Thursday 29 November 2018

பிஹாரியின் 'சதாசாயி -ஓர் அறிமுகம்

பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரைக்குமான ஹிந்திக் கவிதைகள் சதி கால(அ) சிருங்கார கால கவிதைகள் என அழைக்கப்படுகின்றன. மிகப் பெரிய வீச்சு கொண்டிருந்த இந்திய பக்தி இலக்கியத்தினின்றும் ஒரு கிளையாகப் பிரிந்து காதலுணர்வை முதன்மையாகப் போற்றி பாடிய துளசி, சூரி,நந்ததாசர், ரஹூம், கானாதந்தர் போன்றவர் வரிசையில் முக்கியமானவர் பிஹாரி ஆவார்.

1595-ல் குவாலியரில் பிறந்த பிஹாரி தனது ஆரம்பக் கல்வியை சமஸ்கிருத அறிஞரான தனது தந்தையிடம் கற்றார். தாயின் மறைவிற்குப் பிறகு பந்தல் கோட் மாகாணத்திலுள்ள அர்ச்சாவிற்கும் அதன்பின் பிருந்தாவனத்திற்கும் பிஹாரியின் குடும்பம் இடம் பெயர்ந்தது. தனது திருமணத்திற்குப் பிறகு மனைவியுடன் மதுராவிற்குச் சென்ற பிஹாரி அங்கே தனது ஆன்மீக குருவான தாஹரிதாசரைச் சந்திக்கிறார். அவர்மூலம் மொகலாய இளவரசன் ஷாஜஹானின் அறிமுகம் கிடைக்க ஆக்ராவிற்குச் செல்கிறார். மொகலாய அரசவையில் தனது பாடல்களுக்கான அங்கீகாரத்தையும், வெகுமதிகளையும் பெற்றதோடு பிஹாரி உருது மற்றும் பெர்சிய இலக்கியங்களிலும் பரிச்சயம் பெறுகிறார். ஜஹாங்கீரின் மரணத்திற்குப் பிறகான அரசியல் சூழல் காரணமாக திரும்பவும்  மதுராவிற்கு வந்த பிஹாரி, மன்னன் ஜெயசிங்கனின் அழைப்பை ஏற்று அம்பர் சமஸ்தானத்திற்குச் சென்றார். அங்கு தனது புகழ்பெற்ற நூலான 'சதாசாயி'யை எழுதித் தொகுத்தார். 'சதா' என்றும் பொருள்படும். தொகுப்பிலுள்ள பாடல் ஒவ்வொன்றும் இரண்டு வரிகளைக்கொண்ட பாக்கள் ஆகும். தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு பிருந்தாவனத்திற்கு திரும்பிய பிஹாரி தனது 69 வயதில் 1664-ல் மரணமடைந்தார்.

 ரீதிகால கவிஞர்கள் பக்தியிலிருந்து புலணுணர்வுகளுக்கும் அகமனதிலிருந்து புற அழகின் வசீகரத்திற்கும் தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டவர்கள் இயற்கையின் அழகு. பருவகாலங்கள், இசையின் இனிமை ‍போன்றவை குறித்தும் பாடியிருந்தாலும் அவர்களுடைய பெரும்பாலான பாடல்கள் இயற்கையாகவே காதல்,கலவி, வசீகரிக்கும் பெண்களின் அழகு போன்ற சிருங்கார ரசத்தின் அடிப்படையான உணர்வுகளைச் சுற்றியே பாடப் பெற்றுள்ளன.

பிஹாரி காதலை மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் போற்றுகிறார். அது அவருக்கு வெறும் காமம் சார்ந்ததல்ல. பொங்கிப் பெருகும் இளமையின் விழைவின் முன் மற்ற அனைத்துமே நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவையே என்று கருதினார். பிஹாரி காதலைத் தூய்மையான, ஆரோக்கியமான உணர்வாகப் போற்றியவர்.'நுட்பமான மனநிலையுடைய மேலான ஞானமுடையவர்களுக்குக் காதலுணர்வும், அழகும் ஆயிரம் முறைகள் மூழ்கியும் ஆழம் காண முடியாத கடலைப் போன்றவை. ஆனால் அறிவேதுமற்ற முட்டாள்களுக்கோ அவை சுலபமாக தாண்டிவிடலாம் எனத்தோன்றும் ஆழமில்லாத குட்டை மட்டுமே என்று கூறும் பிஹாரி காதலையும், அழகையும் ஓர் எல்லைக்கு மேல் உயர்த்தி அவற்றை பண்பற்ற உணர்வுகளிலிருந்து பிரிந்து உன்னதமான அனுபவமொன்றிற்கு நகர்த்திவிடுகிறார் அவரது காதலுக்கு எல்லைகள் ஏதுமில்லை அது போற்றுதல், தூற்றுதல் இரண்டிலிருந்தும் விடுபட்டது.

