Monday 26 October 2020

தந்தையர்களும் தனையர்களும்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு கல்லூரிக்குச் சேர்க்கை விஷயமாக நண்பர்கள் இருவருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன் . ஒருவர் மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர், என்னைக் காட்டிலும் பத்து வயது மூத்தவர். மாலைநேரக் கல்லூரியில் என்னுடைய வகுப்புத்தோழராக இருந்தவர். மற்றவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் கிளை மேலாளர். இருவரும் தங்களுடைய நேரடிப் பொறுப்பின் கீழ் ஒரு குட்டி அலுவலகத்தையே கட்டிக்காத்து வந்தார்கள். வெவ்வேறு துறையில் பணிபுரிபவர்கள் என்றாலும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

காரில் ஏறிஅமர்ந்ததுமே இருவரின் பேச்சும் அவர்களுடைய குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. காரை மேலாளர் ஓட்டிக்கொண்டிருந்தார். அருகில் உதவிப் பொறியாளர் உட்கார்ந்திருந்தார். நான் பின் இருக்கையில் சாய்ந்தபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“என் பையன் இப்பதான் சுவரைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறான்!"

"என் பையன் என்னைப் பார்த்ததும் ஒடி வந்து காலைக் கட்டிக்குவான்!"

“என் பையனுக்கு 'ப்' வராது. அபான்னுதான் கூப்புடுவான்"

"என் பையனுக்குப் போனவாரம் காய்ச்சல் வந்து ரொம்பப்படுத்திடுச்சு"

"என் பையனுக்கு அடுத்த மாசம் மொட்டை போட்டுறலாம்னு இருக்கேன். முடி இப்பவே கண்ணை வந்து மறைக்குது “

“என் பையனுக்கு இப்பதான் மேல மூணு பல்ல முளைச்சிருக்கு “


இருவரும் மாறிமாறித் தம் மழலைச் செல்வங்களின் மகாமியங்களைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்தார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை . குழந்தைகள் என்று இருந்தால் ஆடவும் பாடவும் அழவும் சிரிக்கவும் தானே செய்வார்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று இவர்களிருவரும் இப்படி மாறி மாறி மாய்ந்து போகிறார்கள்? ஒன்றும் விளங்காமல் கேட்டுக் கொண்டு வந்தேன். இத்தனைக்கும் இரண்டுபேரும் அலுவலகத்தில் இருக்கும்போது இறுக்கமான முகத்துடனும், குறைவாகப் பேசுபவர்களாகவுமே காணப்படுவார்கள் . எனக்கு அலுத்துப் போகவும் ஜன்னல் வழியாக, ஓடிக் கொண்டிருக்கும் சாலையோரக் காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அவர்கள் பின் இருக்கையில் நானொருவன் இருப்பதையே மறந்து போனவர்களாகப் பயணம் நெடுகிலும் தம் பேச்சிலேயே மூழ்கியிருந்தனர்.

அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் கழித்து மேற்சொன்ன சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய தருணம் எனக்கு வாய்த்தது. அப்போது எனக்கு திருமணமாகி மகன் பிறந்திருந்தான். தள்ளாடி நடக்கத் துவங்கியிருந்த அவனது அர்த்தமற்ற சொற்பிரயோகங்களுக்கெல்லாம் கவிப்பொருள் கண்டு பரவசமடைந்து கொண்டிருந்தேன். 'குழலினிது யாழினிது என்பர்' என்ற வள்ளுவனுடய வரிகளின் அர்த்தம் அதன் மொத்த பரிமாணத்துடனும் எனக்குள் அப்போதுதான் இறங்கியது. குறைந்தது ஐந்தாறு குழந்தைகளையேனும் பெற்று, கொஞ்சி மகிழ்ந்திராத பட்சத்தில் இந்தச் சொற்றொடர் அவரிடத்தே பிறந்திருக்க வாய்ப்பில்லை. அள்ளிச் செறுகிய கொண்டையும், மீசைதாடியுடன் ஒற்றையாய்ச் சுற்றிய அங்கவஸ்திரமுமாய், ஒரு துறவிக்கோலத்தில் அவரை வரைந்த சித்திரக்காரனிடத்தே எனக்கு மனக்குறைதான்.

