது எண்ணம் சார்ந்த மாற்றமாகவும் பிறகு செயல் சார்ந்த மாற்றமாகவும் ஆகும்போது வழி கிடைத்து விடுகிறது .

 டினோசரை  நெருங்குவது எப்படி ? என்கிற கேள்விக்கு ,  அது நம்மை நெருங்க செய்வதுதான் என்கிறார் தனதொரு கவிதையில் தேவதச்சன். இது கேட்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் , அதற்கு நாம் ஒரு வனமே ஆகுமளவிற்குப் பொறுமையுடனும் நிபந்தனையற்றும்  காத்திருக்க வேண்டும் . டினோசரை நெருங்குவதற்கு மட்டுமல்ல ஒரு கவிதையை நெருங்குவதற்கும்  கூட.

Monday, 2 September 2019

கல் அழியும், சொல் அழியாது


இன்று விடுமுறை என்பதாலும், சந்தித்து நீண்ட நாளாகி விட்டதே என்பதாலும் நண்பரொருவரை பார்த்துவிட்டு வரலாம் எனப் புறப்பட்டுச் சென்றேன்.  வீட்டின் முன் ஒரு கார் நின்றிருந்தது வாசலில் செருப்புகள் கலைந்து கிடந்தன.  உள்ளே போகலாமா, திரும்பி விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போது நண்பரே வெளியில் வந்துவிட்டார் ’ஏன் இங்கயே நிக்கிறிங்க உள்ளே வாங்க’ என்று அழைத்துப் போனார்.  கூடத்தில் ஏற்கனவே நான்குபேர் அமர்ந்திருந்தனர் ஐந்தாவதாக எனக்குமொரு இருக்கை போடப்பட்டது.  வந்திருந்தவர்கள் அரிமா சங்கத்தினர். நண்பரும் அதில் உறுப்பினர், மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தார்.  நகரத்தில் ஒரு இரத்த வங்கி உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அதற்கான திட்டவரைவின் படி ஒரு பெருந்தொகை திரட்ட வேண்டியிருந்தது அதன் பொருட்டு நன்கொடை வேண்டி யார்யாரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரிப்பது குறித்தே அவர்கள் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர் நண்பர் ஒரு பெயரை முன்வைத்தார்.  ’சாந்தமூர்த்தி சார்கிட்ட முதல்ல போகலாம் அவர் எவ்வளவு கொடுக்கிறார்ன்னு பார்த்துகிட்டு, பிறகு மத்தவங்ககிட்ட கேட்கலாம்’. யாருக்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை அவர் நகரத்தின் பிரமுகர்களில் நாயகமானவர் அல்லது அப்படித் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறவர் என்றும் சொல்லலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதி, லாரி போக்குவரத்து, நூற்பாலை என பல தொழில்கள் அவருக்கு. உபயதாரர் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கும் தெருமுனை பிள்ளையார்க் கோவில்விழாவிலிருந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்று நடத்தும் அரசுவிழாவரைக்கும் நன்கொடை திரட்ட, முதலில் அவர் வீட்டுப்படிதான் ஏறுவார்கள். மேடையில் தொடர்ந்தாற்போல மூன்று நிமிடத்திற்கு மேல் பேசமாட்டார் என்றாலும், நகரில் நடக்கும் விழாக்களில் பாதிக்கும் மேல் அவர்தான் தலைமை, முன்னிலை, வாழ்த்துரை.  ’கொஞ்சம் விளம்பரப் பிரியரோ’ என்று நண்பரைக் கேட்டேன். ’அப்படியும் சொல்ல முடியாது இவரைக் காட்டிலும் பணக்காரர்கள் நாலைந்துபேர் இதே ஊரில் இருக்கிறார்கள்.  அவர்கள் யாருக்கும் இவரைப் போல கொடுக்கிற மனசு இல்லை’ என்றார்.

ஆறுமாதம் கழித்து நடந்த அந்த இரத்த வங்கித் திறப்பு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெரியவர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.  பிறகு நடந்த பிரத்தேயக விருந்தில் பெரியவருக்குப் பக்கத்தில் நண்பரும் அடுத்ததாக நானும் அமர்ந்திருந்தோம் ’ஐயா, நானும் இந்த ஊருக்கு வந்த நாளா நல்லதுகெட்டதுக்குன்னு நன்கொடை புத்தகத்தை தூக்கிகிட்டு அலைஞ்சிருக்கேன் உங்க தயவும் தாராளமும் யாருகிட்டயும் இல்லிங்க’ நண்பர் சொன்னதைக் கேட்டு பெரியவர் தன்மையாகச் சிரித்தார் ’தம்பி நான் பொறக்கப்போ இந்த வசதியோட பொறக்கல போறப்போ இதுலிருந்து ஒத்த ரூபாயக்கூட எடுத்துக்கிட்டும் போகப் போறதில்ல. உங்களை மாதிரி நாலுபேர் சேர்ந்து ஒரு நல்ல காரியம் செய்யும் போது ஏதோ நம்மால் முடிந்தது' என்று அமரிக்கையாக சொல்லவும் நண்பர் வெகுவாக நெகிழ்ந்துபோனார். அவர் விடைபெற்று கிளம்பும் வரை கூடவே இருந்த நண்பர், கார் வரையிலும் உடன் சென்றார். கதவைத் திறந்து காரில் ஏறப்போனவர், ஏதோ எண்ணியவராக நின்றார். நண்பரின் தோள் மீது கைவைத்தப்படி கேட்டார்,

’தம்பி ? சின்ன வயசுல நீங்க தெருவுல நடந்துபோனா உங்களைத் தெரிஞ்சவங்க என்ன அடையாளம் சொல்லி கூப்பிடுவாங்க?’

’எங்க அப்பா பஞ்சாயத்து யூனியன்ல வேலை பார்த்தாருங்க ஐயா! அதனால் ஒவர்சீயர் பையன்னு சொல்லுவாங்க’

’என்னை எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?’