பொதுவாகவே சிருங்கார காலக் கவிஞர்கள், பருவமெய்திய பெண்களின் நீள்விழிகள், ஓரப் பார்வைகள், முகிழ்க்கும் மார்புகள். சிறுத்த இடை, இடுப்பில் விழும் மடிப்புகள் என ஆவல் ததும்ப பாடுபவர்கள் பிஹாரியிலும் இத்தகைய சித்தரிப்புகள் நிறைய உண்டு தவிர சோம்பல், ஆவல், கிளர்ச்சி, இனிமை. பெருமிதம், கர்வம், துயரம்,விரக்தி என வேறுவேறு சூழ்நிலைகளில் மாறுபட்ட மனநிலைகளையுடைய பெண்களின் வர்ணணைகளை பிஹாரி திறமையுடனும் சுருக்கமாகவும் முடிவுற்ற இனிமையுடன் சித்தரித்திருக்கிறார்.

பெண்களைப் பற்றிய வர்ணணைகளில் முகத்திற்கு நிலவு, கண்களுக்கு மான், மீன், குவளை, புருவத்திற்கு வில், தொடைகளுக்கு வாழை என மரபான உவமைகளையே பிஹாரி பயன்படுத்துகிறார். போக, ஹிந்திக் கவிஞர்கள் வழக்கமாகப் பின்பற்றும் பெண்களை உச்சி தொடங்கி உள்ளங்கால்வரை வருணிக்கும் உத்தியை பிஹாரியும் கடைப்பிடித்திருக்கிறார். பிஹாரியின் வர்ணனைகளின் சிறப்பு அதன் சுயத்தன்மையிலில்லை மாறாக அவரது புத்திசாலித்தனமான பிரயோகங்களிலேலே இருக்கிறது எனலாம்.

கோடை,வசந்தம்,கார்,பனி முதலிய இந்தியப் பருவ காலங்களும் பூக்கள், செடி கொடிகள் பற்றிய வர்ணனைகளும் பிஹாரியின் பாடல்களில் இடம் பெற்றிருந்தபோதிலும் வெகு அரிதாகவே இயற்கை இயற்கைக்காகவே பாடப் பெற்றிருக்கிறது மற்றபடி இயற்கை மணவறைத் தோழியாகவே அவர் கவிதைகளில் இடம்பெறுகிறது காதலும், அழகுமே மணமக்களாக முதலிடம் பெறுகின்றன. பிஹாரி ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவராக இருந்திருந்தாலும் சதாசாயியில் அவர் புனைந்துள்ள குறைந்த எண்ணிக்கையிலான பக்திப் பாடல்களிலும் தனியான சமயநோக்கு ஏதும் தென்படுவதில்லை. என்றாலும் கிருஷ்ணன் அவரது இஷ்ட தெய்வம் எனத் தெரிகிறது.

சில அறிஞர்களின் பார்வையில், பிஹாரியின் பாடல்கள் ஆழம், ஆன்மாவின் தெளிவு, அர்த்தச் செறிவு முதலிய அம்சங்களில் குறைவுபட்டதாகத் தோன்றுகின்றன. அவை புதுமையானதாகவோ சுயத்தன்மையுடையதாகவோ அல்லாமல் பல தருணங்களில் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக கையாளும் திறமையினால்தான் சிறப்பு பெறுகின்றன என்று அவ்வறிஞர்கள் கூறுகின்றனர். அவற்றில் தன்னியல்போ, நினைனைக் கிளர்த்தும் அம்சமோ, உணர்வு வயப்பட்ட சிந்தனைகளால் அடையப் பெறும் மேன்மையோ இல்லை. எனவே இப்பாடல்கள் களங்கமற்ற காதலின் உன்னத நிலைக்கு உயருவதற்குப் பதிலாக வெறும் சிற்றின்பப் பாடலாகவே நின்றுவிடுகின்றன என்றும் அவ்வறிஞர்கள் குற்றம் சாட்டுவர்.

