Saturday 21 November 2020

மரநிழலும் மனநிழலும்

இரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்த என்மகன் புத்தகப் பையை மூலையில் போட்டுவிட்டு, சீருடையைக் கூட கழற்றாமல் என்னைத் தேடிவந்தான்.

"டாடி உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்" ரகசியமான குரலில் கிசுகிசுத்தான். உள்ளூர் ஆங்கிலப் பள்ளி ஒன்றில் மூன்றாம்வகுப்பு படித்துவந்தான். அவன் பள்ளி செல்லத் துவங்கிய சில நாட்களிலேயே கட்டிய பணத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. அதுவரையிலும் 'அப்பா' என்று என்னை அழைத்து வந்தவன் 'டாடி' என்று கூப்பிடத் தொடங்கிவிட்டான். தொடக்கத்தில் அது நெருடலாக இருந்தாலும் போகப்போகப் பழகிவிட்டது.

வகுப்பில் நடக்கும் நிகழ்வு எதுவொன்றையும் என்னிடம் வந்து விவரமாகச் சொல்லுவான். மாலை நடையாக இரண்டுத் தெரு தள்ளியிருக்கும் கடைக்கு போய்வரும் வழியில்தான் இதுபோன்ற உரையாடல்கள் எங்களுக்குள் வழக்கமாக நடைபெறும். மாறாக, அன்றொரு நாள் அவனுடைய ஆங்கில ஆசிரியைப் பற்றி ஏதோ சொல்ல வந்தபோது "யார்டா ? மூஞ்சி பூராவும் பவுடர் வாரிப்பூசிக்கிட்டு வருவாங்களே அந்த மிஸ்ஸா?" என்று நான் கேட்கவும், அப்போதுதான் டீக் கொண்டுவந்த என் மனைவி திட்டித்தீர்த்து விட்டாள்.

" அந்தப் பையனாவது ஒழுங்கா வளரட்டும். உங்க போக்கிரித்தனத்தையெல்லாம் அவனுக்கும் கத்துக் கொடுத்துடாதீங்க "

அதன் பிறகு சில விஷயங்களை நாங்கள் இருவரும் இடம், பொருள், ஏவல் அறிந்தே பேசவேண்டியதாயிற்று. அன்றும் அப்படித்தான், அம்மா பக்கத்தில் இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டே பேசத் தொடங்கினான்.

" நான் சொல்றத யார்கிட்டையும் சொல்லக்கூடாது"

"சொல்லலை"

" முக்கியமா அம்மாகிட்ட சொல்லக்கூடாது"

" சொல்ல மாட்டேன்டா"

"காட் பிராமிஸ்?"

"காட் பிராமிஸ்!"

நீட்டிய அவனது சிறுகை மீது என்கையை வைத்தேன். என் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டு மெதுவாகச் சொன்னான்.

‘ இன்னிக்கு மத்தியானம் சயின்ஸ் மிஸ் பாடம் நடத்திக்கிட்டிருந்தாங்களா அப்போ, பியூன் அண்ணா வந்து கூப்பிட்டாங்கன்னு, பாதியிலேயே கிளாஸை விட்டுட்டு பிரின்ஸ்பல் ரூமுக்கு போயிட்டாங்க.."

"சொல்லு"

" அப்போ பிரசாந்த் இருக்கான்ல அந்த முரடன் என்ன பண்ணினான் தெரியுமா?"

"யாருடா, பேக்கரி வச்சிருக்காங்கன் சொல்லுவியே. அந்தப் பையனா?"

" அய்யோ! அவன் வேற டாடி! பேரு பிரகாஷ். இவங்கப்பா எங்கியோ வெளிநாட்டுல இருக்கார். குறுக்க பேசாம நான் சொல்லறத மட்டும் கேளுங்க"

" சரி சொல்லு"

"இந்த பிரசாந்த் என்ன பண்ணினான் தெரியுமா?மன்னுன்னு என் பிரண்ட் இருக்கானே அவனுடைய லுல்லாவைப் பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி வச்சுட்டான். ரத்தமே வந்துடுச்சு. அவன் அழுஅழுன்னு அழுதுட்டான்."

“அய்யோ ! அப்புறம் என்னாச்சு?"

“அப்புறம் மிஸ் வந்து பார்த்துட்டு இவனுக்கு முதுகிலேயே ரெண்டு அறை வச்சாங்க."