நண்பர் பதிலேதுவும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்

’சாராயக்காரர் பேரன்’

’எங்க தாத்தா எப்பவோ தனக்கு வேணுமின்னு காச்சினதை, குடிச்சது போக தெரிஞ்சவங்களுக்கும், உறவுக்காரங்களுக்கும் கொடுத்திருக்காரர். வேண்டாதவங்க யாரோ மொட்டக் கடுதாசி போட்டு, கோர்ட் கேஸ் வரைக்கும் போயி போலீஸ் ரெக்கார்டுல பேராயிடுச்சி’

சட்டை பையிலிருந்து கண்ணாடியைத் துடைத்து அணிந்து கொண்டவர் ஒரு நிமிடம் போல மௌனமாக இருந்து விட்டு தொடர்ந்தார்.  அதனால எங்கப்பாவுக்கு ரொம்ப நாள் கல்யாணம் தடங்கலாகிப் போய் கடைசியாதான் எங்கம்மாவைக் கட்டிக்கிட்டார் அந்த அவப்பேர் எங்கப்பா காலம் போயி என் காலத்துக்கும் விடாமத் தொடர்ந்து வந்துச்சு இவ்வளவு பெரிய ஆளாகி மாலை மரியாதைன்னு நான் சபையில் தலைநிமிந்து நிற்கும் போது, கூட்டத்துல மூலையிலிருந்து ஒருத்தன் பார்ப்பான், பார்வையில முள்ளோட ’உங்க தாத்தனை எனக்குத் தெரியாதான்னு?. அவன் கண்ணு கேட்கும், சிரிப்பு கேட்கும், கும்பிட்ட கை கேட்கும்.  என் தலை தானாத் தொங்கிப் போகும்.  அப்படி ஒரு நாள் குனிஞ்சு நின்னப்போ முடிவு பண்ணினேன்.  இந்த முள்ளு என் பசங்களையோ, பேரப் பிள்ளைகளையோ குத்திக் கிழிக்க விடக்கூடாதுன்னு அன்னையிலிருந்து எம் பேரை மாத்தி எழுதனனும்னு ஒரு வெறி. முன்னூறு ரூபாய்க்கு அடிக்கிற துண்டு நோட்டீஸ்ல இருந்து மூணு    லட்சம் பேரு படிக்கிற பத்திரிக்கை வரைக்கும் எல்லா இடத்திலயும் என் பேர் வரணும்ன்னு திட்டம் போட்டு வேலை செஞ்சேன் பள்ளிக்கூடம், விளையாட்டுப் போட்டி, கோவில் கும்பாபிஷேகம், அரசாங்க கமிட்டி எல்லாத்துலயும் உறுப்பினரா சேர்ந்தேன். பணம் செலவழிச்சேன், பதவி வாங்கினேன். இன்னிக்கு இந்த ஊர்ல குறைஞ்சது ஒரு ஆயிரம் கல்வெட்டிலயாவது என் பேர் இருக்கும்’ பெருமை பொங்க சிரித்தவரை நண்பரின் அருகில் நின்றவாறு வியப்புடன் நோக்கினேன்.

’என் பாட்டன் பெயரை  இந்த ஊரோட ஞாபகத்துலர்ந்து அழிச்சி, என் பெயரை காலத்துக்கும் கல்லுல நிறுத்திட்டேன்னுதான் நினைக்கிறேன்’ ஏறி உட்கார்ந்தவர் கையசைக்க வண்டி நகர்ந்தது. வெகுநேரம் வரைக்கும் அவருடைய சொற்களை நான் நினைவில் அசைப் போட்டபடியிருந்தேன்.  நம்மில் மிகப்பலரும் நமக்கு வாய்த்த வாழ்க்கையை, நமக்குத் தோன்றியபடியோ அல்லது வாய்ந்தபடியோ வாழ்ந்து முடிக்கிறோம்.  வெகு சிலர்தான் வரலாறு தம்மை எவ்விதமாக நினைவு வைத்திருக்க வேண்டும் என்று கவனத்தோடு தங்களுடைய வாழ்வை நேர்கொள்கிறார்கள். அவர்கள் தம் உடல் அழிந்தபிறகும் உலகில் தமது பெயர் நிலைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.  தங்களுடைய இந்த சிறிய வாழ்க்கையினூடாக, பல பெரிய காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்று முயல்கிறார்கள். தமக்கான திசையைத் தெரிவு செய்து நடக்கும் அவர்கள், அதன் வழியாக தம் விதியை தாமே எழுதிக் கொண்டுவிடமுடியும் எனவும் நம்புகிறார்கள்.  அந்த நம்பிக்கைகள் பலவற்றையும் அடித்துக் கொண்டோடும் காலவெள்ளத்திற்குத் தப்பி வரலாற்றில் பிழைத்திருப்பவை இற்சில பெயர்களே.  அதில் ஒரு பெயராக சங்க இலக்கியத்தில் காணப்படுவது தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிற நீளமான பெயர். சிறுவனான பாண்டியன் நெடுஞ்செழியன் தனது அரசை அபகரிக்கும் நோக்கோடு குறுநில மன்னர்கள் சிலரோடு சேர்ந்து தன்னை தாக்கவரும் சேர, சோழ அரசர்களை எதிர்நின்று வெல்லாவிடில் எனக்கு இவையெல்லாம் நேரட்டும் என வெஞ்சினம் உரைப்பதாக அமைந்தது பின்வரும் புறநானூற்றுப் பாடல்

நதேகக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவன்னெ உடையக் கூறி
புடுமணி இரட்டும் பாவடிப் பணைத்தான்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
புடையமை மறவரும் உடையம் யாம் என்று

உறுகுப்பு அஞ்சாது உடல் சினங் செருக்கிக்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருங்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
என்னிழல் வாழ்நர் செல்நிழல் காணாது

கோடியன் எம்  இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழித் துhற்றும் கோலேன் ஆகே
ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைகிய பார்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாதுவரைகஎன் நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் வரவே

பாடல் எண் .  72
பாடியவர்  .  தலையாலங்கானத்து செருவென்ற
                 பாண்டியன்  நெடுஞ்செழியன்

திணை  .  காஞ்சி
துறை . வஞ்சினக் காஞ்சி

இப்போரில் நான் தோற்றால் இத்தகைய பழிகளெல்லாம் எனக்கு வந்து சேரட்டும் எனப் பாண்டியன் ஒரு பட்டியலிடுகிறான் இப்பாடலில் அதன் முடிவாக அமைவது, மாங்குடிமருதனைத் தலைவராகக் கொண்ட புலவர்கள் என் நாட்டினைப் பற்றி பாடாது போகட்டும் என்கிற வரி. ஒரு அரசனின் கொடைகளும், வெற்றிகளாலும் அவனது கீர்த்தி எழுகிறது. ஆனால் ஒரு புலவன் பாடுவதாலேயே அது நிலைக்கிறது.  ஒரு செய்தியாகப் பின்வரும் தலைமுறைகளுக்கும் சென்று சேர்கிறது.  அதனாலேயே வாளுக்கும், வில்லுக்கும் அஞ்சாத அரசர்களும் கூட புலவனின் சொல்லுக்கு அஞ்சினர்.  ஒரு அரசனாக மாத்திரமன்றி ஒரு புலவனாகவும் இருந்ததால் தானோ என்னவோ சொல்லின் நீடித்த இருப்பு குறித்து நெடுஞ்செழியனால் உணரமுடிந்தது போலும்.