நம் குழந்தையின் மீதான தாயின் பரிவும் பாதுகாப்புணர்வும் அனைத்து ஜீவராசிகளுக்குமான பொதுவான இயற்கை நியதி.தந்தையின் உணர்வு அப்படிப்பட்ட ஒன்றல்ல . குழந்தையின் மீதான தந்தையின் பாசம் முரண்களும் புதிர்களும் நிரம்பிய ஒன்று என்றாலும், தன்சுயத்தின் நீட்சியாய் தனது கைகளில் தன்னுடைய குழந்தையைக் காணும் ஒரு ஆண் முதலில் சற்றுக் கலவரமடைவது என்னவோ உண்மைதான் என்றாலும் தான் என்னும் உணர்வை ஓரளவேனும் அழித்துக் கொள்ளும்போதே அவன், தன்னின் ஒரு பகுதியாக அக்குழந்தையை ஏற்றுக்கொண்டு கொஞ்சத் துவங்குகிறான். அதுகாறும் ஆண் என்ற இந்த ஜந்துவை சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பியும் அஞ்சியும் அருவருத்தும் தன் விருப்பு வெறுப்புடன் எதிர்கொண்டுவந்த பெண், தாயான பிறகே குழந்தையை முன்னிட்டுத் தன் மெய்யான அதிகாரத்தைக் கைப்பற்றுகிறாள் . தான் பெற்றெடுத்து தன் கைக்குள் வைத்திருக்கும் குழந்தையை விடவும் எவ்வகையிலும் மேம்பட்ட ஒன்றல்ல ஆண் என்கிற அசட்டு ஜன்மம் என்கி்ற தன்நிச்சயம் பிறந்தவுடன் கணவனை, அவனது அதிகார ஆர்ப்பாட்டங்களை அவள் சற்றும் சட்டைசெய்வது கிடையாது. ஆக ஒரு ஆண் தன் விட்டேற்றியான மனோபாவத்தை விட்டொழித்துக் குடும்பம் என்ற அமைப்புக்குள் தன்னை முழுவதுமாகப் பொருத்திக்கொள்வது அவன் தந்தையாகத் தன் பொறுப்பைஉணரும் போதுதான்



பிரியத்தை வெளிப்படுத்துவதற்குத் தொடுதலைக் காட்டிலும் சிறப்பான வழிமுறை வேறில்லை. தம் அன்பிற்குரியவர்களைக் காணும்போது வரவேற்கும் விதமாகக் கைகனைப் பற்றிக்கொள்ளுதல், மார்புறத் தழுவிக் கொள்ளுதல், உச்சிமுகர்தல், கன்னத்தில் முத்தமிடுதல் போன்ற செயல்கள் மொழி , இன பேதமின்றி உலகெங்கிலும் பொதுவான வழக்கமாகவே காணப்படுகிறது. மேலும் வீட்டில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடத்தே செல்லுபடியாகக்கூடிய ஒரே மொழியும் அதுதான். எனில் குழந்தைகளைக் கொஞ்சும் போது சொல்லவேத் தேவையில்லை. அத்தனை இலக்கண வழுவுகளுக்குப் பிறகும், மொழி அதன் உச்சபட்ச உணர்வைத் தருவது அவ்விடத்தில்தான் என்றாலும், அள்ளி எடுத்து ஆரத்தழுவாவிட்டால் அது கொஞ்சலே இல்லை. குழந்தையின் மேனியைத் தழுவுவதால் கிடைக்கும் அவ்வின்பத்திற்கு இணை வைக்கக்கூடிய பிறிதொரு இன்பம் இவ்வையகத்தில் இல்லை. மெய் தீண்டல் எனப்படும் அவ்வின்பம் தன் குழந்தைகளை முன்னிட்டு ஒரு ஆணுக்குக் கிடைக்கப்பெறுவது மிக குறுகிய காலமே . அது பற்றிய ஒரு நுட்பமான சித்திரத்தைத் தருகிறது பின்வரும் புறநானூற்றுப்பாடல்,

படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ்செல்வர் ஆயினும், இடைபடக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி
இட்டும், தொட்டும். கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே

பாடியவர் - பாண்டியன் அறிவுடை நம்பி
திணை- பொதுவியல்
துறை - பொருண்மொழிக் காஞ்சி

குறுகுறுவென்று நடந்து தன் சிறுகை நீட்டி நெய் கலந்த சோற்றினைக் கலத்தினின்றும் அள்ளிஎடுத்து வாயிலிட்டும். மண்ணில் இறைத்தும். மேனியில் பசி கொண்டும். அதே கையால் பெற்றோரைக் கட்டிக் கொண்டும் தம்மைப் பெற்றவர் எண்ணிப் பார்க்கும்படியான பல செயல்களையும் செய்யும் குழந்தையைப் பெறாதவர்கள். பலரோடு சேர்த்து விருந்துண்ணும் பெருஞ்செல்வராயினும் அவர்களுடைய வாழ்க்கை வீணானதே என்கிறது இப்பாடல்

குழந்தைக்குத் தன் உடம்பு பற்றிய பிரக்ஞை வரும் வரையிலேயே தன்னைப் பிறர் தொட அனுமதிக்கும் அதன் பின்னர் நீங்கள் மேலேபடாமல் எட்டிநிற்க வேண்டியிருக்கும் . அந்த தருணத்திலிருந்தே தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி தொடங்கிவிடுகிறது. தாய்க்கும் மகனுக்குமான இணக்கமும் புரிதலும் வேறு வகையிலானது. அது ஆயுள் பரியந்தமும் நீடித்திருக்கும் . ஆனால், மகன் வளரவளரத் தந்தை பின்வாங்க வேண்டியிருக்கிறது. இருவருக்கும் இடையிலான அந்தக் கபடமான இடைவெளியே மரியாதை எனப்படுகிறது. அந்த இடைவெளி எதேனும் ஒரு காரணம் பற்றிக் குறைவுறும்போது தந்தைக்கும் மகனுக்குமான முரணும் வளரத் தொடங்கிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது என் அறைத்தோழனாக இருந்தவன் கிரி. என்னைக்காட்டிலும் ஒரு வருடம் இளையவன், நயத்தக நாகரீகத் தோற்றமும் அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத முரட்டுக்குணமும் கொண்டவன் . சகநண்பர்கள் பலரும் அவனுடன் பழகவிரும்பிய அளவிற்கு அவனைக்கண்டு அஞ்சவும் செய்தனர். சிறிய விஷயங்களுக்காகக் கூட சச்சரவில் இறங்கிவிடுவது அவனது சுபாவமாக இருந்தது. துவக்கத்தில் என்னுடனும் பல உரசல்கள் இருந்தன என்றாலும், விரைவிலேயே நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். நான் இயல்பிலேயே அதிகம் பேசாதவன். ஆனால் அவனோ நேரெதிர் அவனைப் பற்றிய எந்த ரகசியமும் எனக்குத் தெரியாததல்ல . அத்தனை விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறான் அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியம்மா, அக்கா மாமா, தங்கையென ஆளுக்கொரு திசையில், திசைக்கொரு மனப்போக்கில் சிதறிக்கிடந்த குடும்பத்தில் பாட்டியிடம் வளர்ந்தவன் அவன் .