தேவையானதோ, தேவையில்லாததோ அவன் சொல்கிற எல்லா விஷயத்தையும் காதுகொடுத்து கேட்பேன். மிஞ்சிப் போனால் இன்னும் ஆறேழு வருடங்கள், அதற்குப் பின் அவனுக்கென்று சுயமான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்ளுவான், அதில் அவனுக்கேயான கனவுகள் அந்தரங்கங்கள் என்று தனிமை கொண்டுவிடுவான். அப்போது இந்த தகப்பனிடம் பகிர்ந்து கொள்ள சொற்கள் வெகுவாக குறைந்துவிடும். அவன் சொன்னதில் ஒரு விஷயம்தான் நெருடலாக இருந்தது. இதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று ஏன் சொன்னான். உடலும் உள்ளமும் முகிராத இவ்வளவு சிறுவயதிலேயே, சில விஷயங்கள் பெண் என்பதால் அம்மாவிடம் சொல்லக்கூடாது என்கிற மனத்தடை அவனுக்குள் எவ்விதம் உருவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்,

எனக்குப் பதின்பருவத்தில் குழப்பமாகவும், ரகசியமாகவும் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று ஆறேழுவயது சிறுவனுக்குகூட சாதாரணமாகத் தெரிகிறது. எல்லாம் காலத்தின் கொடை பெற்றோர்களைக் காட்டிலும் வெளிஉலகத்திலிருந்து அவர்கள் அறிந்துகொள்வது அதிகமென்று தோன்றுகிறது . தமிழாசிரியரான ஒரு நண்பரிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது ‘ஏற்பியல்’ என்ற ஒரு பதத்தைப் பற்றி கூறினார். எல்லா காலத்திலும், எல்லா விஷயமும், எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கும். என்றாலும் சில விஷயங்களை வெளிப்படையாக பார்ப்பதற்கு, பேசுவதற்கு, கேட்பதற்கு ஒரு மனத்தடை சமூகத்தில் இருக்கும். காலமாறுதலை ஒட்டி அத்தடையும் மாறும். முன்பு தவறாகக்கருதிய பல விஷயங்களை பின்பு இயல்பாக அது ஏற்றுக்கொள்ளும் . சமூகத்தின் இவ்வியல்பிற்கே ‘ஏற்பியல்‘என்று பெயர் என்றார் அந்நண்பர்.

"ஒன்றும் வேண்டாம்! பாகவதர் காலத்திலிருந்து இன்று வரையிலுமான தமிழ் சினிமாவின் பாடல்காட்சிகளை எடுத்துக்கொண்டு மேலோட்டமாக ஒப்பிட்டு பார்த்தாலே நம் ஏற்பியல் எப்படியெல்லாம் மாறிவந்துள்ளது என்று புரியும்!" என்றார். உண்மைதான். அன்றெல்லாம், கதாநாயகி ஒரு மரத்தின் பின்னிருந்து ஏக்கத்துடன் நோக்குவாள். பத்தடி தள்ளி பிறிதொரு மரத்தை கட்டியணைத்தபடி கதாநாயகன் காதல்மொழி பகர்வான். சிறிதுகாலத்திற்கு பிறகு கைகோர்த்து ஆடத்துவங்கிடும் காதலர் இருவரும் முகத்தோடு முகம் நோக்குங்கால் இடையீடாக பூவில் தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சியும், சொம்பைக் கவிழ்த்து பால் குடிக்கும் பூனையும் உவமித்துக் காட்டப்பட்டன. ஏறுதழுவுதல், மற்போர் போன்றவற்றை நினைவுறுத்தும் இன்றைய பாடல் காட்சிகளிலோ பார்வையாளனின் கற்பனைக்கான இடைவெளி என்று ஏதுமே இருப்பதில்லை. புறாக்களின் காலில்கட்டி அனுப்பப்பட்ட லிகிதங்கள் இன்று கைபேசித்திரைகளில் ஒளிரும் தகவல் துடிப்புகளாக மாறிவிட்ட நிலையில், இன்ன பிறவற்றைப் போலவே காதலும் அதன் இயல்பான நுண்உணர்வுகளை இழந்து, வருவதாகவே தோன்றுகிறது.

இச்சூழ்நிலையிலேயே காலமாறுதலினால் நாம் இழந்துவரும் பலவிஷயங்களைக் குறித்த நமது சமூக நினைவுகளை, அவை ஞாபகப்படுத்தும் பல நுண்உணர்வுகளை அழிந்துவிடாமல் மீட்டுருவாக்கம் செய்வதில் நமது புராணங்களும், செவ்விலக்கியங்களும், நாட்டார் கலைகளும் நமக்கு கணிசமாக உதவ முடியும். அவ்வகையில் பின்வரும் பிரபலமான நற்றிணைப் பாடலைச் சுட்டலாம்.




" வினையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்மூளை அகைய
ஐநெய்பெய்தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நம்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்" என்று
அன்னை கூறினல் புன்னையது நலனே
அம்ம! நாணுவதும், நும்மொடு நகையே
விருந்தின் பாணார் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நலலும் இலங்கு நீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.

                                                 நற்றிணை
                                                 பாடல் -172.

களவொழுக்கத்தின்போது பகற்குறியை தேர்ந்து ஒரு புன்னை மரத்தடியில் தலைவியை சந்திக்கிறான் தலைவன். தன்னை தழுவ வேட்கையுடன் அணுகும் தலைவனை தள்ளிநிறுத்தியவளாகத் தலைவி உரைக்கிறாள். "நான் சிறுமியாக இருக்கும்போது விளையாடிக் கொண்டிருந்துவிட்டு மறந்துவிட்டு விட்டுப்போன புன்னைவிதையே வளர்ந்து இங்கு மரமாகிநிற்கிறது. இதற்கு நான்தான் தண்ணீர்விட்டு வளர்த்தேன். ஒருவிதத்தில் இது எனக்கு தங்கை முறையுடைத்து என்று என்தாய் சொல்லியிருக்கிறாள். தங்கையின் முன் காதல்புரிய எனக்கு வெட்கமாகயிருக்கிறது. எனவே, வேறிடம் செல்லலாம்"

நாம் செல்லும் வேகத்திற்கு தடையாக உள்ளனர் என பெற்றவர்களையே உதறிவிட்டுச் செல்லும் அவசர யுகத்தில் வாழ்பவர்களுக்கு, மரம் செடிகொடி போன்ற எளிய உயிர்களையெல்லாம் தம் சகோதரியாக வரித்துக் கொண்டிருந்த ஒருகாலமும் இருந்தது என்பதைச் சொன்னால் உணர்ந்து கொள்வதற்குச் சற்று மிகையாகத்தானிருக்கும். உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத, நம் தமிழ்மொழிக்கு மாத்திரமேயான சிறப்பு என மொழியியல் அறிஞர்களால் சுட்டப்பெறுவது, நமது சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள திணை, துறை வகைமைகள். அது வெறும் இலக்கணமோ, அழகியலோ மட்டுமல்ல. ஒரு முழுமையான வாழ்வியல்முறையும், அறமும் கூடதான். நிலம், பருவம், பொழுது, தெய்வம், மாந்தர், விலங்குகள், பறவைகள், தாவரவங்கள், பூக்கள், தொழில், கருவிகள் என மனித வாழ்வும், சூழலும் ஒன்றையொன்று சார்ந்தும், ஒத்திசைந்தும் முன்நகர்ந்த ஒரு முறைப்பாட்டை புலப்படுத்துகின்றன.

மனித உணர்ச்சிகளை, அதன் நாடகத்தருணங்களை அவற்றின் கூர்மையுடன் வெளிக்காட்ட, அழுத்தமானதொரு பின்புலமாகவே சங்கக் கவிதைகளில் இயற்கை சித்தரிப்பு பயின்று வருகிறது எனலாம். மேற்குறிப்பிட்ட நற்றிணைப் பாடலிலுமேகூட காதலியின் நாணத்தை, நாசுக்கான மறுப்பை வெளிக்காட்ட உதவும் ஒரு சாக்காகவே அப்புன்னை நிற்கிறது. விழைவை நிறைவேற்றி கொள்ளுவதன் மூலம், காமத்தின் பெறுமானத்தை வேண்டுமானால் அறியலாம். காதலின் சுவை விழைவு நிறைவேற்றத்தில் அல்ல விழைவை ஒத்திவைப்பதிலும் , தாமதப்படுத்துவதிலும்தான் பிறக்கிறது. காண்பதற்கோ, பேசுவதற்கோ, சந்திப்பதற்கோ தாமதமாகும் ஒவ்வொரு கணமும், கற்பனையில் முடிவற்றதாக நீட்சியுற்று நினைவுகளை வெள்ளமென பெருக்குகிறது. அப்பெருக்கே காதலை, நடைமுறை வாழ்வின் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது. அம் மனநிலையில் கிளைத்துப் பரவும் நுண் உணர்வுகளின் தீராத சித்திரங்களே நம் மரபின் அகப்பாடல்கள். நுட்பமான அகவுணர்வுகளை பகிர்ந்து கொள்வதெனில் அதற்கேதுவான புறச்சூழலும் அமையவேண்டும். அதனால்தான் போலும் காவியங்களிலும், கதைகளிலும் வரும் நாயக, நாயகிகள் சந்தித்துக் கொள்ள ஏகாந்தமும், அமைதியும் ததும்பும் இடங்களையே நாடுகின்றனர். பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களின்றும் காதலர்களை துரத்தியடிக்கும் நிஜ காவலர்கள், கலாச்சார காவலர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் காலமாற்றங்களை விழுங்கிச் செரித்தபடி, இன்றும் காதல் தன்போக்கில் உயிர்த்திருக்கிறது.