*

அன்று பேருந்துநிலையத்திற்கு வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டேன்.  நான் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு இன்னும் நேரமிருந்ததால், சுற்றிலும் பார்வையை ஒடவிட்டேன்.  வழக்கமான பரபரப்பும், இரைச்சலும் சற்றே மட்டுப்பட்டிருப்பதை  கவனிக்க முடிந்தது.  கடைகளின் வரிசை முடிந்து, குடிநீர் தொட்டி மறித்து நிற்கும் கிழக்கு மூலையில் ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது ஒரு அதிகாரியும், நான்கைந்து காவலர்களும் நின்றிருந்தனர்.  கையில் நீண்ட கழியுடன், பேருந்திற்கு காத்து நிற்பவர்களை உற்றுப் பார்த்தபடி இருந்தார்கள். சற்று தள்ளிப் பேருந்துகள் வெளியே செல்லும் பிரதான வாயிலருகே ஒதுங்கினாற்போல ஒரு வெள்ளை வேன் நின்றிருந்தது.  அதன் ஜன்னல்கள் கம்பிவலையிடப்பட்டிருக்க, காவல் என்ற எழுத்துக்கள் சிவப்புநிறத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.  அசாதாரணமான ஏதோ ஒன்று நிகழவிருப்பதான அனுமானம் கூட்டத்தினருக்கு மேலிட்டிருக்க, காவலர்களுக்கு பின்புறமாக வெகுவாக தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  காவலதிகாரி மணிக்கட்டை திருப்பி தன் கடிகாரத்தில்  நேரம் பார்த்தவர், தொப்பியை கழற்றி வியர்த்த தலையைத் துடைத்துக் கொண்டார்.  காவலர்கள் அவர் ஏதேனும் சொல்லக்கூடும் என்பதாக அவர் முகத்தையே நோக்கியவாறு அசிரத்தையாக நின்றிருந்தனர்.  அப்போது நான் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இடதுபுறம் திடீரென ஒரு சலசலப்பு எழுந்தது.  பேருந்து ஒன்றின் பின்புறமிருந்து சட்டென்று வெளிப்பட்ட ஐந்தாறுபேர் தம் கையில் சுருட்டிபிடித்திருந்த நாளிதழ்களை தரையில் வீசி எறியவும், அவர்களில் ஒருவன் அதில் ஒரு தீக்குச்சியை உரசி எரிந்தான்.  நொடியில் பற்றிய தீ திகுதிகுவென எரிய, இன்னொருவன் மேலும்சில கற்றை நாளிதழ்களை அத்தீயில் வீசும் முன், சுதாரித்து கொண்டு ஒடிவந்த காவலர்களில் ஒருவர் அதைப்பிடுங்கிக் கொண்டார்.  இன்னொரு காவலர் பக்கத்திலிருந்த டீக்கடையிலிருந்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து எரியும் தீயில் ஊற்றி அணைத்தார். இவையெல்லாம் ஒரிரு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது பிறகு அக்குழுவினர் மீதமிருந்த நாளிதழ்களை வீசிவிட்டு கையை உயர்த்தி கோஷமிட்டனர் முன்தினம் அந்நாளிதழ் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது என்பதை அவர்களுடைய  அந்த முழக்கங்களிலிருந்து  புரிந்து கொண்டேன் காவலர்கள் அவர்களை நடத்திச் சென்று வரிசையாக வேனில் ஏற்றினர்.  வேன் புறப்படும் வரையிலும் ஜன்னல் பக்கமிருந்து அவர்கள் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் காலை அலுவலகத்தில் அந்நாளிதழை எடுத்துப் புரட்டினேன் முதல் பக்கத்திலேயே வலது ஓரத்தில் அந்நிகழ்வைக் குறித்து ’வன்முறைக் கும்பல் வெறியாட்டம் போலீஸ் மெத்தனம்’ என்று இரண்டு பத்தி செய்தி கட்டம் கட்டி வந்திருந்தது அன்றாட அரசியல் நிகழ்வுகளை கூட சாதிய மேலாண்மை நோக்குடன் திரித்து நோக்கி, குயுக்தியாக செய்திகளை வெளியிடுவதையே வாடிக்கையாகக் கொண்டது அந்நாளிதழ் வாசகர் கடிதம் என்ற போர்வையில், வெவ்வேறுப் போலிப் பெயர்களில் தன் சார்புக் கருத்துகளை பிரசுத்து மகிழ்வதும் அதன் வழக்கம்.  எனவே தீவிரமான மொழி, இன, சித்தாந்தப் பற்றுக்கொண்ட சில சிறுகுழுக்கள் அந்நாளிதழுக்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது ஈடுபடுவது உண்டு. அரசிற்கோ, பெருநிறுவனங்களுக்கோ தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற மக்கள் திரள் ஆர்பாட்டங்கள் ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்பவை.  அவை பெரிய அளவில் வெற்றி பெறாது போனாலும் கூட, குறியீட்டு அளவில் முக்கியமானவையாக கருதப்படும்.  அதே சமயம் ஆளும் கட்சியோ அல்லது ஏதேனும் பெரு நிறுவனங்களோ தமது அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களின் கருத்து வெளியீட்டு உரிமையை தடுக்க முயற்சித்தால் அது ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறையாகவே நோக்கப்படும்.  ஒரு நிலப்பரப்பை, மக்கள் ஒட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதால் மட்டுமே அது ஜனநாயக நாடாகிவிடாது.  அங்கு எல்லாவிதமான கருத்து வெளியீட்டிற்கும் வழிவகைகள் இருந்தால் மட்டுமே அந்நாட்டில் மெய்யாகவே ஜனநாயகம் நிலவுவதாகக் கொள்ளமுடியும்.  கருத்துச் சுதந்திரம் என்பது நாம் விரும்பும் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை மட்டுமில்ல, நாம் வெறுக்கும் கருத்தை எதிர்கொள்வதற்கான சகிப்புத் தன்மையையும் உள்ளடக்கியதே ஆகும்.  கலிலியோ தொடங்கி அசாஞ்சே வரையிலும் தமது கருத்து வெளியீட்டிற்காக அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி அவதியுற்றவர்கள் பட்டியல் வெகு நீளமானது.