வெளிப்பாட்டுத் திறமைகளில் அவருக்குள்ள கட்டுப்பாடு மற்றும் அப்பாடல்களில் அமைப்பாக்கத்திற்கும் அவற்றின் தன்னியல்பின் சமநிலை ஆகிய இரண்டு அசாதாரணமான பண்புகளினால்தான் பிஹாரியின் பாடல்கள் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அதனுடைய பிரகாசத்தையும் சக்தியையும்  இழக்காமலிருக்கிறது. மாயாஜாலக்காரனொருவன் புரியும் தந்திர வித்தைகளாக பிஹாரி தனது வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. மாறாக ஆபரணத்திற்காக முத்துக்களைப் பதிக்கும் நகை வேலைபாட்டுக்காரனைப் போல் கச்சிதமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறார்.

பிஹாரியின் 'சதாசாயி'க்கு அறுபதிற்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன. சமஸ்கிருதம், பெர்சியன், உருது, குஜராத்தி, சமஸ்கிருதநூலான 'ஆர்யசப்தசதி' தெலுங்குப்பாடல்களான 'கதாசப்தசதி'தமிழின் 'அகப்பாடல்கள்'முதலியவற்றோடு பிஹாரியின் பாடல்களை ஒப்புமைப்படுத்தி நாம் வாசிக்க முடியும். இப்பாடல்கள் ஆங்கிலத்தில் Penguin Classic பதிப்பித்துள்ள The Satasai  என்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் கே.பி.பகதூர். பிஹாரியின் பாடல்களிலிருந்து பல்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடல்கள் இங்கே தமிழில் தரப்பட்டுள்ளது.

குறிப்பும், மொழிபெயர்ப்பும் :
 க. மோகனரங்கன்

தோழி கூறியது

பெரியவர்களுடன் அமர்ந்திருந்த
ராதாவைக் கண்டுவிட்ட
குறும்புக்கார கிருஷ்ணன்
என்ன செய்தான் தெரியுமா?
"சரி என்று மட்டும் சொல், அன்பே!
உனது தாமரைப் பாதத்தில் விழவும்
செய்வேன்" என்பதை
குறிப்புணர்த்த தனது நெற்றியை
அல்லி மலர்கொண்டு வருடி நின்றான்.
சம்மதத்தைத் தெரிவிக்க
புத்திசாலி ராதா தன்னுடைய
கண்ணாடி பதித்த மோதிரத்தை
சூரியனுக்கு உயர்த்திப்பிடித்தவள்
தனது கையை
மார்புகளினடியில் மறைத்துக்கொண்டாள்
"சூரியன் குன்றுகளினடியில்
அஸ்தமிக்கும் பொழுதில்
அன்பே! நான் வருவேன்"
என்பதன் அடையாளமாய்.

தலைவன் தன் நண்பனுக்குச் சொன்னது

என்னைக் கண்டவுடன்
ஏதோ வெட்கப்படுவதுபோல்
தனது கைகளை உயர்த்தியவள்
சேலைத் தலைப்பால்
தலையை மூடிக்கொண்டாள்.
வேண்டுமென்றே
அடிவயிறு அதன் மூன்று மடிப்புகளுடன் தெளிவாகத்
தெரியும்படி
பின்
தெருவினுள் திரும்பி மறையும் முன்
அவளது தோழி அறியாவண்ணம்
என்னை வெகுநேரம் ஆவலுடன் நோக்கினாள்.

அவளது தோழிகளில் ஒருத்தி சொன்னது

பலகணியிலிருந்து
காதலர்கள் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டனர்
அவர்களுடைய பார்வைகள்
குறுக்கே கட்டப்பட்டதொரு
கயிறு போலாக
அதன் வழியே
அவர்களுடைய இதயங்கள்
கழைக் கூத்தாடியைப்போல விரைந்தன
ஒன்றையொன்று சந்திக்க.
             