விளை நிலங்களெல்லாம், வீட்டுமனைகளாகிக்கொண்டிருக்கும் நகர்ப்புறங்களில், காதலர்கள் நின்றுபேச ஒரு மரத்தடியைத் தேடுவது என்பதெல்லாம் இன்று இடம் மற்றும் காலரீதியாக கட்டுப்படியாகாத விஷயம் என்றே கூறவேண்டும். தேவதேவனின் கவிதை ஒன்று இந்த நெருக்கடி குறித்து பேசுகிறது.





பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர் ஒருவரின் அறையில் வைத்து கவிதை பற்றிய உரையாடல் நடந்தது. அதில் தேவதேவனைக் குறித்து பேச்சு எழுந்தது. அப்போது விவாதத்தில் பங்குபெற்றிருந்த நண்பன் ஒருவன் "யார் அந்த மரக்கவிஞரா?" என்று சிரித்தபடியே வினவினான். அவனுடைய கேலியால் என்முகம் சுருங்கியதைக் கண்டவன் தன் சிரிப்பை புன்னகையாகக் குறைத்துக் கொண்டு " நான் அப்படி என்னப்பா தப்பா சொல்லிட்டேன்? அவர் புத்தகத்தை எடுத்து எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், அதுல ஒரு மரம் நிற்குது இல்லையா?" எதையும் கோணலாக பார்ப்பதும், குதர்க்கமாக பேசுவதும் அவன் வழக்கம். எப்போது விளையாட்டாகப் பேசுகிறான். எப்போது வினையமாகப் பேசுகிறான் என்று கண்டுபிடிப்பது சிரமம். " மரத்தில் மாமதயானையே மறையும்போது கவிதை எம்மாத்திரம்?" என்று எண்ணியவனாக மேற்கொண்டு பேசாதொழிந்தேன். '

சில கவிஞர்களின் கவிதைகளில், சில குறியீடுகளும், படிமங்களும் ஒருவகை மனப்பீடிப்போ என ஐயுறும் வகையில் திரும்பத்திரும்ப பயின்று வருவதுண்டு. நகுலனுக்கு சுசீலா, பசுவய்யாவுக்கு நாய்கள், கலாப்பிரியாவுக்கு சசி, ஆனந்துக்கு காலம், சுகுமாரனுக்கு கிளிகள், பிரம்மராஜனுக்கு இசை போல தேவதேவனுக்கு மரங்கள்,

தேவதேவனின் மரங்கள் வெறும் தாவரவஸ்து மட்டுமல்ல, மனிதனின் பாற்பட்டு இயற்கை பெருங்கருணையுடன் உவந்தூட்டும் முலை, பூமியினின்றும் அருகிக் கொண்டிருக்கும் அன்பு, கனிவு ஆகிய பேருணர்வுகளின் தூல வடிவம். நவீனத்துவத்தின் வெக்கையாக வறண்டு கிடக்கும். தமிழ்ப் புதுக்கவிதையினூடாகப் பயணித்து வரும் வாசகனொருவன் நடுவே சற்றுநின்று, தன் மூளைச்சூட்டை தணித்துக் கொள்ள ஏதுவாக நிழல் விரித்திருக்கும் பசுமரத்தோப்பு அவர் கவிதைகள்.

அவருடைய ஆரம்பகால படைப்புகளில் வெகுவாக கவனம் பெற்ற ஒன்று " ஒரு மரத்தைக் கூடக் காணமுடியவில்லை " என்ற கவிதை,



ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்து விட்டுப்
போவேன்.
வெட்ட வெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்கமாட்டேன் என்கிறது

மேலும்
மரத்தடியில் நீ நிற்கையில்தான்
ரொம்ப அழகாயிருக்கிறாய்
 
கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல்
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப் போக விழைகிறேன்

மரங்களின் தாய்மை
முலைமுலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளில் காற்று
வாத்ஸல்யத்துடன் உன் தலையைக் கோதும்.