எல்லா அதிகாரமையமும், தனக்கு எதிரான கருத்தாக்கங்களை அடுக்குமுறை மூலமாகவே எதிர்கொள்ள முயலுகின்றன.  இதில் முடியாட்சி, மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, மதசார்பு ஆட்சி, மதசார்பற்ற ஆட்சி, ஏகாதிபத்திய ஆட்சி, கம்யூனிச ஆட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது.  உண்மையில், எந்த அரசும் தமக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்கள், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து மிகையாக அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தம் மக்களின் மூளையில் எளிதாகத் தொற்றிப் பரவும் கருத்தாக்கங்கள் குறித்தே பெரிதும் அஞ்சுகின்றன. அவை மருந்திற்கு கட்டுப்படாத, நுண்ணுயிரிகள் போன்றன. ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, இலட்சம் கோடியென பல்கிப் பெருகுபவை. அவை பயணிக்கும் திசையையும், வேகத்தையும் ஒற்றறிந்து தடுப்பது எந்த படையினருக்கும் அசாதாரணமான காரியம்.  ஆகவேதான், எல்லா காலத்திலும் ஆளுபவர்கள் ஏதோதோ காரணங்களை முன்னிட்டு, அச்சிடப்பட்ட புத்தகங்களை கண்டு அஞ்சி அவற்றை தடை செய்து வந்துள்ளனர். உண்மையான ஆயுதங்கள், ஏவுகணைகளோ, வெடிகுண்டுகளோ, துப்பாக்கிகளோ அல்ல புத்தகங்கள்தான். சக்கரங்கள் கண்டுபிடிப்பப்பட்டதற்கு சற்றும் குறையாத புரட்சிகரமான கண்டுபிடிப்பு அச்சுக்கலை.

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, பிரபல மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவத்தை வாசித்தேன்.  சுகுமாரன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருந்தார். அதில் உலகம் முழுவதிலும் பல்வேறு காலங்களிலும், மொழிகளிலும் தடைசெய்யப்பட்ட, எரியூட்டப்பட்ட புத்தகங்களின் நீண்ட வரிசையை அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தோடு விளக்கியிருந்தார்.  தனிமனிதர்களுக்கு கேளிக்கை இன்பம் நல்குவதற்காக உருவாக்கப்படும் பொழுது போக்கு சாதனமாகிய ஒரு நூல், எவ்வாறு மாற்றத்தை விளைவிக்கும் அரசியல் செயல்பாடாக மாற்றமடையக் கூடும் என்பதை அவ்வுரையில் சச்சிதானந்தன் தெளிவுபடக் கூறுகிறார்.  அழித்தொழிக்க எத்தனிக்கப்பட்ட புத்தகங்களின் நெடிய வரிசையொன்றை வரலாற்றின் தொல்பழங்காலம் தொட்டு எடுத்து முன்வைக்கும் சச்சிதானந்தனின் கண்களில், மிகச் சமீபத்தில், சில பத்தாண்டுகளுக்கு முன்னாக எரியூட்டப்பட்ட யாழ்நூலகச் சம்பவம் ஏன் தென்படவில்லை? என்பதாக, அக்கட்டுரையின் இறுதியில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பை எழுதியிருந்தார் சுகுமாரன். அதை சச்சிதானந்தனின் கவனக்குறைவு என்று குறையிரப்பதை விடவும், அச்சம்பவத்தை ஒரு வரலாற்றுக் குற்றமாக, கலாச்சார அழித்தொழிப்பாக உலகத்தின் மனசாட்சி முன் நிலைநிறுத்த முடியாமல் போன நம்  இயலாமையை நொந்து கொள்வதே சாலவும் பொருந்தும்.  ஏறத்தாழ இலட்சத்திற்குமதிகமான புத்தகங்கள் அப்போது எரியூட்டப்பட்டது.  எரிந்தது வெறும் காகிதங்களும், மிஞ்சியது கரும் சாம்பலும் மட்டுமில்லை, ஒரு கலாச்சாரத்தின் நினைவுச் சேகரம் முழுவதையும் வெந்தணலில் இட்டு அழித்த கொடூரம் அது.   மொழிப் பற்றும், இனஉணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் ஒரு கொடுங்கனவாய் பதிந்து போன துயர நிகழ்வு அது.  ஒரு மனிதத் தொகையின் நினைவினின்றும் அதன் பண்பாட்டு, கலாச்சாரப் பதிவுகளை அழித்து விடுவதன் வாயிலாக, அவர்களை வெறும் எண்ணிக்கைகளாக மாற்றிவிட முடியும்.  பிறகு அவர்களை வெகு எளிதாக வேறு எந்த தொகையுடனும் கூட்டவோ, கழிக்கவோ செய்யலாம்.  பெரு வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிதியங்களும் உலகளாவிய அவற்றின் வலை பின்னல்களும் அந்நிலையை நோக்கியே நம்மை நகர்ந்ததுகின்றன.  இதற்கு மாறாக மொழி தனது நினைவுச் சேகரங்கள் வழியாக நம்மை தொடர்ந்து பண்பாட்டுடனும், வரலாற்றுடனும் பிணைத்து வைக்க முயலுகிறது.  அவ்வகையில், யாழ்நூலக எரிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு சு.வில்வரத்தினம் எழுதிய கவிதை, மிக முக்கியமானதொரு பண்பாட்டு ஆவணமும் ஆகும்.

தன் தகுதிக்குரிய இடத்தையும், புகழையும் பெறாமலேயே மறைந்து போன துரதிர்ஷ்டசாலியான தமிழ் எழுத்தாளர்களில் வில்வரத்தினமும் ஒருவர்.  சில வருடங்களுக்கு முன்னர் விடியல் பதிப்பகம் வெளியிட்ட அவரது மொத்த கவிதை தொகுப்பை தவிர, அவருடைய பிற நூல்கள் எதுவும் இப்போது அச்சில் இருப்பதாகத் தெரியவில்லை. இக்கவிதையின் தனிச்சிறப்பு இதில் தொனிக்கும் உணர்ச்சித் தீவிரம்தான் காய்ந்த சருகில் பற்றும் தீ போல இக்கவிதையில் சொற்களை உண்டு செறித்து மேலெழும் உணர்வைக் காணலாம்

சங்கப் பலகையிலே
சரிக்கட்டி வைத்த தொட்டில்
தொட்டிலிலே கண் வளர்ந்திருந்தவை
குழலும்தான், யாழும்தான், முழவும்தான்,
மனித முயல்வின் திறன் முழுதும்தான்.
தொட்டிலுக்குக் காவலாய்
ஆயகலைகளின் தாய்
மடியிலே மழலையென வீணை
வீணையை மெலிதாய் மீட்டியதென்ன
மேவும் மாலைப் பொழுதும் சாய
பிறை வெண் குருத்தைச் சப்பியபடி
பிளிறியெழும் கரிய இருள்
இருளின் அடர்வு
ஊதுபத்தி அவியும் சுடரின்
புகை, குமைச்சல்,
துர்வாடையின் அடைவு
துட்டாத்மாக்களின் அடைவு
துட்டாத்மாக்களினதேதான்
உள்ளக் கமலங்களை ஒங்கி மிதித்தபடி
கொள்ளிக் கண் பரிகலங்கள்
கலை வளரும் தொட்டிலுக்குத்
தீ மூட்டிவிட்டு
கோட்டையின் கபாடங்களுக்குள் மறைந்துகொள்ள
தீ மூண்டெரிக்கிறது.