               
தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்கு சொன்னது

ஒர கண்ணாடியின் மீது
ஆழமாக மூச்சுவிடும்போது
அது தெளிவற்றுத் ‍தெரிவதுபோல
நறுமணமிக்க
மஞ்சள் சந்தணப்பூச்சு
அவளது மேனியின்
இயற்கையான பிரகாசத்தை
அதிகரிப்பதற்கு பதிலாக
மங்கச் செய்துவிட்டது.

தலைவன் அவளது தோழியுடம் கூறியது

நீலக்கல் பதித்த
கருப்பு மோதிரத்துடன் ஜொலிக்கும்
இளஞ்சிவப்பு நகத்துடன் கூடிய
அவளது சுட்டு விரலின்
கணநேரத் தரிசனம்
திரிவேணி சங்கமத்தை கண்டு
முக்தியடைந்த பக்தனைப்போல்
என் ஆன்மாவை
பரவசப்படுத்துகிறது.

அவளது தோழி தலைவனிடம் கூறியது

அவளின்
வாசமுடைய
மிருதுவான கன்னம்
அதில் ஒட்டிக்‍கொண்டுவிட்ட
ரோஜா இதழை
வேறுபடுத்தி காண முடியாதபடி
இளஞ்சிவப்பு வண்ணமுடையது

தலைவன் தலைவியிடத்து கூறியது

தொங்குகின்ற உறியில்
தயிர் கலயத்தை வைப்பதற்காக
உனது கரங்களை
உயர்த்தும் போது,
எவ்வளவு அழகாகயிருக்கிறாய்
பார்ப்பதற்கு?
அதை
வைக்கவும் வேண்டாம்
எடுக்கவும் வேண்டாம்
நிற்கும் நிலையில்
அப்படியே இருப்பாய்
அன்பே!
மயக்கமூட்டுமுனது அழகை
பார்த்துப் பார்த்து
தீரும் வண்ணம்.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

பெரியோர்களுடன்
அமர்ந்திருக்கும் கணவன்
தன் குழந்தையை முத்தமிடக் கண்டவள்
தானும் அதற்கு ஏங்கியவளாக
அக்குழந்தையை வேண்டித்
தன்னிடம் அழைத்து பதிலுக்கு
முத்தமிட்டவள்
தணியாத ஆவலில் வேர்த்து நனைய
வேட்கையில் மேனி சிலிர்த்து
ஒரு அர்த்தமுள்ள பார்வையை
தனது கணவனை நோக்கி வீசினாள்.

தலைவன் சொன்னது

ஓர்
மூக்குத்தி வளையத்திலாடும்
முத்தே!
நீ மிகவும் அதிஷ்டசாலி
தாழ்ந்த சிப்பியிலிருந்து
உதித்து வந்த போதிலும்
உன்னால்
அவளது உதடுகளை
அச்சமின்றி தொடமுடிகிறது
உயர்ந்த குடியில்
பிறந்தவன் என்றாலும்
நானொரு முறைகூட
முத்தமிட முடியவில்லை

தலைவன் அவளிடம் கூறியது

சற்று நோக்குதலின் இன்பங்கள்
பரவசமூட்டும் துடிப்புகள்
உணர்ச்சி மிகு தழுவல்கள்
முனகல்கள் சிரிப்புகள்
உரசல்கள் மற்றும் கசங்கல்கள்
இப்படிப்பட்ட கலவிதான்
விடுதலையைத் தருகிறதெனக்கு
வேறு எதைப்பற்றியும் நான்
கவலைப்படுவேனில்லை.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

வார்த்தை ஏதுமின்றி
எண்ணெய் விளக்கை
அணைத்தான்
சம்மதத்தின் அடையாளமாய்

அவளது தோழி சொன்னது

தான் கேட்பதற்கு
என்னிடம் ஏன் ஒளிக்கிறாய்
தோழி!
உனது காதலரின் நெற்றியில்
ஒட்டியிருக்கும் பொட்டை வைத்து
எல்லோரும் ஊகிக்க முடியும்
அவரிடம் உனது ஆடைகளை மாற்றிக்கொண்டு
ஆணாக நீ இயங்கியதை

தோழிகளின் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

அவர்களுடைய
வீடுகளைப் பிரிக்கும் கவரிலுள்ள
துளையின் வழியே தம் கைகளை
ஒருவருக்கொருவர் பற்றிக்கொண்டவர்கள்
இருவரும் சேர்ந்து உறங்கியது போன்ற
ஆனந்தத்துடன் அவ்விரவினை கழித்தனர்