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்,
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப் போவேன்.

                            - தேவதேவன்
                           "பூமியை உதறியெழுந்த மேகங்கள்" தொகுப்பிலிருந்து.

இந்தக் கவிக்குரலை நாம், ஆண் என்று கற்பித்துக்கொள்ளவே அதிக முகாந்திரம் உண்டு. ஏனெனில் தனக்கு உரிமைப்பட்ட பொருளுக்குத் தானே பாதுகாப்பு என்னும் உடமை மனோபாவம் அவனுக்கே அதிகம். அந்த ஆண் அப்படிப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துவிட்டுப் போகவிரும்பும் பெண் அவனுடைய மகளோ, தங்கையோ, தாயோ, தோழியோ, துணைவியோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அம்மரத்தடி வெறும் நிழலை மட்டும் தருவதில்லை. ஒன்றும் அறியாதவளான, அந்த அப்பாவி பெண்ணிற்கு கனிகளை கொடுக்கிறது. பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. வானமோ அவளுக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும். கடவுளுக்கு அடுத்தபடியான கற்பனைத்திறனும் கருணை உணர்வும் கொண்டவன் கவிஞன். கவிஞனின் கனவை ஐயுறுவது என்பது படைப்பின் நோக்கத்தை சந்தேகிப்பதற்கே ஒப்பாகும். எனினும், ஒருஆண் விரும்பித் தந்துவிடவும், ஒருபெண் வேண்டிப் பெற்றிடவும் ஒரு பரிசுப்பொதியினைப் போல அவ்வளவு இலகுவான விஷயமா விடுதலை? இருவருக்குமிடையே அவிழ்த்தெறியவும் மாட்டாமல் அறுத்தெரியவும் கூடாமல் முடிச்சிட்டுக் கிடக்கும் நூற்றாண்டுகளின் சிடுக்குகளினின்றும் விடுபடுதல் எவ்வளவுக்கு சாத்தியம்? தெரியவில்லை,

இவ்விரு கவிதைகளிலுமே நிகழ்வின் களம் ஒரு மரத்தடிதான். கவிதை மாந்தர்கள் ஒரு ஆணும் பெண்ணும்தான். ஆனால் இரண்டின் அர்த்தளங்களுக்குமிடையில் பேரளவு வேறுபாடு உண்டு. இது காலப்போக்கில் உணரப்படும் மேலெழுந்தவாரியான கலாச்சார மாறுபாடு மாத்திரமல்ல. கவிதையைப் பொருள் கொள்வதற்கான நோக்கிலேயே நிகழ்ந்திருக்கும் அடிப்படையான வேறுபாடு ஆகும். முன் சொல்லப்பட்ட சங்கக் கவிதை அன்றாட வாழ்வின் ஒரு தருணத்தை நாடகப்படுத்திக் காட்டுகிறது. அதன் மூலம் ஏற்கனவே அரும்பியிருக்கும் காதல் உணர்வை, மண உறவாக வலுப்படுத்திக் கொள்ள விழையும் பெண்ணின் மனநிலையை சித்தரிக்கிறது. மாறாகப் பிந்தையக் கவிதையோ, சமூகத்தில் பெண்ணுக்கு இன்று இருக்கும் இடம் பற்றிய விசனத்தையும், இருந்திருக்க வேண்டிய நிலை குறித்த மறைமுகமான அக்கறையையும் பகிர்ந்து கொள்கிறது. முந்தைய கவிதையின் மரநிழலில் பெண் மனதின் நுண்உணர்வு இழைத்து காட்டப் பெறுகிறது என்றால், பிந்தையக் கவிதையின் மனநிழலிலோ பெண்ணின் கையறுநிலை குறித்த ஆதூரம் ஒரு துக்கஉணர்வாகக் கோலம் கொள்கிறது. புறமழிய அகந்திரிந்து போனவனாய் மனிதன் இன்று நிற்பது திரும்ப முடியாப் பாதையின் நடுவே .அவன் மீளநோக்குகையில் கண்ணெட்டிய வரையிலும் தெரிவது அவனுடைய மனப்பரப்பின் கானல்தான். ஓய்வுகொள்ள ஒரு மரத்தடி நிழலும் அங்கில்லை. கடந்தே தீரணும் வழி.

No comments:

Post a Comment