எரிகின்ற தீயிடை குழலும்தான், யாழும்தான்
முழவும் தான், மனித முயல்வின்
திறன் முழுதும்தான்
பிள்ளைத் தமிழின் பிடிசாம்பரள்ளிப் போய்
மாவலியில் கரைப்பமென
வாடி போட்டிருந்தவரின் வஞ்ச மனத்தகத்தே
போலும் தீ மூண்டெரிகிறது
தீயின் வீச்சம் திசைகளைச் சுட்டது
வீசு மீட்டியிருந்த தாயின்
நாத மணித்தளிர் விரல்களைச்
சுட்ட போதங்கு
மாசில் வீணை நரம்புகள் கேவின,
குழலும் குழல்வழிப் பல்லியமும் தேம்பின,
முழவின் ஏங்கின மனிதமுயல்வின் திறனெலாம்
தாயவள்,
தமிழ்தம் உணத் தந்த கலைத்தெய்வதம்,
பூண்டிருந்த வெள்ளைப் பணியெல்லாம் புகைபடர
ஆய கலைகளெல்லாம் அவனைச் சூழ நின்று
பாலுக் கிரந்தழுத பரிபாடலை நான்
எப்படிப் பாடுவேன்?
பாடத்தான் வேண்டும் ?
காற்றிலேறி, கனைகடலை, நெருப்பாற்றை
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களை காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெல்லாம் சேரப் பாடத்தான் வேண்டும்
ஏடு தொடங்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித் தீட்டி எழுதுவித்த
விரல் முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.

தமிழ் புதுக்கவிதைகளின் செம்பாகமும் வேரற்ற நீர்த் தாவரம் போன்றவை.  தம் மொழியின் சாரத்தை உள் வாங்கிப் பூக்கும் தெம்பற்று அந்நிய தத்துவம், அரைகுறை கோட்பாடு என அங்குமிங்குமாய் அல்லாடிக் கொண்டிருப்பனவே அவற்றுள்ளும் மிகுதி.  வில்வரத்தினத்தினத்தின் கவிதைகள் இத்தன்மைக்கு நேரெதிராக அமைந்தவை.  அவருடைய சிறிய கவிதை ஒன்றின் எளியவரிகூட ஒரு தொன்மையான மரபின் வாரிசு அவர் என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும்.  இக்கவிதையை எனக்குப் பரிந்துரைத்த நண்பர் ’தமிழ்தம் உணத் தந்த கலைத் தெய்வதம்’ என்று ஒருவரால் எழுத முடிந்திருக்கிறதே இதற்குமேல் வேறென்ன வேண்டியிருக்கிறது என உருகிப் போய் கேட்டார்.  தமிழ், அமுதம் என்ற இரு சொற்களும் முழங்கி ’தமிழ்தம்' என ஆட்சி பெறுகையில் மேலெழும் உணர்வெழுச்சியே நண்பரின் தழுதழுப்பிற்கு காரணமாயிருந்தது. மரபுச்செழுமை, வரலாற்றுப் பெருமிதம், அறச்சீற்றம், ஆற்றாமை கண்ணீர், கழிவிரக்கம், உளக்கொதிப்பு, உத்வேகம் என மாறி மாறி மேலிடும் உணர்வுகளால் வரையப்பட்ட இக்கவிதையை வாசித்து முடிக்கையில், சொல் ஏதுமற்று மயானம் கலையும் உறவின் துயரமாய் நம் நெஞ்சைக் கவ்வும் வேதனையை உணர்கிறோம்.

 வரலாற்றினை ஊன்றிக் கற்பவர்கள் அதன் ஒரு அம்சத்தை, அதனுடைய மீள நிகழும் தன்மையைக் கவனிக்கத் தவறமாட்டார்கள்.  ஏறக்குறைய ஒரே தன்மையிலான நிகழ்வுகள், வெவ்வேறு காலங்களில், வேறுவேறு இடங்களில், வேறு பல கதாப்பாத்திரங்களோடு திரும்ப திரும்ப நிகழ்ந்திருப்பதை ஒருவர் அவதானிக்க முடியும்.  இங்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் சொற்களிலும், வில்வரத்தினத்தினுடைய வரிகளிலும் வெளிப்படுவது ஒரே வகையிலான உணர்வுதான்.  வலியோரின் சூழ்ச்சிக்கும், அடக்குமுறைக்கும், அநீதிக்கும் எதிராக நிற்க நேரிடுகையில் எளியபொருவனிடத்தே எழும் கொதிப்பும், ஆற்றாமையும், வெஞ்சினமும் தான் இவ்வற்றுள் தொனிக்கிறது.  கட்டுவித்த சில கோவில்களையும் வெட்டுவித்த சில ஏரிகளையும் தவிர, சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எச்சமென்று இன்று எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.  ஈழத்தில் எரிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக இன்று வரையிலும் ஏழாயிரம் பக்கங்கள் எழுதிச் சேர்க்கப்பட்டுவிட்டன.  காலம் கழிகிறது.  கல் அழிகிறது.  மொழியின் நினைவில் சொல் மாத்திரம் நின்று எரிகிறது. 

நன்றி
தக்கை, கபாடபுரம்

Tuesday, 1 January 2019

எல்லைகள் இல்லாத உலகம்


A great age of literature is perhaps always a greater age of translations
- Ezra Pound

தனிமனிதன் என்பவன் இம் மானுடகுலத்தின் சிற்றலகு என்கிற நோக்கில் உலகப்பொதுவானவன். அதே சமயம் சிந்திக்கத் தெரிந்த உயிரி என்கிற வகையில் ஆகத் தனிமையானவனும் கூட. மொழி, இனம், பிரதேசம் முதலியவற்றின் அடிப்படையிலான சமூகக்குழுக்களாக இயங்கும் மனிதர்களின் தனித்தன்மைகளைக் கொண்டு வந்து பொதுவான மானுடப்பண்புகளுள் சேர்க்கும் மேலான காரியத்தையே மொழிபெயர்ப்புகள் செய்கின்றன. ஓடிவந்து கலக்கும் நதிநீர் கடலின் உப்புத்தன்மையைக் கட்டுக்குள் வைப்பதைப் போலவே மொழிபெயர்ப்புகள் ஒரு மொழியின் தேக்கத்தை மட்டுப்படுத்துவதோடு அல்லாமல் அதன் படைப்புகளின் சுவையைக் கூட்டவும் உதவுகின்றன.

