Monday 2 November 2020

கவிதையும் காலமும்

இங்வுலகில் நம்மைச் சுற்றிலும் அனந்தகோடி ஜீவராசிகள் உயிர்கொண்டு உலவி வருகின்றன. அவற்றுள் பலவற்றை நாம் தினமும் எதிர்கொண்டு கடந்தாலும்கூட கடக்கும் அக்கணங்களைத் தாண்டி ஆழமான பதிவுகள் எதுவும் நம் மனதில் தங்குவதில்லை . அவற்றால் ஏதேனும் ஒருவகையில் நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படாதவரையில் அவை குறித்த நமது கவனம் மிக மேலோட்டமான ஒன்றாகவே இருக்கும். அவ்வகையில் நோக்கினால், நான் காக்கையைச் சிறுகுழந்தையாக இருக்கும் போதிலிருந்தே பார்த்து வந்திருந்தாலும், அதுபற்றி ஊன்றித் தெரிந்துகொண்டது எனது பதினான்காவது வயதில்தான் எனலாம்.

ஒன்பதாம்வகுப்புத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அப்போதுதான் தொடங்கியிருந்தது. நான், கதிரவன், வடிவேல், புகழேந்தி, ராஜேந்திரன் என ஒரு சிறுபடையே காலை உணவிற்குப் பிறகு ஓடைப்புளிய மரத்தடியில் கூடுவோம். அங்கு வைத்துதான், அப்போதைய மனநிலைக்கேற்ப அன்றையப் பொழுதிற்கான வேலைத் திட்டத்தைத் தீர்மானிப்போம். தெரிந்த பல்வேறு விளையாட்டுகளும் சலித்துப்போனதால், இம்முறை அருகிலிருந்த காட்டிற்கு கிளிக்குஞ்சும், பொன்வண்டும் பிடிக்கப் போகலாம் என முடிவுசெய்தோம். கல்வராயன் மலையடிவாரத்தில் அரசின் வனத்துறை கட்டுப் பாட்டிலிருந்தது அவ்வனப்பகுதி. ஆடு ,மாடு மேய்ப்பவர்கள் , சுள்ளி பொறுக்குபவர்கள் என அரிதாகவே ஆள்நடமாட்ட்ம் இருக்கும் . உச்சிப் பொழுதுவரை சுற்றியலைந்தும் கிளிக்குஞ்சு எதுவும் அகப்படவில்லை. ராஜேந்திரன் மட்டும் இரண்டு பொன்வண்டுகளைப் பிடித்து தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தான். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது, பொழுது சாய்வதற்குள் திரும்பிவிடவேண்டும் என்று வேகமாக நடந்தோம்.

நல்லதண்ணீர் ஓடையைக் கடந்து மேலேறியதும் ஒற்றைப் புளியமரத்தைச் சுற்றிக்கொண்டு போகும் பாதையில் திரும்பினோம். வரிசையின் கடைசியில் மெதுவாக வந்துகொண்டிருந்தேன். திடீரென அந்தப் புளியமரத்தினின்றும் எழுந்த காக்கைகளின் கரைச்சலைக் கேட்டுத் திரும்பியதும், எங்கிருந்து என்று தெரியாதபடி வேகமாக வந்திறங்கிய காக்கை ஒன்று என் தலையை மோதிவிட்டுப் பறந்தது. அய்யோவெனும் கூச்சலுடன் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டேன். மோதிய இடத்தில் கடும் வலி, தொட்டுத்தடவிய கையில் ரத்தப் பிசுபிசுப்பு . சத்தம் கேட்டு ஓடிவந்த வடிவேல் அருகிலிருந்த வரப்பிலிருந்து கிணற்றுப் பூண்டுத் தழையை பறித்துவந்து கசக்கி காயத்தில் விட்டான். 'கால் நகம்தான் கீறிவிட்டிருக்கிறது. சின்னக்காயம்தான் ஆறிவிடும்' என்றான். வீட்டிற்குப் போகும்போது லேசாக ஜீரம் கண்டிருந்தது.