தன்தந்தையைக் குறித்து எள்ளளவும் அவனுக்கு மதிப்பில்லை. எப்போதும் ஏகவசனத்திலேயே குறிப்பிடுவான். அவன் அவ்வாறு முதலில் பேசக்கேட்ட போது திகைத்துப்போனேன் . நான் என்னுடைய வழக்கமான உபதேசத்தொனியில் தந்தை மீது இருக்கவேண்டிய மரியாதை குறித்து பிரசங்கிக்கத் துவங்கினேன், "மூடு பெருசா பேசவந்திட்ட ! சண்டைபோட்டு அம்மாவோட கன்னத்தில் அறைந்து படுக்கையில் தள்ளிவிட்டு வந்து, அடுப்பில் எரியும் நெருப்பை எடுத்து சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கும் மகனிடம் பணத்தைக் கொடுத்துப் பாட்டில் வாங்கிகொண்டு வரச்சொல்லிக் குடித்த அப்பன் உனக்கு வாய்த்திருந்தால் நீயும் இப்படித்தான் பேசுவாய் “ சினத்துடன் கூறினான். இத்தனைக்கும். அவன் தந்தையும், தாயும் காதல் , கலப்புமணம் செய்தவர்கள் என்று சொல்லியிருக்கிறான். அதற்குப் பிறகான வருடங்களில் தந்தையை உள்ளூர வெறுக்கவும் எதிர்க்கவும் செய்த தனயர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் முரண் என்பது பாலியல் தன்மையிலான சிக்கலை அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் பிறகு படித்து தெரிந்து கொண்டேன்

சமீபத்தில் என் மூத்தநண்பரும் தமிழ்அறிஞருமான ஆர் . கேயுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது குரு சிஷ்ய பாவம் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்னது எனக்கு மிகவும் வெளிச்சத்தைத் தருவதாக இருந்தது. குரு -சிஷ்ய உறவு என்பதும் ஒருவகையில் தந்தை மகன் உறவு போன்றதுதான் . குருவின்மீது துவக்கத்தில் எந்த அளவுக்கு சிஷ்யனுக்கு பக்தியும், மதிப்பும் இருக்கிறதோ அதே அளவிற்குப் பின்னாளில் பகையும், வெறுப்பும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் . ஏதோ ஒரு கட்டத்தில் தன்சிஷ்யனுக்கு இனிமேல் தான் தேவையில்லை என உணர நேரிடும் குருவிற்கு வரும் குரோதத்தை அவரால் வெகுகாலத்திற்கு கட்டி வைத்திருக்க முடியாது. குருவை, தந்தையை அவர்களுடைய ஆளுமையை, அதிகாரத்தை அழித்தால் அல்லது தாண்டினால் மட்டுமே தனக்கு வாழ்க்கை என அறியவரும் சீடனும் மகனும் மூர்க்கமாக எதிர்கொண்டு தாக்கத்தொடங்குகிறார்கள். இந்த அழிவு அல்லது மீறல் என்பது சிலபோது யதார்த்த தளத்திலும், பலபோது குறியீட்டுத் தளத்திலும் நிகழ்ந்தேறும். தந்தையைக் கொலை செய்துவிட்டு, சிறையிலடைத்துவிட்டு அரசு கட்டிலேறிய மகன்களைச் சரித்திரத்தின் பக்கங்களில் நாம் சாதாரணமாகக் காணமுடியும். மாறாக தந்தையைவிட அதிக வெற்றிகளைப் பெறவேண்டும். பெரிய கோவில்களைக் கட்டவேண்டும். அகலமான ஏரிகளை வெட்ட வேண்டும் என்று இன்னொரு வகையில் தந்தையரை விஞ்சத் தவித்த தனயர்களையும் பார்க்கலாம். உண்மை தான் மகன் பிறந்து தோளுயரம் வளர்ந்து என் முன்நின்று கேள்வி கேட்கத் துவங்கும்போதுதான் எனது தந்தையை நான் உண்மையாகவே புரிந்துகொள்ளத் துவங்குகிறேன் இந்த தேசத்திற்கே தந்தையாக விளங்கிய காந்தி, தன் சொந்தமகன் ஹரிலாலிடம் அப்பாத்திரத்தை வகிக்க இயலாமல் தோற்றுப்போனார். தந்தையைப் பற்றிய காப்காவின் எதிர்ப்புணர்வுதான் அவருடைய எழுத்துக்களுக்கே அடிப்படை என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