தமிழில் நவீன உரைநடை உருவாகி வந்த காலத்திலேயே மொழிபெயர்ப்புகளும் தோன்றி விட்டன. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமாயின், ஆங்கிலம் கற்கத்தொடங்கிய உயர், மத்தியத்தர வர்க்கத்தினர் அம்மொழி வாயிலாகத் தமக்கு அறிமுகமானது போன்ற இலக்கிய முயற்சிகளை தமிழிலும் செய்துபார்க்க விரும்பியதன் விளைவே நமது மொழியின் ஆரம்பகால உரைநடைப் படைப்புகள். ஆனால் மேலை இலக்கியங்களை உள்ளது உள்ளவாறே மொழிபெயர்ப்பதில் சந்திக்க நேரிட்ட கலாச்சார அதிர்ச்சிகளையும் முரண்பாடுகளையும் தீர்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட உபாயமே தழுவல் இலக்கியங்கள் உற்பத்தியாக வழிவகுத்தன. அந்நிய மொழியின் கதைக்கருவை எடுத்துக்கொண்டு, பாத்திரங்களின் பெயர், நடை, உடை பாவனைகளை நமது என நாம் நம்புகிற பண்பாட்டு வரையறைகளுக்குள்ளாக நின்று அவற்றைத் தமிழாக்கித் தந்தனர். கதவுகளே இல்லாத கட்டிடங்களுக்கு வெளிக்காற்றிற்கான சிறு சாளரங்களும் ஆரோக்கியமானதே.

அச்சிதழ்களும், நூல்களும் வெளிவரத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டதோடு அல்லாமல் அது தனியானதொரு இலக்கிய வகைமையாகவும் அங்கீகரிக்கப்பட்டது. ஜப்பானிய ஹைக்கூக்கள் பற்றிய அறிமுகத்தையும் தாகூரின் கதைகள் சிலவற்றையும் தமிழுக்குத் தந்ததன் வழியாக பாரதியே மொழிபெயர்ப்புக்கும் முன்னோடி ஆகிறார் என்றாலும் உலகச் சிறுகதைகளையும், ஐரோப்பிய நாவல்களையும் முறையே மொழிபெயர்த்த புதுமைப்பித்தனும் க.நா.சு.வுமே நவீன இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்குத் துவக்கப்புள்ளியாகிறார்கள். அதே காலகட்டத்தில் இன்னும் சில எழுத்தாளர்களும் மொழியாக்கத்தில் ஆர்வம் காட்டினர். ச.து.சு.யோகி (கடலும் கிழவனும்), திருலோக சீத்தாராம் (சித்தார்த்தா), டி.எஸ்.சொக்கலிங்கம் (போரும் அமைதியும்), த.நா.குமாரசாமி (ஆரோக்கிய நிகேதனம்), ஆர்.சண்முகசுந்தரம் (பதேர் பாஞ்சாலி), வல்லிக்கண்ணன் (தாத்தாவும் பேரனும்) மற்றும் தி.ஜானகிராமன் (அன்னை) போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். தமிழ்ச் சிறுகதைகள் அதன் ஆரம்பக்கட்டத்திலேயே அடைந்த உயரங்களுக்கு இத்தகைய மொழிபெயர்ப்புகளும் ஒரு மறைமுகக் காரணம்.

இன்று நடுவயதைக் கடந்த எழுத்தாளர்கள், வாசகர்கள் என எவரைக் கேட்டாலும் அவர்களை இலக்கிய வாசிப்பிற்குள் இழுத்து வந்து தள்ளி, மீளமுடியாமல் மூழ்கடித்தது என்று ரஷ்ய செவ்வியல் ஆக்கங்களின் மொழிபெயர்ப்புகளையே சொல்லுவார்கள். தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், புஷ்கின், துர்கனேவ், கார்க்கி, செக்காவ் போன்ற பெயர்கள் தமிழ் எழுத்தாளர்கள் அளவிற்கே வாசகர்களிடையே நெருக்கம் கொண்டிருந்தன என்றால் அது மிகையாகாது. அவ்வகையில் ரஷ்ய மொழியாக்கங்களுக்காக டி.எஸ். சொக்கலிங்கம், நா. தர்மராஜன் , பூ. சோமசுந்தரம், ரா.கிருஷ்னையா, நா.முகமது ஷெரிப் ஆகியோருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். மாஸ்கோவின் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்கள் அளவிற்குப் பெருவாரியாக இல்லாவிட்டாலும் அமெரிக்க அரசின் நிதிப் பின்புலத்தில் பேர்ல் பதிப்பக வெளியீடுகளாக வந்த பல நூல்களையும் மறக்க முடியாது. லிங்கனின் வாழ்க்கை சரிதமான ‘அழிவற்ற காதல்’ (இர்விங் ஸ்டோன்), ‘போரே நீ போ’, ‘மணிகள் யாருக்காக ஒலிக்கின்றன?’ (ஹெம்மிங்வே), ‘குருதிப்பூக்கள்’ (காதரின் ஆன் போர்ட்டர்), ‘சர்வாதிகாரியும் சந்நியாசியும்’ (ஆர்தர் கோஸ்ட்லர்) முதலியவை அவற்றில் முக்கியமானவையாகும்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்களான சாகித்ய அகதெமியும், என்.பி.டி.யும் மாநில மொழி இலக்கியங்களின் பரஸ்பர மொழிபெயர்ப்புகளுக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. இவற்றின் வாயிலாகவே மண்ணும் மனிதரும், வாழ்க்கை ஒரு நாடகம், நீலகண்டப்பறவையைத் தேடி, அக்னிநதி, கங்கைப்பருந்தின் சிறகுகள், வனவாசி, செம்மீன், அவன் காட்டை வென்றான், மைய்யழிக் கரையோரம், பருவம் போன்ற காலத்தால் மங்காத படைப்புகள் தமிழுக்குக் கிடைத்தன.
எண்பதுகள் தொடங்கி வெ.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்த பல படைப்புகளை க்ரியா வெளியிட்டுள்ளது. அந்நியன் (காம்யு), குட்டி இளவரசன் (அந்துவான் து எக்சுபரி), மீள முடியுமா (சார்த்தர்), சொற்கள் (ழாக் ப்ரெவர்) ஆகியவை தமிழில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.