காயத்தைப் பார்த்து அம்மா பதறிப்போனாள். சொல்லாமல் கொள்ளாமல் காட்டிற்குத் திருட்டுத்தனமாகப் போனதற்காக எல்லோரும் திட்டினார்கள். 'காக்கா சனீஸ்வர பகவான் வாகனமில்லையா? மூணு வாரம் நவக்கிரகம் சுத்திவந்து எள்ளு முடிஞ்ச எண்ணெய் விளக்கேத்திவை. ஏதாவது தோஷம் இருந்தா கழிஞ்சுடும்' மேலத்தெரு பொன்னம்மா பாட்டி அம்மாவிடம் சொன்னாள். இன்றும் தலையைத் தடவினால் இடது காதுக்கு மேலாக அந்த வடு விரல்களுக்குத் தட்டுப்படும். இத்தனைக்கும் கூட்டைக் கலைத்து முட்டை எடுத்ததோ உண்டிவில் வைத்து எந்தக் காக்கையின்மீதும் கல்லெறிந்ததோ கிடையாது. அப்படியிருக்க, ஆறேழுபேர் கொண்ட வரிசையில் அந்தக்காகம் என்னை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொத்தியது ஏன் என்ற கேள்விவெகுநாட்களுக்கு என்னைக் குடைந்தெடுத்தது.

அப்போதிலிருந்து காக்கைக்கும் எனக்குமான ஒரு முடிச்சு விழுந்திருக்கவேண்டும். என்னை அறியாமலேயே காக்கையைப் பற்றிய கவனம் என்னில் கூடுதலானது. அது குறித்த தகவல்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் வரிவிடாமல் படிக்கவும் தொடங்கினேன். அவ்வாறுதான் குளிர் மிகுந்த ஐரோப்பிய நாடுகளில் காக்கைகள் வசிப்பதில்லை என்ற தகவலை ஏதோ ஒரு பத்திரிகையில் துணுக்குச் செய்தியாகப் படித்திருந்தேன். காலையில் தூக்கம் கலைந்து எழும்போது, ஜன்னல் வழியே காக்கைகளின் கரைதல் காதில் விழாது போனால் அது என்ன தேசம்? அதன் காலைகளுக்கு ஏது அழகு? பறவைகளின் சலசலப்பில்லாத அந்த அமைதியில் மனம் கவியுமா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்,

கழுத்தில் சாம்பல் நிறத்திற்கு பதிலாக அடர்ந்த கறுப்பு வண்ணத்தைக் கொண்ட காக்கையைச் சுட்டிக்காட்டிய அம்மா, அது புழக்கடைக்குப் பின் நிற்கும் முருங்கை மரத்திலிருந்து கூவினால் 'வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள்' என்று கூறினாள். "ஆமாம் அதுக்கு ஜோசியம் தெரியுமாக்கும்" என்று நான் கேலியாகச் சிரித்தேன். நான் அப்போது, எனக்குத் தமிழ் கற்பித்து வந்த குருலிங்கம் ஐயாவின் போதனைகளால் மூடநம்பிக்கை களுக்கு எதிரான பட்டறிவின் மீது பற்று கொண்டிருந்தேன். பின்னால், பலவருடங்கள் கழித்து 'ஐங்குறுநூறு' பாடல் ஒன்றினை எதேச்சையாகப் படிக்க தேர்ந்த போதுதான் என் அம்மாவின் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடையது. பகுத்தறிவு தர்க்கங்கள் எல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே சமூகத்தின் அடிமனதில் நினைவாய்த் தொடர்ந்து வருகிறது என்பதை உணர்ந்துகொண்டேன். ஓதலாந்தையார் பாடிய பாலைத்திணையைச் சேர்ந்த அப்பாடல் பின்வருமாறு, 
 
"மறுவில் தூவிச்சிறுகருங் காக்கை
அன்புடை மரபின் கிளையோடாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்திற்றருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந்தமே."

தான் வேண்டுவது பலித்தால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிக் கொள்வது பராய்க்கடன் உரைத்தல் எனப்படும். அவ்வாறு வேண்டும் ஒரு தாயின் கோரிக்கையாகவே இப்பாடல் அமைந்துள்ளது. தலைவி, தலைவனோடு உடன்போக்கு சென்றுவிட்டதை அறிந்த தாய், தன் மகள் தலைவனோடு தன் இல்லத்திற்குத் திரும்பவேண்டும் என விரும்புகிறாள். அவ்வாறு வந்தால் சுற்றம்சூழவிருந்து அவளுக்கு மணம் செய்வித்துக்கண்குளிரக்காணவேண்டுமென அவாவுறுகிறாள்.அவர்கள் திரும்பி வருவதன் நிமித்தமாகக் கரையும்படி காக்கைகளை இரந்து வேண்டுகிறாள். அவ்விதம் நடந்து கொண்டால் காக்கைக்குக் கறி சேர்த்த உணவுவைத்து விருந்து படைப்பதாகக் கூறுகிறாள். 