முன்பு முன்னேற்றப் பதிப்பகம் கெட்டி அட்டைப்பதிப்பாக வெளியிட்ட இவான் துர்கனேவின் 'மூன்று காதல் கதைகள்' என்ற குறுநாவல் தொகுதி வெகுகாலம் வரையில் NCBHல் மலிவு விலையில் கிடைத்து வந்தது. இப்போது பிரதிகள் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை . அதில் 'முதல் காதல்' என்றொரு குறுநாவல், பதின்பருவத்தில் அப்போதுதான் நுழைத்திருக்கும் மகன், பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்திருக்கும் இளம்சீமாட்டி மீது மையல் கொள்கிறான். அவள் இச்சிறுவனைவிடவும் சிலஆண்டுகள் மூத்தவள், இவனோடு வாஞ்சையுடனும், விளையாட்டுத்தனத்துடனும் பழகுகிறாள். ஒருநாள் தொப்பி அணிந்து, முரட்டுத்தோல் காலுறைகளுடன், சேணம் பூட்டிய குதிரைமீது, முள்பதித்த சாட்டையை வீசியபடி விரைந்து செல்லும் தந்தையைத் தொலைவிலிருந்து காண்கிறான். அக்குதிரையில் அவரை அணைத்தபடி களிகொண்ட சிரிப்புடன் போகிறவள் அந்த இளம் சீமாட்டிதான். இக்கதையை முதன்முறையாக எனது பதினேழாவதுவயதில் நான் படித்தபோது , அடைந்த உணர்வு உயர்அழுத்தம் கொண்ட மின்கம்பி ஒன்றினை தொட்டது போலிருந்தது.

குடும்பஅமைப்பில் உள்ளார்ந்து உருவாகிவரும் வன்முறைக்கு அதிகமும் ஆளாகிவருவது குழந்தைகள்தாம் . தம்மை நாகரீகமடைந்துவிட்ட சமுதாயமாக கூறிக்கொள்ளும் ஐரோப்பிய, அமெரிக்க சமூகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல . கட்டுப்பாடு, ஒழுங்குவிதிகள் என்கிற பெயரால் பல தந்தையர்கள் தம்பிள்ளைகளின் பால்யத்தின்மீது கண்மூடித்தனமான வன்முறையை செலுத்துபவர்களாகவே இருக்கிறார்கள் . யூமா வாசுகியின் ‘ரத்தஉறவு’ நாவல் இத்தகையதொரு குரூரமான கொடுமையின் ஆவணப்பதிவு போல விளங்குகிறது. இதனுடைய பலபக்கங்களை நடுங்கும் மனதோடுதான் நாம் கடந்துபோக முடியும். 'தாய்' என்ற தொல்படிமம் மொழியும் இலக்கியமும் தோன்றும் முன்பே மனித ஆழ்மனதில் பதிந்து போனது. உலகின் எல்லா மொழிகளில பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அவளைக் குறித்து எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தந்தையைப் பற்றி எழுதப்பட்டவை மிகச் சொற்பமும் விதிவிலக்கானவைகளுமே ஆகும். குறிப்பாக நவீனத்துவ இலக்கிய படைப்புகளில்தான் தந்தைக்கும் மகனுக்குமான முரண் குறித்து அதிக பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