மீட்சி சிற்றிதழ் பெரிய அளவில் சர்வதேச இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகச் செயல்பட்டது. அது வெளியிட்ட ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகை நூலானது அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியத்துக்கப்பால் செழுமையாக உள்ள மற்றொரு பிராந்தியத்தை தமிழ் வாசகர்களுக்குத் திறந்து வைத்தது. பிரம்மராஜன் மொழியாக்கம் செய்த கால்வினோ கதைகள் (யுனைடட் ரைட்டர்ஸ்), போர்ஹேஸ் கதைகள் (யாவரும் – மறுபதிப்பு) ஆகியவையும் ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்த உருமாற்றம் (தமிழினி), சோபியின் உலகம் (காலச்சுவடு), இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் (பாதரசம்) முதலியவையும் குறிப்பிடத்தகுந்தவை. அதுபோலவே அமரந்தாவின் மொழியாக்கத்தில் வெளிவந்த லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பான ‘சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ மற்றும் ‘நிழல்களின் உரையாடல்’ (நிழல்) என்னும் நாவலும் தமிழ்ச்சூழலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எதிர்வினைகளை உண்டாக்கின. லதா ராமகிருஷ்ணனின் மொழியாக்கத்தில் வந்த கவபாட்டாவின் நூல்களான ‘தூங்கும் அழகிகளின் இல்லம்’, ‘மூங்கிலிலைப் படகுகள்’ (ஸ்நேகா) ஆகியவற்றுடன் சாரு நிவேதிதா மொழிபெயர்த்த ‘ஊரின் மிக அழகியபெண்’ தொகுப்பையும் சி.மோகன் மொழியாக்கத்தில் வெளியான ‘ ஓநாய் குலச்சின்னம்’ நாவலையும்  இவ்வரிசையில் வைத்துப் பார்க்கலாம். இதுதவிர சுகுமாரன் , குளச்சல் மு யூசுப் , நிர்மால்யா , கே.வி. ஷைலஜா ஆகியோரின் மொழியாக்கத்தில் வந்துள்ள பல்வேறு மலையாள ஆக்கங்கள் ,குறிப்பாக பஷீர் மற்றும் பால்சக்கரியாவின் கதைகள் முக்கியமானவை.

நிறப்பிரிகை வெளியிட்ட தலித் மற்றும் ஆப்பிரிக்க இலக்கியச் சிறப்பிதழ்களும், பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளியான தலித் சுயசரிதை நூல்களான ‘ஊரும் சேரியும்’, ‘கவர்மெண்ட் பிராமணன்’, தலித் எழுத்துகளின் தொகைநூலான ‘புதைந்த காற்று’ (விடியல்) ஆகியனவும் இந்திரன் தொகுப்பித்த ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’, ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ ஆகிய நூல்களும் தமிழில் தலித் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உத்வேகம் தந்தவை. விடியல் பதிப்பகம் பெரிதும் இடதுசாரி அரசியலை மையப்படுத்திய கட்டுரை மற்றும் வரலாற்று நூல்களையே வெளியிட்டு வருகிறது என்றாலும் எஸ்.பாலச்சந்திரனின் மொழியாக்கத்தில் பதிப்பித்த ‘எரியும் சமவெளி’, ‘பெட்ரோ பராமா’ ஆகிய யுவான் ரூல்ஃபோவின் கதைகளும் நாவலும் குறிப்பிட வேண்டியவை.

காலச்சுவடு பதிப்பகம் உலக மற்றும் இந்திய கிளாசிக் வரிசையில் சுகுமாரன், ஜி.குப்புசாமி, அகிலன், அசதா, ஆனந்த், தி.அ.சீனிவாசன், எம்.எஸ், யுவன் போன்றோரின் சீரிய மொழியாக்கத்தில் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. தனிமையின் நூறு ஆண்டுகள், பனி, கா, என் பெயர் சிவப்பு, கடல், பொம்மை அறை, நிச்சலம், வீழ்ந்தவர்கள், கசாக்கின் இதிகாசம், உடைந்த குடை ஆகிய நூல்கள் அவற்றில் நினைவுகூரத்தக்கவை. கிழக்கு மற்றும் சந்தியா பதிப்பகங்கள்  புனைவல்லாத பல வரலாற்று நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். போலவே பாரதி புத்தகாலயம் குழந்தைகளுக்கான பல அரிய நூல்களை உலக மற்றும் இந்திய மொழிகளினின்றும் மொழிபெயர்த்துக் கொணர்ந்திருக்கிறார்கள். என்சிபிஹெச், வ.உ.சி போன்ற பதிப்பகங்கள் அச்சில் இல்லாத பல பழைய மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்து வருவதோடு புதிய மொழியாக்கங்களையும் வெளியிட்டு வருகின்றன. இது தவிர்த்து பாரதி புக் ஹவுஸ், நற்றிணை வெளியிட்டுள்ள எம்.ஏ.சுசீலாவின் தஸ்தாவ்ஸ்கி மொழிபெயர்ப்புகள், ராமானுஜத்தின் மொழியாக்கத்தில் வெளியாகிய மண்ட்டோ படைப்புகள் (புலம்) ஆகியவையும் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியன.
தமிழுக்கு வளம் சேர்க்கும் வண்ணம் பல மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ள இப்பதிப்பகங்களின் வரிசையில் சில வருடங்களுக்கு முன்னால் இணைந்திருக்கும் பதிப்பகம் எதிர் வெளியீடு. வேர்கள், நார்வீஜியன் வுட், நள்ளிரவின் குழந்தைகள், பட்ட விரட்டி, கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது, ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் போன்ற மிக முக்கியமான அந்நிய மொழி படைப்புகளைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதுகாறும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் நூல்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பகங்கள் குறித்த நினைவை வரைந்து பார்க்கையில் கிடைத்தத் தோராயமான கோட்டுச்சித்திரம்தான் மேற்கண்டது. இன்று ஓரளவு அங்கீகாரமும், விற்பனை சாத்தியங்களும் இருந்தாலும் கூட மொழிபெயர்ப்பாளர்களுக்கு பல சமயங்களில் கிடைப்பது இரண்டாவது வரிசை இடம்தான். எனினும் பிறிதொரு மொழியில் தான் தேடிக் கண்டடைந்த படைப்பை, வாசித்து அடைந்த பரவசத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலிலேயே ஒரு மொழிபெயர்ப்பாளன் தன் பணியைத் தொடங்குகிறான். நாம் ரசித்தவொரு அயல்மொழிப் படைப்பை மேலும் அணுக்கமாகப் புரிந்து கொள்ள ஒரே வழி அதை நம் தாய்மொழியில் பெயர்த்து எழுதுவதுதான் என்று சொல்லுவார்கள். அவ்விதமாகத் தானடைந்த சுயநிறைவை பிறருக்கான ஒன்றாகவும் விரிவடையச் செய்யும் செயல்பாட்டிற்குக் கடினமான உழைப்பும், அசாதாரணமான அர்ப்பணிப்புணர்வும் தேவை. இயல்பாகவே இக்குணங்களைக் கொண்டிருப்பதாலேயே, கார்த்திகைப் பாண்டியன் இத்துறைக்குள் வந்த சிறிது காலத்திற்குள்ளாகவே ஒரு நாவல் (ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் – யுகியோ மிஷிமா), இரண்டு உலகச்சிறுகதைத் தொகுப்புகள் (எருது, சுல்தானின் பீரங்கி), ஒரு கவிதைத் தொகுப்பு (நரகத்தில் ஒரு பருவகாலம் – ஆர்தர் ரைம்போ) ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இப்பணிகளுக்காக விகடன் விருது, இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருது மற்றும் ஆத்மாநாம் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ஒரு காஷ்மீரிக்கதை உட்பட பத்து அயல்மொழிச் சிறுகதைகள் அடங்கிய மூன்றாவது தொகுப்பு இது. ஒரு சில இந்திய ஐரோப்பிய மொழிகளைத் தவிர பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ள நமக்கிருக்கும் ஒரே தொடர்புவழி ஆங்கிலம்தான். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளையும் கார்த்திகைப் பாண்டியன் ஆங்கிலம் மூலமாகவே பெயர்த்துத் தந்திருக்கிறார். மொழியாக்கம் செய்வதற்கான மூலக்கதைகளை தெரிவு செய்ய இரண்டு அளவுகோல்களை வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். ஒன்று, தமிழில் அதிகம் அறியப்படாத படைப்பாளியின் கதையாக இருக்க வேண்டும். இரண்டாவது, கதையின் வடிவம் அல்லது உள்ளடக்கத்தில் புதுமை இருக்க வேண்டும். புதிய குரல்களை, பொருண்மைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து பார்க்க வேண்டும் என்கிற அவருடைய உத்வேகத்தை இத்தொகுப்பிலுள்ள கதைகள் சரியாகவே பிரதிபலிக்கின்றன.
முதல் கதையான ‘தொலைநோக்கி’ (ரஷ்யா), கடைசிக்கதையான ‘காவி’ (இந்தியா), தொகுப்பின் நடுவிலுள்ள ‘துண்டிக்கப்பட்ட தலையின் கதை’ (மொராக்கோ) ஆகிய மூன்று கதைகளுமே அரசியலை, அதிகாரத்தின் வன்முறையை, அதை எதிர்கொள்ளும் திறனற்ற சாமானியர்களின் பதைபதைப்பைத்தான் முன்வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கதையும் வெவ்வேறுவிதக் கூறுமுறையைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கேட்கிற கதையளவிற்கே சொல்கிற குரலின் ஏற்ற இறக்கங்களுக்கும், சொல்லாமல் இடைவிடுகிற மௌனங்களுக்கும் அர்த்தமுண்டு என்பதை உணர்த்துபவையாக அமைந்திருக்கின்றன இந்தக்கதைகள்.