இக்கவிதையில் தொனிக்கும் இறைச்சிப்பொருள் கொண்டுவந்து சேர்க்கிற நுட்பமும், ஆழமும் கவனிக்க வேண்டியது. இறைச்சி என்பது கவிதையின் சொற்பொருளுக்கு புறத்தே தோன்றும் குறிப்புப் பொருளாகும். ‘நீ அன்புமிக்க உன் சுற்றத்தாரோடு வருவாயானால் அனைவரும் உண்ணும் அளவிற்கு மிகுதியான உணவை உங்களுக்குப் படைப்பேன் ‘ என்பது கவிதையில் அமைந்துள்ள நேரடியான பொருளாகும். இதற்கும் புறத்தே தோன்றும் இறைச்சிப் பொருள் என்மகள் தலைவனோடு வந்தால் அவர்களுக்கு எம்வீட்டில் மணம் செய்வித்து சுற்றத்தாரோடு இருந்து விருந்தளித்து மகிழ்வேன் என்பதாகும்

மனித வசிப்பிடங்களுக்கு அருகிலேயே வளரும் பறவைதான் என்றபோதிலும், கிளி, புறா போலக் காக்கையை யாரும் செல்லப்பறவைகளாக வளர்ப்பதில்லை. என்றாலும் மனிதர்களின் வாழ்க்கைமுறையில் உண்டாகும் மாற்றங்கள் இவற்றின் இருப்பையும் மறைமுகமாக பாதிக்கவே செய்கின்றன. பாட்டி வடைசுட்ட கதையில் வருவதுபோல நரியின் தந்திரமான பேச்சுக்கு மயங்கிவடையைக் கீழே போடும் அசட்டுக்காகமல்ல இப்போதிருப்பவை . கூரைகளையும் மரக்கிளைகளையும் மறந்து கான்கிரிட் பொந்துகளில் வசிக்கவும், ஆண்ட்டெனா கம்பிகளிடையே கூடுகட்டவும் இவை பழகிக்கொண்டன. தன் வீட்டு முற்றத்திலிருந்து, சிறு கரண்டியை தூக்கிக்கொண்டு போய்விட்டு பதிலுக்குப் பெரிய கரண்டியைக் கொண்டு வந்துபோட்ட ஒரு காக்கையைபற்றி ஞானக்கூத்தன் தன் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். பள்ளியில் படிக்கும்போது மனனம் செய்த சங்ககாலப் பெண்பாற்புலவர்கள் பட்டியலில் என் கவனத்தைக் கவர்ந்த பெயர் "காக்கைப் பாடினியார்' என்பதாகும். அவர் காக்கையைப் பற்றி எழுதிய பாடல் ஒன்றையும் நான் படித்ததில்லை. என்றாலும் அப்பெயரின் மீது ஏதோவொரு இனம்புரியாத ஈர்ப்பு இருந்துவந்தது. கல்லூரி நாட்களில் பார்த்த 'ஹிட்ச்காக்’ படம் ஒன்றில் கடற்காகங்கள் ஆட்கொல்லிப் பறவைகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. அவை கூட்டம்கூட்டமாகப் பறந்து வந்து மனிதர்களைத் தாக்கும் காட்சி நம் நெஞ்சைப் பதறவைக்கும் விதமாகப் படமாக்கப்பட்டிருந்ததாக நினைவு. தன்னைத் தவிர்த்து, சுற்றிலுமுள்ள பிற அனைத்தையும் எதிர்மறையாகவே காணும் மேற்கத்திய மனோபாவத்தின் வெளிப்பாடு அத்திரைக்கதை ஆக்கம். மனிதனின் இன்பத்திற்கும், இருப்பிற்காகவுமே பிற உயிர்களும், இயற்கையும் படைக்கப்பட்டுள்ளன என்ற அசட்டு ஆதிக்கக்குணத்தின் காரணமாகவே வெள்ளையர் இப்புவியின் குழல்அழிவுக்குப் பல நூற்றாண்டுகளாக, பலவகைகளிலும் காரணமாக இருந்தனர். இன்று அவர்களே உருத்திராட்சப் பூனைகளாக மாறி நம்மைப்பார்த்துச் சுற்றுக்குழல் பாதுகாப்புப்பற்றி உபதேசித்து வருகின்றனர். இதற்கு மாறாக, தொன்மங்கள், சடங்குகள், பாரம்பரிய நம்பிக்கைகள், வாய்மொழிக் கதைகள், பாடல்கள் இவற்றின் வாயிலாக வெளிப்படும் நம்முடைய கீழைத்தேய ஞானமோ, மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களும் இயற்கையுடன் ஒத்திசைந்துவாழும் ஒரு முறைமையையே விதந்துபேசுகிறது. சூழலை ஆதிக்கம் செய்வதற்குப் பதிலாக அதனுடன் அரவணைத்துச் செல்வது பற்றியே நம் மூதாதையர்கள் சிந்தித்தார்கள்.