சுந்தரராமசாமியின் படைப்புகளிலும் மகனின் மீது கட்டுப்பாடும் அதிகாரமும் செலுத்துகிற தந்தை வருகிறார். அந்த அதிகாரத்தைக் குறித்து மகனிடம் கேள்விகள் எழும்போதும்கூட அது எவ்விடத்திலும் தந்தையின் மீதான வெறுப்பாக மாறுவதில்லை. எனக்குத் தெரிந்த வரையில் முழுக்கமுழுக்க தந்தையைப் பற்றிய சித்திரங்கள் மட்டுமே அடங்கிய நூல் என்று சுதேசமித்திரன் எழுதிய ‘அப்பா' கவிதைத்தொகுப்பை கூறலாம் .ஆனால் , அது பெரிதும் நேர்மறையான சித்திரிப்புகள் கொண்டது. பா.சத்தியமோகனின் சில கவிதைகளிலும் இத்தகைய ஆளுமைகொண்ட தந்தை தென்படுகிறார். என்றாலும், தமிழ் நவீன கவிதையில் தந்தை மகன் உறவை முன்னிறுத்திக் கூர்மையாக எழுதப்பட்ட ஒருகவிதை சுகுமாரனின் ‘கோடைகாலக் குறிப்புகளில்’ வருகிறது.



அப்பா

உன்னுடைய மனித முகம் கழன்று
கழுதைப் புலியாகி நெடுநாட்களாயிற்று
எனக்கு மூலம் நீ தான்
எனினும்
பறவைகள் ஒருபோதும் முட்டைக்குத் திரும்புவதில்லை

என் சிறகுகளை அறுக்க வாள் ஒங்கியவன் நீ
நான் வாள் முனையில் கால் உதைத்துப் பறக்கத் தொடங்கியவன்

என் சங்கீதத்தின் ஊற்றை அடைத்தவன் நீ
எனினும்
ரத்த துடிப்புகளுக்கு இடையில் அது எதிரொலிக்கிறது
உன் போதையும் புறக்கணிப்பும் பொறுப்பின்மையும்
நிராதரவாய் உன்னைக் கொல்லலாம் ஒரு நாள்
நான் வெறும் வழிப்போக்கனாய்ப் போகலாம்
எனக்கு உன்னிடம் பகையில்லை
அன்பைப் போலவே

இக்கவிதையின் முதல் வரியைப் படித்ததும் முகத்தில் அறைவாங்கியது போலத் திகைத்து நின்றேன். காரணம், இன்றளவும் தந்தையின் மீதான எனது மதிப்பு பக்திபூர்வமானது. தன்னை வைத்தே உலகை அளக்கும் அங்குலப்புழுவைப் போல இருந்த என்னைக் கண்திறக்கச் செய்வித்தவை இதுபோன்ற இலக்கிய ஆக்கங்களே வெறுப்பைக்கூட ஒரு எதிர்வினை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இக்கவிதையின் இறுதியில் வரும் அன்பைப் போலவே வெறுப்பும் இல்லை உன்னிடம் எனக்கு என்னும் போது கூடும் பற்றற்ற தன்மையின் உக்கிரம் தணிக்கமுடியாதது.

முதலில் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் சித்திரிப்பதுபோலப் பெறற்கரிய செல்வமாக, ஒருவனின் வாழ்வை அர்த்தப்படுத்தும் அரும்பொருளாகப் பிறக்கும் ஒரு குழந்தை எந்த வயதிற்குப்பிறகு, சுகுமாரனின் இக்கவிதையில் குறிப்பிடப்படுவது போலத் தந்தையின் விரோதத்திற்குரியவனாகிறான் ?அன்பு எப்புள்ளியிலிருந்து அதிகாரமாக மாறுகிறது? பயம் எக்கணத்திலிருந்து வெறுப்பாக வளர்கிறது ? இக்கேள்விகளுக்கெல்லாம் அறுதியான பதில்கள் என்று எதுவும் கிடையாது எனினும், படைப்பின் வெளிச்சத்தைக் கொண்டு வாழ்வை அணுகுவோம் எனில், பல சமயங்களில் நாம் காண்பிக்க நேரிடும் இந்த அதிகாரத்தினுடைய, வெறுப்பினுடைய கூர்மையை ஓரளவேனும் முனை மழுங்கச் செய்யலாம்.

No comments:

Post a Comment