தலைவி தன் தோழியிடம் கூறியது


உறங்குகிறான் என்றெண்ணி
குனிந்தவனை முத்தமிடுகையில்
என் குறும்புக்கார காதலன்
விழித்துப் புன்னகைக்க
வெட்கினேன்
அச்சமேதுமின்றி தன் தோளோடு
அவன் சேர்ந்தணைக்க
எனது பாசாங்குகளணைத்தையும் விட்டுவிட்டு
அவனது கழுத்தை விரைந்து
கட்டிக் கொண்டேன்

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் 
சொன்னது

தன் காதலனின் மார்பில்
தலைவைத்துதத் துயின்றவன்
அவன் வேறுபெண்ணோடு
உறவு கொள்வதாக
கனவு கண்டு விழித்ததும்
அவனுடன் கோபித்துக்கொண்டு
முதுகை காட்டியவாறு திரும்பிக் கொண்டான்.

தலைவி தன் தோழிக்கு கூறியது

தான் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
அதிக அழகாகத் தெரிகிறார் அவர்
சாகசமிக்க நீச்சல் வீரரைப்போல
எனது பார்வை
அவரது அழகின் பெருங்கடலில்
மீண்டும் மீண்டும்
தாவி மூழ்குகிறது
ஆனால் அதன் ஆழத்தை
அது ஒருபோதும் தொட முடியவில்லை

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குக் கூறியது

அவளின்
நெற்றியை அலங்கரிக்கவேண்டி
திலகமிடுவதற்காக
அவளது முகவாயை
உயர்த்தியவன் கைகள்
உணர்ச்சிமிகுதியால் நடுங்கிட
அதை தேர்செய்ய முடியவில்லை அவனால்
இப்போது
அந்த கோணலான அடையாளத்தைக்
கொண்டு
பெருமிதத்தோடு அவள் போகிறாள்.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது

அவளுடைய காதலன்
அங்கிருக்கும்போதெல்லாம்
அவனுடன் கண்ணாமூச்சி விளையாட
அலுப்பதேயில்லை அவளுக்கு
ஒவ்வொருமுறை
ஒளிந்துகொள்ளும் போதும்
ஒருவரைஒருவர் தொடும்போதும்
உணர்ச்சிமிகுதியால்
தழுவிக் கொள்ள முடியுமே!


தலைவி கூறியது

அன்பிற்குரிய கிருஷ்ணனின்
வருகையை முன்னறிவிப்பதுபோல்
எனது வலதுதோள் துடிக்கிறது
அதற்கு நான்
வெகுமதி அளிப்பேன்
அவன் வந்தால் தழுவிக்கொள்ளும்போது
எனது இடதுகையை தூரவிலக்கிவிடுவேன்.

அவன் தனது தோழிக்கு சொன்னது

ஏன்
எனக்கு மாத்திரம்
உபதேசிக்கிறாய்?
கிருஷ்ணனின் குழலிலிருந்து புறப்படும்
அந்த மந்திர இசையை
கேட்ட மாத்திரத்தில்
தமது குடும்ப கெளரவத்தை
காற்றில் பறக்கலிடாதவள்
கோகுலத்தில்
எவளிருக்கிறாள்?

தலைவன் அவளது தோழிக்கு சொன்னது

காட்டில்
பூக்களை சேகரிக்கும்போது
உச்சியிலிருக்கும் மலர்களை பறிப்பதற்காக
அவள் தனது கைகளை உயர்த்துகையில்
கச்சையிறன்றும் ததும்பி நின்னி
மார்புக் காம்புகளின் மீது
எனது பார்வை நிலைத்தது
நழுவி விழுந்த
சேலைத் தலைப்பினூடே
அவளது அழகிய தோள்கள் வெளிப்பட
இடுப்பிற்கு மேல்
மூன்று மடிப்புகளை கண்ட மாத்திரத்தில்
என்னிதயத்தை
அவளிடம் இழந்துவிட்டேன்
எப்போதைக்குமாக.