‘பெஞ்சமின் ஸெக்கின் கதை’ என்கிற போஸ்னியச் சிறுகதை அசாதாரணமான விவரிப்பு முறையைக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுவனின் பகற்கனவு என்கிற ஒற்றைப்புள்ளியில் சுருக்கி விடக்கூடிய சிறிய அனுபவத்தை முழு வாழ்விற்குமான ஒன்றாக விரிக்கும்போது கிடைக்கும் அபூர்வமான தரிசனமாக அமைகிறது இக்கதை. இதைப் படித்து முடித்ததும் போர்ஹேஸின் “Secret Miracle” மற்றும் அம்புரோஸ் பியர்ஸின் “An Old Occurance in Owl Creek” ஆகிய இரண்டு கதைகளும் நினைவுக்கு வந்தன. இம்மூன்று கதைகளுக்கும் உத்திரீதியாக சிறு ஒற்றுமை இருக்கிறது என்றபோதும் வெவ்வேறு உணர்த்துதல்களை முன்வைக்கின்றன.
ஒரு வாய்மொழிக்கதையின் எளிமையோடு, கவித்துவமான விவரணையும் அதே சமயத்தில் உளவியல்ரீதியிலான ஆழமான அவதானிப்புகளையும் கொண்ட ‘கோமாளி’ என்கிற எகிப்தியக்கதை என்னை வெகுவாகப் பாதித்தது. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையென இதையே சொல்வேன். ‘அந்த நிறம்’ என்கிற பிரிட்டிஷ் கதை மெய்யாகவே மிகச்சிறிய கதை. அச்சில் ஒன்றரைப் பக்கம்தான் வருகிறது. ஆனால் படிப்பவரின் மனதில் அது ஒரு கவிதையின் கனத்தை ஏற்றி வைத்து விடுகிறது.

ஒரு அழகிய நிறமாலையை ஒத்த உணர்வுகளின் கலவையைக் கொண்டதாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இச்சிறுகதைகள் வாசிக்கத் தடங்கல் ஏதுமில்லாத மொழியாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ‘பொதியூட்டப்பட்ட துப்பாக்கி’, ‘மகிழுந்து’ போன்ற தூயத் தமிழ் வார்த்தைகளை நவீனச் சிறுகதைகளின் நடுவே, அதுவும் வேற்றுமொழிக் கதைகளின் இடையில் வைத்துப் பார்க்கையில் அவை சற்றே வித்தியாசமாகத் தொனித்தாலும் கூட தொடர்ந்த வாசிப்பில் எதுவும் துருத்திக் கொண்டு தெரிவதில்லை.

இக்கதைகளை அவற்றின் ஆங்கில வடிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க எனக்கு வாய்க்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் அர்த்தத்தொனிகளை வேறு மொழிக்கு இயல்பாகக் கடத்துவதிலேயே ஒரு மொழியாக்கத்தின் பெறுமதி அடங்கியுள்ளது என்று நான் நம்புகிறேன். தவிரவும், ‘முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு என்று எதுவுமில்லை. போதுமென்று ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டவை மாத்திரமே உண்டு’ என்கிற ஏ.கே.ராமானுஜத்தின் கூற்று ஒன்று உண்டு. அவ்வகையில் மூலத்தினின்றும் மூன்றாவது மொழிக்குப் பெயர்க்கப்பட்டிருக்கும் இக்கதைகள் பல வகைகளிலும் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைத் தருபவையாக அமைந்திருக்கின்றன. கார்த்திகைப் பாண்டியனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்!

க.மோகனரங்கன்
23.11.2018