தனக்குகிடைத்த சிறு உணவென்றாலும் கரைந்து சுற்றத்தையே அழைத்தபிறகே உண்ணுவது காக்கையின் இயல்பாகும். தனிமனிதனைக் காட்டிலும் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் நமதுமரபில் காக்கையி்ன் இந்த இயல்பு விருந்தோம்பலுக்கு ஒரு உதாரணமாக எடுத்தாளப்படுகிறது. இதுதவிர மற்றொரு நம்பிக்கையும் நம்மிடையே தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. அது இறந்துபட்ட மூதாதையர் காக்கையாக மறுபிறவி கொள்கிறார்கள் என்பதாகும். சிரார்த்தம், திதிக்குரிய விஷேச தினங்களிலும், அமாவாசைபோன்ற விரதநாட்களிலும் சமைத்தவுடன் காக்கைக்குச் சோறு வைத்துவிட்டு பிறகு தாம் உண்ணும் வழக்கம் இன்றும் நம்மிடையே தொடர்கிறது. இந்த நம்பிக்கையைத் தொட்டுபேசும் 
ஆத்மாநாமின் கவிதை ஒன்றுண்டு


அழைப்பு

இரண்டாம் மாடியில் உப்பரிகையில்
ஒற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டிருந்தேன்
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்துவிட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்,

அவசரம் என்பதுதான் இக்காலகட்டத்தின் மந்திரமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து உண்பதே அசாதாரணமாக ஆகிவரும் காலமிது. இதில் அடுத்தவர்களை அழைத்து விருந்தோம்பும் சாத்தியங்கள் ஏது? அத்தகையதொரு தனிமனிதன்தான் இக்கவிதையில் வருபவன். ஆனால் அவனது மனமோ இன்னமும் மரபுடன் வேர்கொண்டிருப்பது. அதனால்தான் தனியே உணவருந்தும் போதும் ஒருகை சாதத்தை ஜன்னல் காக்கைக்கு வைக்கிறான் அக்காக்கையோ அதை உண்ணாமல் பறந்துவிடுகிறது. உயிரோடு இருப்பவர்களே உணவுக்கு ஆலாய்ப்பறக்கும் காலமிது. இதில் இறந்தவர்களின் உணவைப் பற்றிக் கவலைப்பட யாருக்கு அக்கறை ? ‘யாருடைய பித்ருக்களோ நானறியேன்' எனும் வரிகளில் வெளிப்படும் முரண்நகைத் தொனி அபூர்வமானது. மரணத்திற்குப்பிறகான இருட்டை சூன்யத்தைக் குறித்த அச்சம் மனிதனுக்குள் தொடர்ந்து இருப்பது அந்த அச்சத்தினை எதிர்கொள்ளும் முகமாகவே இது போன்ற நம்பிக்கைகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகின்றன. கடவுளும் மதமும், அறிவியலும் அவைசார்ந்த தத்துவங்களும் சாவுகுறித்த இப்புதிரை முழுவதுமாக விளக்க முடிவதில்லை . அறிவின் அந்த அறியமுடியாப் பிரதேசம்தான் இத்தகைய நம்பிக்கைகளின் விளைநிலமாகும்.

கால அடிப்படையில் இரு கவிதைகளுக்குமிடையே பல நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளது. அன்று உபயோகித்த மொழியில் அல்ல இன்றைய கவிதை எழுதப்படுவது பார்வைகளும், இலக்கணங்களும் கால வழுவிலதானது. இருப்பினும், மனித அகத்தின் அந்தரங்கமானதொரு நிலையைத் தம் சொற்களால் ஒளியுறுத்த முயலும் தன்மையால் இவ்விரு கவிதைகளும் உணர்வு ரீதியாக அருகருகே அமைவதாகின்றன.

No comments:

Post a Comment