தலைவி தலைவனிடம் கூறியது

வெற்றிலையின் சிவப்பு
உதடுகளை பார்ப்பதற்கு அழகாக்குகிறது
விளக்கின் மை
கண்களுக்கு இனிமை தருகிறது
என்பதுபோன்ற
ஒன்றிற்கொன்று பொருந்திப் போகிற
விஷயங்களை எல்லோருமே அறிவார்கள்
ஆனால் அன்பரே!
உமது புருவங்களில்
வெற்றிலைக் கரையும்
உதடுகளில் விளக்கு மையும்
எப்படி வந்தது?

அவளது நம்பிக்கைக்குரியவள் சொன்னது

தோழி!
எத்தனை முறை உன்னிடம் கூறியிருக்கிறேன்?
படுக்கையில்
காதலரிடம் கோபித்துக்காண்டு
முகத்தை திருப்பிக் கொள்ளாதே என்று.
தலையணை அருகே
தூவியிருந்த ரோஜா இதழ்கள்
வழவழப்பான உனது கன்னத்தை
கீறிவிட்டதே!

தோழி தலைவியிடம் கூறியது

மழையிங்கு
எல்லோர் இதயத்தையும் வேட்கையால்
நிரப்புகிறது.
மிகுந்த பிடிவாதமுடைய பெண்ணும்கூட
இப்போது
பிணக்கை காத்துநிற்க முடிவதில்லை
தோழி!
இன்னமும் நீ ஊடி நிற்பதில்
பயன் எதுவுமில்லை.
அப்படிப்பட்ட பிரிவுகள் தளர்வதால்
கட்டில் கயிற்றின் முடிச்சுகள்
இறுகும் பருவமிது.

தோழி தலைவிக்கு கூறியது

அடி, முட்டாள் பெண்ணே!
சேலைத் தலைப்பால் நீ
துடைத்தெடுக்க முனைவது
சுண்ணாம்பின் கறையல்ல
அது
உன் மூக்குத்தியில் பதிந்துள்ள முத்து
உதட்டின்மீது உண்டாக்கும்
மினுக்கம்தான்.

தலைவன் கூறியது

அவளது
கூர்ந்த மார்பகங்களில்
ஏற முயன்று களைத்துப்போன
என் பார்வை
கொள்ளையிடும் அவனின் முகத்தழகை
காணத்தவித்தது
ஆனால் இடையில்
கன்னக்குழியில் தடுக்கிவிழுந்து
அதிலேயே சிக்கிக் கொண்டது.

தோழிகளில் ஒருத்தி மற்றவளுக்குச் சொன்னது


பிரிவின் வேதனையில்
வார்த்தை யொன்றும்
எழுதமுடியாமல்
வெற்றுத்தாளை அவனுக்கு
அனுப்பி வைத்தாள்
அதையும்
கவனமாகப் படிப்பவனைப்போல்
தனக்கு தானே
பாவனை செய்துகொள்கிறான்.

தலைவன் அவளது தோழியிடம் கூறியது

பிரகாசிக்கும்
நட்சத்திர ஒளியை
விடிந்தது என்று தவறுதலாக நினைத்து
நடக்கும் வழிப்போக்கன்
வேடன் வலையில் சிக்கி
குழியில் விழுவதுபோல
அவளது
கண்ணைப் பறிக்கும் பிரகாசம்
என்னை வழிநடத்த
அவளின் புன்னகைச் சுருக்கில்
கழுத்திறுக்கப்பட்டவன்
கிடக்கிறேனிப் போது
அவளுடைய கன்னக்குழிவில்.

அவளது தோழி தலைவனுக்கு கூறியது

ஒரு கவிதையின்
புரிபடாத உட்பொருள்
ஆழ்ந்த வாசிப்பில் மட்டுமே
வெளிப்படுவதுபோல
நறுமணமுடைய
வெண்ணிற ரவிக்கையின் கீழிருக்கும்
மலர்ச்சியுற்று அவளது மார்புகளை
கூர்ந்த நோக்குடைய
கண்கள் மட்டுமே காண்பதற்கியலும்

தலைவன் தன் தோழனிடம் கூறியது

ஒரு
பூஜ்யம்
எண்ணிக்கையை
பத்து மடங்கு கூட்டுமென்பதை
அனைவரும் அறிவர்
ஆனால்
வட்டமானதொரு பொட்டு இட்டவுடன்
கூடும் அவளது அழகிற்கு
எல்லை என்று ஏதுமில்லை

No comments:

Post a Comment